கலகக்காரர் ஐன்ஸ்டீன் - ஓர் அறிமுகம்
சி.ஆர்.ரவீந்திரன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அணுக்கொள்கைக்கும், சார்பியல் தத்துவத்திற்கும் இப்போது நூறு வயதாகிறது. இருபதாம் நூற்றாண்டின் புரட்சிகரமான மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்தவை அவருடைய அறிவியல் கண்டு பிடிப்புக்கள் என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அறிவியல் துறையிலும் தொழில் நுட்பத்திலும், மனிதர்களின் சமுதாய வாழ்விலும் அவருடைய கண்டுபிடிப்புக்கள் தலை கீழ் மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன என்பது வெளிப்படையான உண்மை.
காலம் காலமாக இயற்பியல் அறிஞர்கள் எல்லையில்லாததும், புரியாப்புதிர் நிறைந்ததும், அளவிட முடியாததாகவும் இருந்து வந்த பிரபஞ்ச இரகசியத்தைத் தெரிந்து கொள்ளவும், விளக்கிக் கூறவும், அதைப் பயன்படுத்தவும் தொடர்ந்து முயன்று வந்திருக்கிறார்கள். வியப்புக்குரிய பிரபஞ்சத்தை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள அவர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். ஆன்மீகவாதிகள் தங்களுடைய புலன் உணர்வுகளால் மாயப் பிரபஞ்சத்தின் ஒப்பற்ற ஆற்றலையும், அமைப்பையும் உணர்ந்து மனித வாழ்க்கையின் மேன்மைக்கு ஆன்மீக நெறியை வளர்த்துக் கொள்ள வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் மனித வாழ்க்கையின் தன்மைகளைக் குறித்து அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். இயற்கையிலிருந்து விலகிவரும் மனித வாழ்க்கையை இயற்கையின் இயல்புகளோடு இணைக்க அவர்கள் முனைகிறார்கள்.
மனிதனின் இன்றைய நவீன வாழ்க்கையில் அறிவியலும் தொழில்நுட்பமும் அளவு கடந்த ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்து வந்த மனிதன் இயற்கையை அழித்துச் சிதைத்துக் கொண்டே தன்னுடைய வரலாற்றைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். மனிதன் தனக்காகக் கண்டு பிடித்து அறிவியல் தொழில்நுட்பம் இன்றைய நவீன வாழ்க்கையில் அவனையே அடிமைப்படுத்தி விட்டது என்பதை மறுக்க முடியாது. இன்று நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களில் தாறுமாறான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இயற்கை சகிக்க முடியாத அளவுக்கு மாசுபட்டு போயிருக்கின்றன. அறிவியல் தொழில்நுட்பம் ஆளுமை செலுத்தும் இன்றைய நவீன வாழ்க்கையில் மனிதன் இரு விற்பனைப் பொருளாக மாறிப் போய் விட்டான்.
மனித சமுதாயம் தன்னுடைய வரலாற்றுப் போக்கில் பரிணாம வளர்ச்சியில் படிப்படியாக உருவாக்கி வந்த ஆக்க ரீதியான கலாசாரமும், பண்பாடும் அடியோடு சிதைந்து, தகர்ந்து, நொருங்கும். ஒரு நெருக்கடியான கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறது. மேலும் இதை ஊக்குவிக்கும் வகையில் உலகமயமாதல், உலகச் சந்தை போன்ற கருதுகோள்களும், நடைமுறைகளும், மனித வாழ்க்கைக்கு அச்சத்தைத் தருவதாக உள்ளன. இன்றைய மனிதன் நுகர்வுக் கலாசார வெறியில் நிலை குலைந்து போயிருக்கிறான். மனிதனுக்கான அறிவியல், தொழில்நுட்பம் என்ற நோக்கம் மாறி, அறிவியல் தொழில் நுட்பத்திற்கான மனிதன் என்ற நிலைமை மிகமிக வேகமாக மாறி வருகிறது. மனிதன் படிப்படியாக இயந்திரமாகி வரும் இன்றைய சூழலில் அவனுடைய கலாசாரத்தையும், பண்பாட்டையும் உள்ளடக்கிய அவனுடைய சமுதாய வாழ்க்கை இயந்திரமாகிப் போனது.
