|
உமா மகேஸ்வரி கவிதைகள்
மழைமுன் நேரம்
முதல் துளியில்
வானம் நடுநடுங்கியது.
பதற்றமுற்ற பறவைகள்
ஒண்டின மரங்களில்.
நிச்சலனமான நிலப்பரப்பில்
நீர் ஆரவாரங்கள்
வரைந்தது சாரல்
திரண்ட குளிர்ச் சொட்டில்
வெப்பம் அணையும் ஒலி பெருகிப்
புரண்டு கொள்கிறது
ஈர மண்.
அற்புதங்களின் நிலையாமையைச்
சொல்லும் நோக்கத்தோடு
வளைந்து கிடக்கிறது வானவில்
குழந்தைகளை வாசலுக்கு இழுத்து
நிறங்களை
சுவாசித்து வாழும்
இச்சை கிளப்பி
அருகில் மிதக்கும்
கன மேகங்களைக்
காட்டுகிறது
திண்மைப்பதம் ஏறிய காற்று.
கூடு கட்ட
ஒற்றை வைக்கோல்
கொண்டு பறக்கிறதொரு சிட்டு
அவசரஅவசரமாக.
கூடாத பருவங்கள்
ஒரு
நோக்கமுமின்றி
ஊரும் ரயில்பூச்சிகள்
ஒரு நோக்கமுமில்லையென
உனக்குச் சொன்னது யாரென
வினவுகின்றன
என் இரவின் மீது
நெளியாய் நெளிந்து.
வயல்களில்
கரும்புத் தோகைகள்
கைப்பற்றும் அந்தி
கட்டாத பருவங்களின் முதல் நொடி
பிறப்பின் சிமிழ் திறந்து
வெயிலில் ஒலிக்கும்
குங்குமச் சிவப்பு
மரணத்தை மழுப்பும்
அன்றாடத்தின்
திராவக நெடி
தோல் உந்த
நடு வீதிச் சிற்பங்கள்
நீருற்றுகையில்
ஆணி வேர் காட்டிய
குறுந்செடிகளினுடே
நான் கொன்றதாக நினைத்த
கரு நாகம்
அசையும்
சுருண்டு முடங்கும்
அவ்வப்போது சீறும்
என் அநிச்சைப் பெட்டியிலிருந்து.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|