கண்ணீல் கரையாத இரத்தக் கறைகளுடன்...
புதியமாதவி, மும்பை
மும்பை - 11/7. இன்றுடன் ஒரு வருடம் முடிந்து விட்டது. இரத்தமும் கண்ணீரும் தோய்ந்த அந்த நிமிடங்களின் கனம் மும்பையில் அனைவன் நெஞ்சங்களில் இன்றும். கண்ணீர் வற்றிவிட்டது. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? "எப்படியும் வந்துவிடுவான், கவலைப்படாதே..'' என்று தொலைபேசி அருகிலிருந்து ஆறுதல் சொன்னதெல்லாம் அப்போதே தெரியும் அர்த்தமில்லாத பிதற்றல்கள் என்பது. 'அம்மா இன்னும் அரை மணி நேரத்திற்குள் வீட்டுக்கு வந்துவிடுவேன். நீ கோவிலுக்குப் போ, எனக்கு ஜிம் போக வேண்டும்' இதுதான் அவன் கைப்பேசியில் கடைசியாக பேசிய வார்த்தை. யாருக்குத் தெரியும் இந்த வார்த்தையைப் பேசி முடித்தவுடனெயே அவனும் அவன் வாழ்க்கையும் தண்டவாளங்களில் முடிந்து போகும் என்பது?
அவள் பெயர் சுசிலா இராமசந்திரன். இராமசந்திரன் மகேந்திரா அண்ட் மகேந்திராவில் பணி புந்து விருப்ப ஓய்வுப் பெற்று (ஏற்றுமதி - இறக்குமதி வேலை) தனியாக ஒரு நிறுவனம் துவங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் கடின உழைப்பாளி. மகன் பிரபு, MBA நுழைவுத் தேர்வுக்காக தன்னைத் தயார் செய்து கொண்டிருந்தான். அன்றுதான் முதல் வகுப்பு பாஸ் எடுத்திருக்கிறான். அப்பாவின் கம்பெனிக்குப் பயிற்சிக்காக போய் வந்தவன்.
மும்பை மகிம் இந்துஜா மருத்துவ மனையில் பழைய நினைவுகள் எதுமில்லாமல் படுக்கையிலிருக்கும் பரக் சாவந்த். படுக்கை எண் 28ல் படுத்திருக்கும் அவனிடம் தங்களுக்குப் பிறந்த குழந்தையை அவள் காட்டுகிறாள். எந்த உணர்வுகளும் இல்லாமல் அவன். திருமணமாகி 7 மாதங்கள் முடிந்து தங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருந்த காதல் தம்பதியர். பிறந்த குழந்தைக்கு "பிராசித்தி' (prachiti) என்று பெயர் வைத்திருக்கிறாள். பிராசித்தி என்றால் "அனுபவம்'' என்று பொருள். சாவந்தின் மருத்துவச் செலவுகளை அரசு ஏற்றுள்ளது. நஷ்ட ஈடாக ப்ரீத்திக்கும் இரயில்வேயில் கிளார்க் வேலை கிடைத்துள்ளது. நம்பிக்கையுடன் கையில் குழந்தையுடன், வாழ்வதற்கான வேலைக்கு ஓடி, மருத்துவமனையில் அவன் உருவம் கண்டு எப்படியும் சாவந்திற்கு பழைய நினைவுகள் திரும்பும், அவனும் தன் சாவந்தாக, தன் குழந்தைக்கு தந்தையாக மீண்டும் தன்னிடம் வருவான் என்று அவள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறாள். இழந்து போன வலியை விட இருக்கும் போதே இல்லாத நிஜம் தரும் இழப்பின் வலியுடன் நித்தமும் வாழ்க்கையைத் தொடர்வது எவ்வளவு கொடுமையானது, மரணத்தை விடக் கொடுமையானது, அவள், எங்கள் அன்பு ப்ரீத்தி மரணத்தின் வலியை வென்று விட்டாள்.
ஒரு வருடம் கடந்தும் மறக்க முடியவில்லை அந்த இசுலாமிய சகோதரனின் கண்கள் என்னிடம் பேசிய அந்த மவுனத்தின் மனக்குரலை. போரிவலியிலிருந்து பிரபுவின் எல்லா காயங்களும் முடிந்து, கொட்டும் மழையில் டிரெயினுக்காக காத்திருந்தோம். போரிவலியிலிருந்து கிளம்பும் வண்டி. கூட்டம் அதிகமில்லை. ஏறியவுடன் பக்கத்திலிருந்தவரைப் பார்க்கிறேன். தலையில் வெள்ளை நிற தொப்பி, இளம்தாடி, நீண்ட வெள்ளைக் கலர் குர்த்தா மிரண்ட கண்கள், அவனருகில், அன்று நானிருந்த மனநிலையில் உட்கார முடியவில்லை. மின்சாரம் பாய்ந்தது போல உடனே எழுந்து வேறு இருக்கைக்குப் போய்விட்டேன். அவன் விழிகள் அன்று என்னிடம் கேட்ட கேள்விகள் பலகோடி. என்னையும் என் அறிதல், புரிதல், எழுத்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது அவன் பார்வை. கிழிந்து போனது நானும் என் எழுத்துகளும் என் மனித நேயமும். என்னிலிருந்த மிருகம் என்னைத் தின்ற காயங்களின் வடு இந்தப் பிறவியில் ஆறாது. எட்டிப்பார்க்கிறேன் கண்ணீல் கறையாத இரத்தக் கறைகள். ஓராண்டு நினைவஞ்சலிக்கு அணிவகுத்து நிற்கின்றன.
ஆனாலும் எங்கள் மும்பையின் தண்டவாளங்களில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது நம்பிக்கையுடன் மின்சார வண்டிகள்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|