நவீன வாழ்க்கையில் வரலாற்று ரீதியாக வளர்ந்து வந்த மனிதனையும், அவனுடைய உறவுகளையும், வாழ்க்கையையும் நிலைநிறுத்த வேண்டிய சோதனை மிகுந்த இன்றைய காலச் சூழலில் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்துத் தீவிரமான ஆய்வுகளை நிகழ்த்த வேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டிருக்கிறான் என்பதே உண்மை.
இந்தச் சூழலில், நவீன அறிவியல் தொழில்நுட்பம் குறித்து ஆக்க பூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றிய வெளியீடுகள் சிறியதும் பெரியதுமாகத் தமிழில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த முயற்சியில் ஒன்றுதான் த.வி. வெங்கடேஸ்வரன் எழுதியுள்ள ‘கலகக்காரர் ஐன்ஸ்டீன்’.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைப் பற்றிய மிகச் சிறிய நூல் என்றாலும் இதில் அடங்கியுள்ள தகவல்கள் மிகமிக அதிகம். மிகப் பெரிய ஒரு ஆய்வு நூலின் மிகச் சிறிய வெளியீடு இது என்று சொல்லக் கூடிய அளவுக்குச் செறிவாக உள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடைய வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய அறிவியல் சிந்தனைகளின் வளர்ச்சியையும் ஆசிரியர் ஒருங்கிணைத்தே இந்த நூலை வடிவமைத்துள்ளார். எளிய மொழியில், சுருக்கமாகவும், தெளிவாகவும், நுணுக்கமாகவும் இந்த நூலை எழுதியிருப்பது ஒரு தனிச் சிறப்பு.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அவர் நமக்கு இப்படி அறிமுகப்படுத்துகிறார். “கலைந்த வெண்மேகம், புதர் போன்ற வெள்ளைமூடி ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் அகலமான நெற்றி; விளையாட்டும்; களிப்பும்; அன்பும் ஊடாடும் கன்னம்; ஊடுருவும் பார்வையும், தேடலையும் சுட்டும் இரு விழிகள். ஐன்ஸ்டீன் என்றாலே புத்திசாலித்தனம், அறிவுக் கூர்மை; ஆழமான சிந்தனை. இதுவே நம் மனதில் சட்டென்று தோன்றும் தோற்றம். இருபதாம் நூற்றாண்டின் மேற்பகுதியில் இயற்பியல் துறையில் புரட்சிகர மாறுதல்களை ஏற்படுத்திய ஐன்ஸ்டீன் நமது பிரபஞ்சம் குறித்த ஆழமான அறிவுக்கு வித்திட்டவர்.”
அவருடைய புறத்தோற்றத்தைச் சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்கிய ஆசிரியர், அவருடைய அகத் தோற்றத்தையும் இப்படி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். “உள்ளபடியே ஐன்ஸ்டீன் மேதை மட்டுமல்ல; ஒரு கலகக்காரர், ஒரு போராளி என்பது பலரும் அறிந்திராத ஒரு செய்தி. கலகமே தமது வாழ்வு என வாழ்ந்தவர்களில் ஒருவர் ஐன்ஸ்டீன். ‘நாரதர் கலகம் நன்மையிலே’ என்பார்கள். அது உண்மையோ, பொய்யோ, நல்லவர் செய்யும் கலகம் உள்ளபடியே மனித குலத்தை முன்னேறச் செய்கிறது. மார்க்ஸ், மார்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, சேகுவேரா போன்ற கலகக்காரர்களின் கூத்தினால்தான் மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கிறது. ஐன்ஸ்டீன் இப்படிப்பட்ட கலகக்காரர்தான்.”
