தலைவாசல்
ஸஞ்ஜயன்
சோனியா காந்தியால் ஏகமனதாக முன் மொழியப்பட்டு மற்ற கூட்டணித் தலைவர்களால் ஜனநாயக முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அனைவரும் எதிர்பார்த்த படியே குடியரசுத் தலைவர் பதவியில் வெற்றி வாகை சூடி கடந்த ஜுலை 25ம் தேதியன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றார். எதிர்க்கட்சிகள் பல விதமான குற்றச் சாட்டுக்களை அவர் மீது அடுக்கித் தள்ளினார்கள். அவரைப் பற்றித் தனியாக ஒரு இணைய தளம் கூட திறந்து வைக்கப்பட்டது. இது வரை எந்தக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரும் எதிர்கொள்ளாத எதிர்ப்புக்களை திருமதி பாட்டீல் எதிர்கொண்டார். எல்லாவற்றையும் மீறி அரசியல் கூட்டல் கழித்தல்கள் சார்ந்த பெரும்பான்மை அவரை ராய்ஸினா குன்றில் குடியேற்றி விட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவர் சென்னையில் குடியேறி விட்டார். மாணவர்களையும் குழந்தைகளையும் சந்திக்க அதிக நேரம் கிட்டிய மகிழ்ச்சியில் இருக்கிறார் கலாம். தனக்கு சரியான, வசதியான அரசு வீடு ஒதுக்கப்படவில்லை என்ற குறையிலும் கோபத்திலும் இருக்கிறார் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்த பைரோன் சிங் ஷெகாவத்.
ஒரு புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள் எல்லா மக்கள் பிரதிநிதிகளும்.
குடியரத் தலைவராக ஒரு பெண்மணியை முதன் முதலாகத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று எல்லோரும் பெருமைப்படும் நேரத்தில் இன்னொரு பெண்மணியை வயிற்றெச்சல் படவைத்து எதிர்ப்பைக் காட்டும் வண்ணம் விடுப்பில் போகும் படி வைத்திருக்கிறார்கள்.
தற்போது போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் டிஜிபியாகப் பணி புரியும் கிரண் பேடி தன்னை விட இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் குறைந்த அதிகாரியான ஒய்.எஸ்.தத்வால், தில்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப் பட்டதைத் தொடர்ந்து தன்னுடைய கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தும் இருக்கிறார். இப்படித் தன்னை ஒதுக்கி விட்டு தத்வாலுக்கு கமிஷனர் பதவி அளிக்கப் பட்டிருப்பது நீதிக்குப் புறம்பானது என்றும் தான் பெண் என்பதால் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றும் இதை எதிர்த்து சட்டரீதியாகப் போராடுவேன் என்றும் ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளித்து வருகிறார் கிரண் பேடி. அநீதிக்கு எதிராகப் போராடுவதே தன் வாழ்க்கை நெறிமுறை என்றும் அதைத் தீவிரமாகத் தொடருவேன் என்றும் சொல்கிறார்.
கிரண் பேடி மகசேசே விருது பெற்றவர். தில்லி திகார் சிறையில் பல சீர்திருத்தங்களை அமுல்படுத்தியவர். ஐநா சபையில் திறம்படப் பணியாற்றியவர். இவருடைய தன் வரலாற்று நூல் மிகவும் பரபரப்புடன் விற்பனையானது சில ஆண்டுகளுக்கு முன்பு. இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இவருடைய வாழ்க்கையை ஒட்டி மஹா அசட்டுத்தனமாக பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில மிகப் பிரம்மாண்டமான வெற்றியையும் கண்டன.
********
தில்லியின் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மா, கடந்த மாதம் ராஜஸ்தானில் ஒரு சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அஜ்மீ ஷெரீப் தர்காக்குச் சென்றுவிட்டு திரும்பும் போது இந்த விபத்து நேர்ந்தது.
தில்லியின் அருகே முன்ட்கர் என்னும் சிறிய கிராமத்தில் 1943ல் ஒரு சாதாரண ஜாட் குடும்பத்தில் பிறந்தவர் சாகிப் சிங் வர்மா. ராஷ்டிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் சாதாரணத் தொண்டராகத் துவங்கிய இவருடைய அரசியல் பயணம் பின்னாளில் பல சிகரங்களைக் கண்டது. நூலகர் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற வர்மா, தில்லி பல்கலைக்கழகத்தின் பகத்சிங் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றினார். 1977ல் ஜனதா கட்சி சார்பில் நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கல்வி அமைச்சராக தில்லி அரசில் பதவியேற்றார்.
1996ல் தில்லியின் முதல்வர் மதன்லால் குரானாவின் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுக்கள் கிளம்பிய போது வர்மா முதல்வர் பதவியை ஏற்றார். நீதிமன்றங்களால் குரானா விடுவிக்கப்பட்டும் வர்மா பதவியை விடாமல் குரானாவின் பரம விரோதத்தை சம்பாதித்துக் கொண்டார். தில்லியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட வெங்காய விலை ஏற்றம் இவருடைய பதவியைக் காவு கொண்டது. சுஷ்மா ஸ்வராஜ் தில்லியின் முதல்வர் ஆனார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|