கனவு நனவாகிறது
அலெய்டாகுவேரா
இந்த உலகில் மக்கள் தினம் தினம் பல்வேறு பிரச்சனைகளை புதுப்புது வடிவங்களில் சந்திக்கிறார்கள். அதற்குப் பல்வேறு வகைகளில் தீர்வுகளைத் தேடிக் கண்டடைகிறார்கள். ஆன்மிகத்தில் தொடங்கி மார்க்சியம் வரை மக்கள் பயணித்த படியே இருக்கிறார்கள். சோவியத்யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு சோசலிசத்தை இலட்சியமாக கொண்டவர்களுக்கு மனச்சோர்வும், பின்னடைவும் ஏற்பட்டது. இதை எதிர்கொள்ளும் விதமாகப் பல்வேறு பாதைகளில் பயணம் செய்து தீர்வு என்ற எல்லையைத் தொட முயன்றார்கள். இந்தச் சூழலில்தான் நமக்குச் சாவேஸ் என்ற மனிதர் அறிமுகமாகிறார்.
சாவேஸைப் பற்றிச் சிறு சிறு வெளியீடுகள் வந்தாலும் ‘அலெய்டா குவேரா’வின் சாவேஸ் என்ற நூல் நமக்குச் சாவேஸையும், லத்தின் அமெரிக்கச் சூழலையும், வெனிசுலாவையும் முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. இந்த நூலின் ஆசிரியர் நம் ‘சே’ வின் அருமை மகள் என்று தெரிய வரும்போது நம்மை அறியாமலே இந்தப் புத்தகத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
இந்நூல் ஆசிரியர் தன் உரையில் குறிப்பிடும்போது, ஒஷன் பிரஸ் பதிப்பகத்தாரின் யோசனைப்படி, வெனிசுலாவின் மறுபக்கத்தை, அதன் மக்களை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தவும், அதன் மூலம் அங்கு நடக்கும் செயல்பாடுகள் குறித்துப் பரப்பப்படும் பொய்களையும் புரட்டல்களையும் அம்பலப்படுத்தவும் ஒரு புத்தகம் வர வேண்டும் என்று விரும்பினார்.
வாசகர்களே! முதன் முறையாக நான் ஒரு நேர்காணலை எழுதுவதற்கு முயற்சித்திருக்கிறேன்; அது எனக்குப் பெரும் சவாலாய் அமைந்தது. எனக்குப் பொதுவாக உரையாடலில் ஆர்வமும், திறனும் உண்டெனினும் இதற்கு முன்னர் இந்த அளவுக்குப் பெரியதான உரையாடலை எழுதியதில்லை. மற்றவர் சொன்னதை அப்படியே அவர்களது சைகை மற்றும் உணர்ச்சிப் பெருக்கு ஆகியவற்றுடன் சேர்த்து அச்சில் வார்ப்பது அபூர்வமாய்தான் நம்மிடையே நிகழ்ந்து வருகிறது. நான் இந்த பெரும் சவாலைச் சரியாக நிறைவேற்றி இருக்கிறேனா என்று தெரியவில்லை..... உங்களுக்கு அனைத்து விபரங்களையும் நான் அப்படியே சொல்லி, களைப்பை உருவாக்க மாட்டேன் என்று கூறுகிறார்.
ஒரு நேர்காணலின் மூலம் ஒரு தலைவனை, ஒரு தேசத்தை, ஒரு கண்டத்தை, ஒரு புரட்சிகர செயல்பாடுகளை ஒரே மூச்சில் நமக்குப் படித்துத் தெரிந்து கொள்ள முடிகிறது. எளிமையான மொழி பெயர்ப்பு. நல்ல தயாரிப்பு.
சாவேஸ்
ஆசிரியர் : அலெய்டாகுவேரா, தமிழில் : சொ. பிரபாகரன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18, விலை : ரூ.90/-
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|