கல்வி சார்ந்த நடைமுறையும், சிந்தனையும் மனிதனை ஒழுங்காக வடிவமைக்கும் அடிப்படைகள் என்றாலும் கூட, அவனுடைய படைப்புத்திறன் அவற்றால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, அடியோடு அழிக்கப்படுவதை அடையாளப்படுத்துகிறது நவீன உளவியல். அதை வளப்படுத்த தங்குத் தடை இல்லாத தன்னிச்சையான, சுதந்திரமான மனப்போக்குக்கும், சிந்தனைக்கும் இடமளிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. இதனாலேயே நடைமுறைக் கல்வி சார்ந்த அறிவாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் இடையில் மிகப் பெரிய அளவுக்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. அறிவியல் வாழ்க்கை சார்ந்த தளங்களில் இது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
வாழ்க்கையின் எதார்த்தமான இந்தத் தடைகளை எதிர்த்துப் போராடியபடியே தான் ஒவ்வொரு உன்னத மனிதனும் தன்னுடைய சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். அதற்கு ஐன்ஸ்டீனும் விதிவிலக்கு அல்ல என்பதை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.
ஆசிரியரால் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட, மனித ஆசிரியரால் ‘சோம்பேறி நாய்’ என்று அர்ச்சிக்கப்பட்ட, பொறியியல் நுழைவுத் தேர்வில் தோல்வியுற்ற, பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பணி மறுக்கப்பட்ட, இறுதியில் அறிவு சொத்துரிமை அரசு அலுவலகத்தில் தடைநிலை எழுத்தராக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட, இருபத்து ஆறு வயதே நிரம்பியிருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அப்படியொன்றும் அச்சுறுத்துபவராகத் தெரியாமல் போனதில் வியப்பில்லைதான்’.
அக, புற வாழ்க்கையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிகழ்த்திய இடையறாத போராட்டத்தினூடே அவர் தம்முடைய படைப்பாற்றலால் மிகச் சிறந்த ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் என்பதை இந்த நூலின் வாயிலாக ஆசிரியர் நிலைப்படுத்துகிறார். வறுமை, ஏழ்மை, துயரம் போன்ற வாழ்க்கைச் சுமைகளைச் சகித்துக் கொண்டு தன்னுடைய மனத்திண்மையால் இடைவிடாத தேடலை நிகழ்த்தி மனித சமுதாயத்தின் மேன்மைக்குரிய அறிவியலைக் கண்டு பிடித்தவர் ஐன்ஸ்டீன் என்பதை இந்த நூல் விளக்குகிறது.
இயற்பியலில் தனக்கு முன் நிறுவப்பட்ட அனைத்து அறிவியல் கோட்பாடுகளை, குறிப்பாக நியூட்டனின் நிலை நிறுத்தப்பட்ட கோட்பாடுகளை அவற்றினூடே பயணம் செய்து அவற்றைத் தகர்த்து புதிய அறிவியலை மனித குலத்துக்கு ஐன்ஸ்டீன் அளித்தார் என்பதையும் ஆசிரியர் தகுந்த சான்றுகளுடன் நிறுவுகிறார். இயற்பியலில் அவருக்கு முன்பு நிலை பெற்றிருந்த மார்க்ஸ் லெனின் தத்துவத்தைக் கடந்து சென்று தமது புதிய கண்டு பிடிப்புக்களை ஐன்ஸ்டீன் வெளிப்படுத்தினார்.
காதல், திருமணம், மண முறிவு, மரணம், புலம் பெயர்தல், வேலையின்மை, சமுதாய எதிர்ப்பு போன்ற உள்மனச் சோகங்களையும் ஐன்ஸ்டீன் தாங்கிக் கொண்டு தாளமுடியாத வலியுடன் தமது சாதனைக்கான வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தார்.
1905-ம் ஆண்டில் அவர் இயற்பியல் குறித்து வெளியிட்ட ஐந்து கட்டுரைகளே அவரை உலகுக்கு அறிமுகப்படுத்தின. அவை, கடுமையான விமர்சனங்களுக்கும், எதிர்ப்புக்கும் உள்ளாயின. போதிய புரிதல் இல்லாமையால் அவற்றின் முக்கியத்துவம் காலம் கடந்தே வெளிப்பட்டது.
