தமிழரின் காலக் கணக்கு
ஆ.இரத்தினம்
அந்தக் காலத்தில் ஏடுகளிலும் கல்வெட்டுகளிலும் இருந்த எழுத்து வடிவங்கள் மாற்றம் அடைந்துதான் வந்து கொண்டிருக்கின்றன. ஒலி மாறாமல் எழுத்துகள் கால ஒட்டத்தில் மாற்றம் அடைந்துள்ளன. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்ட பிறகு வரிவடிவில் மாற்றங்கள் ஏற்பட்டன. யானை துதிக்கையைத் தூக்குவதுபோல் தோற்றமளிக்கும் ‘?ன’ எழுத்து மாற்றப்பட்டு ‘னை’ என்ற வடிவம் பெற்றது. எளிமை கருதிச் செய்கின்ற மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே.
உயிரெழுத்தான ஊ, ஒள ஆகிய இரு எழுத்துகளிலும் மெய்யெழுத்தின் வடிவமான ‘ள’ உள்ளது. அதைவிட உh, அவ் என்று மாற்றம் செய்வது ஏற்றதுதான். கணினிப் பயன்பாடு அதிகமாக உள்ள இந்தக் காலகட்டத்தில் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்து ஒலிவடிவங்களை மட்டும் குறைக்காமல் இருப்பது நன்றே. ‘தமிழரின் காலக் கணக்கு’ என்னும் இந்நூலில் நூலாசிரியர் சில நல்ல மாற்றங்களைத் தந்துள்ளார். எழுத்துச் சீர்திருத்தம் பற்றியும், குறியீடுகள், பயன்படாத சில எழுத்துகள் போன்ற அரிய அறிவுச் செய்திகளைத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இருப்பினும் வரி வடிவங்களில் பெரிய பெரிய மாற்றங்கள் செய்யும்போது எதிர்காலத்தினர் நூலகங்களில் இருக்கும் லட்சக்கணக்கான தமிழ்நூல்களைப் படிக்க இயலாத நிலையும் ஏற்படலாம். ஆங்கில மோகக் கல்வி தமிழை அழிப்பதைவிடவும் பெரிய பாதிப்பு எதுவும் நேர்ந்துவிடாது என்று நம்பலாம்.
இன்றைக்குத் தமிழ் ஆண்டுகள் எனப்படுகிற பிரபவமுதல் அட்சய வரையிலான 60 ஆண்டுப்பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. எல்லாம் சமற்கிருதப் பெயர்களே. சைத்ரா முதல் பகுனா வரை உள்ள சமற்கிருத மாதங்களே தமிழில் சித்திரை முதல் பங்குனி வரை என இடம் மாற்றியுள்ளன. தமிழ் ஆண்டு, மாதத்தைப் பின்பற்றி ஏற்பு நாளாகக் கொள்வது எப்போது? என்ற வினாவை எழுப்பித் தமிழர்களிடம் விடையை எதிர்பார்க்கிறார் ஆசிரியர். தமிழ் எழுத்திலிருந்தே பல எழுத்துகள் வடமொழி வரிவடிவம் பெற்றதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.
“தமிழ் வழியில் படித்தவர்களுக்கே வேலை எனச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும், இல்லையென்றால் தமிழை மீட்கமுடியாது.” என்பது இந்நூலின் அழுத்தமான கருத்து.
குறியீடுகளைக் குறைக்க இந்நூல் வழி காட்டுகிறது. ‘ஆ’ நெடில் எழுத்தை ‘அh’ என்ற குறியீட்டில் எழுதலாம் என்று கூறி உயிரெழுத்துகளை அடுக்குகிறார். பயன்படாத மெய்யெழுத்துகள் பற்றிப் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளது. பார்ப்பனியம் கிழமைகளைச் சிதைத்துள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது. மூட நம்பிக்கைகளைச் சாடுகிறார் ஆசிரியர். உழைக்கும் தமிழர்களுக்கு எல்லா நாள்களும் மணித்துணிகளும் நல்ல நேரங்களே. உழைக்காமல் ஏமாற்றிப் பிழைப்பவர்கள்தான் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்க வேண்டும்; மூலத் தமிழ் எண் தோன்றிய முறையை மாணவர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ அறிமுகப்படுத்தாமல் அயலக அடிமை அரசு முறையில் பள்ளியில் இன்னமும் உரோம எண்களால் பள்ளி வகுப்புகள் தமிழ்நாட்டில் நடைபெறும் கேட்டை மாற்றவேண்டும், பெயர்ப்பலகைகள், ஊர்தி எண்கள் தமிழில் எழுதும் நடைமுறை உறுதியாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
Ready பண்ணி, use பண்ணி, என்று பேசுவதுபோல் ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் போக்கு மாறினால்தான் தமிழ் குன்றாமல் இருக்கும். தமிழ் உணர்வுநிலை ஓங்கினால்தான் இந்தப் போக்கு மாறும். உணர்வுநிலை ஓங்குமா? தமிழர்களே இந்த வினாவுக்கு விடை கூறுங்கள்.
தமிழரின் காலக் கணக்கு
ஆசிரியர் : அ.சி. சின்னப்பத்தமிழர்,
வெளியீடு : தமிழம்மா பதிப்பகம், 59, விநாயகபுரம், அரும்பாக்கம்,
சென்னை - 106, விலை : ரூ. 10.00
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|