Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Unnatham
Unnatham Logo

அழகியபெரியவன் கவிதைகள்

பாட்டியின் சரிதம்

பாட்டி
Grand Mother பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டிற்கு உள்ளதூரம் எச்சில் காயும் நேரம்
வீட்டிலிருந்து
கூப்பிடுதூரம்தான் அவள் பயிர்செய்த நிலம்
மகன்களுக்குப்
பெண்ணெடுத்ததெல்லாம்
சிலமைல்கள் தள்ளியுள்ள பக்கத்து ஊர்களில்
சின்ன மகனுக்கு மட்டும்
சென்னையில் பெண் பார்த்தாள்
ஆனால் அவள் போனதில்லை
ஒரு மகளைத்
தந்தது ஓர் ஊர்தள்ளி
இன்னொரு மகளுக்கோ இன்னொரு மாவட்டம்
கட்டிய வீட்டை விட்டு
காத தூரம் போனதில்லை கடல்களைக் கடந்ததில்லை
உயிர்த்திரண்ட சுழற்சியில்
தெறித்த அவளின் துணுக்குகள் உலகம் சுற்றுகின்றன
தொலைவுகளைக்
குறுகத்தறித்து
இரண்டடியில் உலகளந்த
அவளுக்கும் காலத்துக்கும் உள்ள தூரமோ ஒரு நூற்றாண்டு.


--------


என் முத்தாத்தன் எழுதிய
பாறை ஓவியங்களின் கீழமர்ந்து
நான் எழுதும் இந்தக்கவிதை
பெரு மழையில் நனைந்து
காற்றுடன் சலியாது பேசி
வெயிலில் ஒரு விதை போல் உலரட்டும்
அடர்ந்த மரங்களிடை
அவன் சித்திரம் இருப்பது போல்
இருக்கட்டும் என் கவிதையின் பொருளும்
அந்தப் பாறையில் வந்து சேரும்
பறவைகளின் குரலில்
இழையட்டும் அதன் ரகசியம்
இரவு தன் எல்லாக் கண்களையும்
திறந்து படிக்கட்டும் என் கவிதையை
அவன் சித்திரத்துக்கு
விம்மி எழுந்த மலைநெஞ்சுகள்
என் கவிதைக்கு
மேலும் எழும்பட்டும்
ஆடுகளையும் மாடுகளையும்
சுனைக்குப் பத்திவிட்டு
பாறையடியில்
படுத்துப்புணர்ந்த இடைச்சோடிகள்
சொக்கின் உச்சத்தில் விழியிழந்து
தடவிப் பார்க்கட்டும் அக்கவிதைகளை
விலங்குகள் உரசும்
பேறு பெறட்டும்
மனசில் காடடர்ந்து திரியும்
ஆதிவாசியொருவனால்
திரும்பவும் கண்டு பிடிக்கப்படட்டும்
என் கவிதையும்.

--------

குழந்தை 1-

அடம்பிடிக்கும் அந்தக் கண்கள்
அதிகாலை வெள்ளியின் கூர்மையுடன்
இடைவிடாது என்னைப் பார்க்கின்றன
காட்டோடை மணலின் வெண்மையிலும்
கசிந்து அடங்கிய காயத்தின் அமைதியிலும்
இருக்கின்றன அக்கண்கள்
காகத்திடம் தின்பண்டம் இழந்ததைப்போன்ற
பரிதவிப்பும்
பலவீனமான கோபமும்
அதிசயிக்கும் தன்மைகொண்ட பேராவலையும்
துக்கத்தின் ஈரத்தையும்
கொண்டிருக்கின்றன அவை
ஒரு பிரம்பின் வீசலை போல்
வலியுண்டாக்கும் அக்கண்களை
பலமுறை பார்த்திருக்கிறேன்
குடும்பத்துடன் சுட்டுக் கொல்லப்பட்டு
பெற்றோர்களின் உடல்களுடன் சேர்த்து
கிடத்தப்பட்டிருந்தபோது
குழியுள் வைத்து
மண்ணிடும்போது
தீயில் கருகி விறைத்திருந்த
சிதிலங்களிலிருந்து
சாலையின்
எதிர்பாராத முனைகளில்
கையேந்தியபடி
என் மகனை
முதுகில் விரல்பதிய நான் அடிக்கும்போது

----

-குழந்தை 2-

குடிசைகளுக்குள்
பெற்றவர்களைத் தழுவியபடி
உறக்கத்தில் இருந்தவரை
நள்ளிரவில் இழுத்துவந்து கொன்றார்கள்
அம்மாக்களை அக்காக்களை
அவர் முன்பாய் புணர்ந்தபின்பு
வாயில் பெட்ரோல்நிரப்பி தீவைத்தார்கள்
லத்திகளைச் சுழற்றிக்கொண்டு
வீடுகளினுள் ஓடி
தாயின் மார்புகளிலிருந்து
பிய்த்துக்கொண்டு போய்
சிறைவைத்தார்கள்
நீரில் மூழ்கடித்தார்கள்
கூடப்பிறந்தவரையும்
கூட்டாளிகளையும் இழந்தோர்
பொம்மைகளுடன் பேசியபடி
தனிமையில்
விளையாடுகிறார்கள்
உண்ணப்படாத
கூட்டாஞ்சோற்றுப் பருக்கைகளை
இழுத்துப்போகின்றன எறும்புகள்
ஊரூராய் தெருத்தெருவாய்
கண்ணீர் அஞ்சலிக்கு மட்டும்
குறைச்சலில்லை.
காலத்துள் புகுந்து
ஓடிக்கொண்டிருக்கிறது ரயில்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP