ஒரு எச்சரிக்கை மணி
அபிபா
“123..... போடு தோப்புக்கரணம்” என்ற இந்தச் சிறுநூலின் ஆசிரியர், எடுத்தஎடுப்பில் கூறியிருப்பது போல், “123 ஒப்பந்தம் ...... இன்றைக்கு இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.”
“சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்” என அரசியல் மேடைகளில் முழக்கப்படுவதை கேட்டிருக்கிறோம். ஆனால் ‘சொன்னதைச் செய்யமாட்டோம்; சொல்லாததைச் செய்வோம்’ என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கின் அரசு தனது “லட்சியமாக”க் கொண்டுள்ளது. இன்றைய பரபரப்பிற்கு இந்த ‘லட்சியம்’ ஒரு முக்கியக் காரணம் என்றாலும் இதற்கு ஒரு பின்னணியும் உள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (முற்போக்கு என்பது அமெரிக்காவிற்கு தோப்புக்கரணம் போடுவது என்று காங்கிரஸ் அகராதியில் அர்த்தம்போலும்) சிறுபான்மை அரசுதான். அதற்கு இடது சாரிக்கட்சிகள் வெளியிலிருந்து நிபந்தனையுடனான ஆதரவு அளித்து வருகின்றன. அதனால் தான் இந்த அரசு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அரசு அமைக்கப்பட்டவுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் இடது சாரிக் கட்சிகளின் தலைவர்களும் பலமுறை கூடி விவாதித்து இந்த அரசுக்கான பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் ஒன்று இறுதிப்படுத்தப்பட்டது.
இந்தவேலைத் திட்டத்திற்கான நகலில், அமெரிக்காவுடன் கேந்திரமான உறவுபலப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்ததை இடதுசாரி கட்சிகள் கடுமையாக ஆட்சேபித்தன. எனவே அது நீக்கப்பட்டது. அதன் பின்பு, சுயேச்சையான வெளிநாட்டுக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் கூட்டுச் சேரா இயக்கம் பலப்படுத்தப்படும் என்று சேர்க்கப்பட்டடது.
ஆனால் ஒப்புக் கொண்டதைச் செய்யவில்லை என்பது மட்டுமல்ல நீக்கப்பட்டதை அமுல்படுத்தியே தீர்வது என்பதில் மன்மோகன் சிங் அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம், அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக சர்வதேச அணுசக்தி அமைப்பில் இரானுக்கு எதிரான வாக்களிப்பு, இராக்கில் குண்டு மழை பொழிந்த அமெரிக்காவின் அணு ஆயுதயுத்தக்கப்பல்களுக்கு உபசரிப்பு, அமெரிக்காவுடனும் அதன் கூட்டாளி நாடுகளுடனும் ராணுவப் பயிற்சி - இவையெல்லாம் பொதுவான குறைந்தபட்ச வேலைத் திட்டத்தில் இல்லாதவை. ஆனாலும் இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையெல்லாம் மீறி இவை அனைத்தும் அரங்கேற்றப்பட்டுவிட்டன. அதேபோல், இத்தனை ஆண்டுகளாக கட்டிக்காக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை வெளிநாட்டு சர்வதேசக் கம்பெனிகளுக்கு விலை பேசுவதிலும் இந்த அரசு தீவிரமாக உள்ளது. இதுவும் வேலைத்திட்டத்தில் இல்லாத ஒரு ‘திட்டம்’.
இவ்வாறு இந்தியாவின் மேலாண்மைக்கு விரோதமாக எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் 123...ஒப்பந்தம். இது, இந்தியாவில் அணுமின்சார உற்பத்தியை அமெரிக்க ஒத்துழைப்புடன் பெருக்குவதற்கான ஒப்பந்தம் என்று ஆட்சியாளர்கள் வரையறுக்கின்றனர். ஆனால் இதற்குள் இந்தியாவின் மேலாண்மைக்கும் சுயஉரிமைகளுக்கும் எதிராக எப்படியெல்லாம் விஷவலை பின்னப்படுகிறது என்பதை இந்தச் சிறுநூல் - சிறுநூல் என்றாலும் - தெளிவாகவும் விபரங்களுடனும் அதே நேரத்தில் எளிமையாகவும் எடுத்துரைக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் பின்னணி என்ன? இருநாடு களுக்குமிடையே இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹைடு சட்டத்தின் விபரீத நோக்கம் என்ன? இந்த ஒப்பந்தத்தின் அரசியல் பின்னணி என்ன? இந்த ஒப்பந்தத்தால் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விளைவுகள் என்னவாகும்? என்ற இயல்பாக எழும் கேள்விகளுக்கு எளிமையான முறையில் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் நாட்டின் பொருளாதார நலன்களும் மேலாண்மையும் விலை பேசப்படுகின்றன என்று எச்சரிப்பதாக உள்ளன.
இந்த ஒப்பந்தம் அணுமின்சக்தி உற்பத்தியில் பெரிதாக சாதித்து விடப்போவதில்லை என்றும் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி தனியார் மயமாவதுடன் தொழிலாளர்களின் வேலை இழப்புக்கும் இட்டுச் செல்லும் என்று எச்சரிக்கிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்வதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று தனது ஆட்சியின் போது நிருபித்த பா. ஜ. க. இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதன் உள்நோக்கத்தையும் அந்த ஆட்சியின் போது தான் இன்றைய 123 ஒப்பந்தத்திற்கு அடித்தளம் போடப்பட்டது என்பதையும் அம்பலப்படுத்துவதற்கும் இந்நூல் தவறவில்லை. மேலும், அணுமின் சக்தியை நம்முடைய ஆதாரங்களையும் தொழில் நுட்பகளையும் பயன்படுத்தி சுயசார்பு முறையில் சாதிக்க முடியும் என்றும் நம்பிக்கையூட்டுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் குறிப்பாக 2 - வது உலகப் போருக்கு பிறகு ரத்தக்களறி வரலாற்றையே கொண்டுள்ளது. இராக்கில் இப்போது ரத்தம் குடித்துக் கொண்டிருக்கிறது. இரான் மீது மோப்பம் பிடிக்கிறது. உலகின் மிகப்பெரும் ஜனநாயகம் என்ற பேரில் ரத்த வரலாறு படைக்கிறது. இத்தகைய அமெரிக்காவின் நிர்பந்தங்களுக்கு விருப்புடன் இந்திய அரசு தலையாட்டுவதால் நிகழப்போகும் விளைவுகள் குறித்து ஒரு எச்சரிக்கை மணியே இந்தநூல்.
1 2 3 ... போடு தோப்புக்கரணம்
ஆசிரியர் : ஆனந்த பாசுகர், வெளியீடு : பாவை பப்ளிக்கேஷன்ஸ்
142, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை,
சென்னை - 600 014, விலை : ரூ.15.00.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|