|
பா.தேவேந்திர பூபதி கவிதைகள்
பத்து வயது கனவு
பத்து வயதுக் கனவில் வந்த
பள்ளி மைதானம்
வாலிபத்தில் ஒரு நீர்நிலையானது
கனவில் பிடித்த மீன்களை
கரையில் கிடத்தி எண்ணினேன்
துள்ளிய கனவு ஒன்று
நீருக்குள் மறைய
வயோதிகம் எய்திய நான்
புத்தகப் பையுடன் வீடு திரும்பினேன்
நீர்நிலைகள் மைதானமாகும் கனவு
என் முதுமையின் தவறுஎனில்
புத்தகப்பையில்
எப்படி இவ்வளவு மீன்கள்.
சொல் குறிப்பு ஆவணம்
ஆளுக்கொரு சொல் வைத்திருக்கும் உலகம்
ஒவ்வொரு சொல்லும் ஒரு உடல்
எனது சொல்லை எடுத்துக் கொண்டு போனவன்
சொன்னது அவனது சொல்லை
கேட்டவன் தனது சொல்லை
எனக்கு அனுப்பி வைத்தான்
அந்தச்சொல் ஒரு குப்பைக் கூடையில் வெளியேறுகிறது
கொண்டு போனவன் சொல்லை
குறிப்புகளில் பத்திரப் படுத்தினேன்
எப்படித் தேடினாலும் கிடைக்காது
எனது சொல்
என்பதுதான் தற்போதைய நிம்மதி.
பாடலின் விடுதலை
விடுதலை அடைந்த ஒரு பெண்ணிடம்
காதல் இல்லை என்பதறிந்து
மிகவும் கவலைப்பட்டேன்
நேற்று ஒரு மரத்தடியில்
இனிய பாடலை பாடிக் கொண்டிருந்தவள்
சில முத்தங்களும் மறைக்கப்படாத
ரகசியமும் என்றொரு கவிதை எழுதியவள்
சோதிடம் பார்ப்பதாக வாத்சல்யத்துடன்
என் உள்ளங்கையை கன்னங்களில்
இழைத்தவள்
விடுதலை பற்றிப் பேசும்போது
என் உடல் நடுங்கும் வார்த்தைகளை
எப்படி பிரயோகிக்கிறாள்
என் நினைவுகளிலிருந்து வரலாற்றையும்
கண்களிலிருந்து அழகியலையும்
வேரோடு பிடுங்க அவள் சபதமேற்கிறாள்
நல்லது
எனது கைரேகைகளுக்கும்
அவளது கன்னத்திற்கும்
இடையே விடுதலையாகிப்போன காதலை
மரத்தடியிலிருந்து கவிதையாக்குகிறேன்
தலைக்குமேலே ஒரு புதிய பறவை வந்தமர்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|