ஆறு நாடகங்கள்
வ.நாராயணநம்பி
அண்மைக் காலமாகத் தமிழில் நாடக இலக்கியம் ஒரு தேக்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. திரைப்பட மோகமும், தொலைக்காட்சி மெகாத் தொடர்களும் ஆக்கிரமித்துள்ள இன்றையச் சூழலில் நாடகங்கள் இயற்றி, மேடையேற்றி பின் நூல் வடிவம் பெறச் செய்வதற்கு ஓர் அசாத்தியத் துணிச்சல்தேவைப்படுகிறது.அத்துணிவைப் பேராசிரியர் முனைவர் அ. சிவக்கண்ணன் அவர்கள் தமது ‘ஆறு நாடகங்கள்’ தொகுப்பு நூல் மூலம் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
பேராசிரியர் அ. சிவக்கண்ணனுக்கெனத் தனித்தச் சில அடையாளங்கள் உண்டு. முற்போக்கு எழுத்தாளர், சிறந்த திறனாய்வாளர், நாடகத் துறையோடு நீண்ட காலத் தொடர்புடையவர். இப்படிப் பல.
இத் தொகுப்பில் உள்ள 6 நாடகங்களும் சமுதாய உணர்வை ஏற்படுத்துபவை. இவை பன்முறை மேடை யேறிப் பல பரிசுகளையும், பாராட்டுகளையும் பெற்றவை.
ஆசிரியரே கூறுவது போன்று ‘ஆறு நாடகங்கள்’ என்ற தலைப்பு, நூலின் உள்ளடக்கத்தை எண்ணிக்கை யோடு வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு நாடகமும் சமுதாயச் சிக்கலின் அடிப்படையில் பிறந்தது.
இத்தொகுப்பின் முதல் நாடகமான ‘யாருக்காகப் படைத்தான்?’ என்பதில் நகரம் நோக்கிக் கல்விக்காக இடம் பெயரும் ஒரு கிராமத்து இளைஞனின் மனப்பாதிப்புகள் விவரிக்கப்பட்டுள்ளது.
‘அக்னி ஆறு என்பது பெண்ணியம் சார்ந்த ஒரு நாடகம். இதில் வரதட்சணை எனும் கொடிய பழக்கம் பெண்களையும், குடும்பத்தையும் எவ்வாறு பாழ்படுத்துகிறது என்பதை விவரிக்கின்றது. இந் நாடகம் சென்னைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுப் பெருத்த வரவேற்பினைப் பெற்றது.
கூடுதேடும் பறவைகள் எனும் நாடகம் சிறுமை கண்டு பொங்கும் சமூக அக்கறைகொண்ட இளைஞர்களின் கதை பற்றியது.‘குருஷேத்திரங்கள் ஓய்வதில்லை’ எனும் நாடகம் சமூக அவலங்களைத் தோலுரித்துக் காட்டும் ஒரு பத்திரிகையாளரின் நிஜ வாழ்வை மையமிட்டது.
முன்னும் பின்னும் நாடகத்தில் கல்லூரி மாணவர்களது எதிர்காலக் கனவுகளும், ‘ஒரு தீர்ப்பு’ நாடகத்தில் ஒரு திரைப்பட நடிகையின் சோக வாழ்வும் விவரிக்கப் படுகிறது.
இந்நாடகங்கள் அனைத்தும் சமுதாயச் சீர்கேடு களைப் பாசாங்கு இல்லாமல் விவரிக்கின்றன. ஆசிரியரின் நடையில் வார்த்தைகளும், வசனங்களும் அமிலங்களாகச் சுடுகின்றன.
நாடகங்களை மேடையேற்றுவதற்கு ஏற்றாற் போன்று காட்சிக் குறிப்புகளை விவரித்திருப்பது பாராட்டிற்குரியது மொத்தத்தில் இது ஓர் ‘அக்னி ஆறு’.
ஆறு நாடகங்கள்
ஆசிரியர் : அ. சிவக்கண்ணன்,
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை - 14, விலை ரூ. 50.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|