இயற்பியலின் நிலை பெற்றிருந்த கோட்பாடுகளுக்கு எதிராக உண்மை இருந்ததாலும், அதைப் புரிய வைப்பதற்கான இரு மாற்று கண்ணோட்டத்தை நிலை நிறுத்த வேண்டியிருந்ததாலும் ஐன்ஸ்டீன் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அவர் தம்முடைய சார்பியல் தத்துவத்தையும், அணுவின் ஆற்றல் குறித்த இ = எம்சி2 (E = MC2) என்ற சூத்திரத்தையும் விளக்குவதற்காக அரும்பாடுபட்டார். தொடக்க காலத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அவருடைய கண்டு பிடிப்புக்கள் புரியக் கூடியவையாக அமைந்தன. அணுவைப் பிளந்து காட்டும் முகமாக அணுகுண்டு சோதனை நிகழ்த்தப்பட்ட பின்பு தான் ஐன்ஸ்டீனும், அவரது கண்டு பிடிப்புக்களும் உலக அளவில் அறியப்படுவதற்கான வாய்ப்பு நேர்ந்தது.
மனித குலமே அவதிக்குள்ளாகிய அணுகுண்டு வெடிப்புக் காரணமாக இலட்சக் கணக்கான அப்பாவி மக்கள் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐன்ஸ்டீன் மிகுந்த துயரமடைந்தார். அதற்குப் பிறகு அவர் வாழ்நாள் முழுவதும் மனக் கவலைக்கு உள்ளானார். தாம் கண்டுபிடித்த மகத்தான அறிவியல் மனிதர்களை அழிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்டதைக் குறித்து மிகவும் கவலைப்பட்டார். “ஹிட்லரால் மட்டும் ஒரு அணுகுண்டைக் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிந்திருந்திருந்தால் நான் அதைக் கண்டு பிடித்திருக்கமாட்டேன்” என்று வெளிப்படையாகக் கூறி வருந்தினார்.
ஐன்ஸ்டீனுடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகள் அடங்கிய புகைப்படங்களும், அவருடைய அறிவியல் குறித்த விளக்க வரைபடங்களும் இந்தச் சிறிய நூலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இயற்பியல் துறை சாராதவர்கள் தெளிவாகவும், விரிவாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நூலைப் பெரிய அளவில் விரிவாக்கி வெளியிட்டிருந்தால் இன்னும் பயனுடையதாக இருந்திருக்கும்.
மனித வரலாற்றில் பிரபஞ்சம் குறித்த கூடுதலான கண்டுபிடிப்புக்களை வழங்கியவர் ஐன்ஸ்டீன். மிகச் சிறந்த மனித நேயர், தேசிய வெறி, போர்வெறி, இனவெறி, ஆதிக்கவெறி போன்ற மனிதனின் கீழ்மையான போக்குகளுக்கும், எண்ணங்களுக்கும் எதிராக நின்று வாழ்க்கையில் போராடியவர். மனித சமத்துவம், உலக அமைதி, மனித குல வளர்ச்சி போன்றவற்றை உளப் பூர்வமாக உணர்ந்து வாழ்ந்தவர். தமது தனிப்பட்ட கொள்கைகளுக்கு உண்மையாக வாழ்ந்தவர். மனிதர்களும், கோடானுகோடி உயிரினங்களும் வாழும் இந்தப் பிரபஞ்சத்தையே கடவுளாகக் கருதியவர் ஐன்ஸ்டீன். மதங்களிலோ, ஆச்சாரங்களிலோ, சடங்குகளிலோ அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை.
இந்தப் புத்தகம் வெளியாகியிருக்கும் சூழலிலேயே கோடீஸ்வரன் என்பவர் ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’ என்ற வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வந்துள்ள அதையும் இதனுடன் சேர்ந்துப் படித்தால் ஐன்ஸ்டீனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். அதற்கேற்ற தருணம் இது. விரிவானதும், எல்லையில்லாததும், அளவிடமுடியாததும், இடைவிடாமல் இயங்கி வருவதுமான இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சிறு புள்ளியாய் விளங்கும் பூமியின் மிகச் சிறிய துளியாக இருக்கும் மனிதன் தன்னையும், தன்னுடைய வாழ்க்கையும் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் ஐன்ஸ்டீனைப் பற்றிய இப்படிப்பட்ட நூல்கள் நுழைவாயில்களாக அமையும்.
கலகக்காரர் ஐன்ஸ்டீன்
ஆசிரியர் : த.வி. வெங்கடேஸ்வரன்,
வெளியீடு : அறிவியல்,
245, ஒளவை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை - 86,
விலை : ரூ. 40.00.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|