|
ஜீவன் பென்னி கவிதைகள்
ஊமையன் பற்றி குருடன்...
நிலைக்கண்ணாடியின் ரகசியங்கள் பற்றிய
பிம்பங்களின் உளறல்களை
மொழிபெயர்த்து பெரும் கோப்புகளாக்கிக்
கொண்டிருந்த யென் ஊமை சிநேகிதன்
தற்கொலை செய்து கொண்டான்
ஓர் நடுயிரவு விரைவு ரயிலில் விழுந்து
பிரார்த்தனை யேதுமின்றி அவனது கண்கள்
தானம் கொடுக்கப்பட்டன யெனக்கு
அதற்கு மேல் ஒன்றுமில்லை.
விரிந்திருக்கும் ஆகாயம் பார்க்க
அவனது கோப்புகளை விரித்தேன்.
பேருந்து ரயில் நிலையங்களில்
புல்லாங்குழலூதித் திரிந்த காலத்தில்
எழுதி வைத்திருக்கிறான்
ஒரு தேக்கரண்டியளவு விந்தரையில்லாத
உலகத்திற்கு இலவச இணைப்பான கடவுள்
அவனைப் பார்த்து கேலி செய்து சிரித்ததாக...
முன்னறிவிப்பில்லா என் வருகை
உனது விலாசம் தொலைந்துபோய்விட்டது
உனது வாசல் சேர்க்கும் வலிமைகளில்லை
என் அன்பிற்கும் அதன் மிகையுணர்ச்சிக்கும்
பைத்தியக்காரி தன் சேலையை தானே
உருவியதுடன் முடித்துக் கொண்டேன்
ஒரு தெரு முனையை.
பறப்பதற்கான சூத்திரங்கள் மறைந்த
பறவையாய் வெளி முழுவதும்
சுற்றிக் கொண்டிருந்தேன்.
கடந்து கொண்டிருக்கும் எல்லாப்
பெண்களையும் புணர்ந்து நடக்கிறேன்
உன்னுருவம் சொல்லி வழி கேட்டு
உன் வீடு சேரும்போது
எனதலைச்சல் உனது கதவைத் தட்டியபடி
யிருக்கின்றது என் வருகைக்கு
வெகுமுன்பே.
இல்லாமல் போகும் பிறிதொரு இரவு
வெகு சீக்கிரமே கடந்து போயிருந்தது
அக்கறையின்மையுடனான
இன்றைய வெய்யில் பொழுதுகள்
உன் இலையுதிர்கால நகங்கள்
ஒவ்வொன்றாய் விழத் தொடங்கியிருந்த
இன்றைய மாலையில்
சுவாரஸியங்களேதுமில்லாமல் தேனீர்
அருந்திக் கொண்டிருக்கின்றேன்.
இடம்பெயர்ந்துவிட்ட பறவைகளுடன்
போய்விட்டிருந்த நேற்றைய யிரவு
பற்றி வெவ்வேறு புனைவெழுகையில்
நீ கைகாட்டிய யிடங்களிலெல்லாம்
எங்கிருந்தோ பூக்கள் விழுந்தபடியிருந்தன
நெடும் பகல்பொழுதை வரவேற்றபடி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|