தலையங்கம்
வீடு தோறும் கலை விளக்கம் பெறுக
உங்கள் நூலகம் பதினோராம் இதழ் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ் ஒளி இதழாக உங்கள் கைகளில் தவழுகிறது. இந்த இதழ் செப்டம்பர் திங்களில் மதுரை மாநகரில் நடைபெறயிருக்கும் புத்தகக் கண்காட்சி மலராகவும் இலங்குகிறது.
இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றில், அரசியலாயினும் சமூகமாயினும் தொழிற்சங்கமாயினும் தமிழகத்தை முன்னோடி நிலமாக உயர்த்தி நிறுத்திய பெருமை பெரியார் ஈ.வே. ராமசாமி, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், தமிழ்த்தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார் என்ற மும்மணிக்கும் உரியது. பெரியார் நாத்திகத்தையும், சமூகச் சீர்திருத்தத்தையும் உயிர் மூச்சாகக் கொண்டார். உலகிலேயே நாத்திகத்தை மக்கள் இயக்கமாக நடத்திக் காட்டிய பெருமை பெரியாருக்கே உரியது.
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பொதுவுடைமை இயக்க முன்னோடி. மார்க்சிய இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் பக்கம் நின்றவர். அதனால் அறிவியல் நெறிப்படி சமூகத்தை அவரால் நோக்க முடிந்தது. இவ்விருவருமே மூடப்பழக்க வழக்கங்களையும் மதவாத இருண்மையையும் எதிர்த்துப் போரிட்டவர்கள், ஆனால் மாறாக, திரு.வி. கலியாணசுந்தரனார் பழுத்த ஆன்மீகவாதி, சைவர். ஒரு கணமும் கடவுள் நம்பிக்கையில் இருந்து பிறழ்ந்தவர் அல்லர் ஆனால் மக்களுக்கு, குறிப்பாகக் கிளர்ந்து வளர்ந்து வந்துள்ள தொழிலாளர்களுக்கு அவர் ஆற்றிய பணி மிக உயர்ந்தது.
சட்டப் பாதுகாப்பும், சமூக பாதுகாப்பும் இல்லாத காலக்கட்டத்தில், இந்திய மக்களுக்கு எந்த உரிமையும் இல்லாதிருந்த காலத்தில் ஊமைகளாகவும், ஏமாளிகளாகவும் இருந்த தொழிலாளி களைத் திரட்டி சங்கம் அமைத்து பல உரிமைகளையும், நலன்களையும் போராட்ட வழி பெற்றுத் தந்த மாமனிதர் அவர்.
காந்தியத்தைப் போற்றும் போதே சமூதாயச் சீர்குலைவுக்கு நிரந்தரத் தீர்வுகாண மார்க்சியமே நல்வழி, அருமருந்து, பொதுவுடமையாளர்கள் முற்றும் துறந்த முனிவர்களுடன் ஒப்பவைத்துக் கருதத்தக்கவர்கள் என்று பாராட்டியவர்.
முற்போக்குக் கருத்துக்களைச் சமூக மாற்றத்தை விரும்பியவர் திரு.வி.க. அவரைப் பற்றிய கட்டுரை இவ்விதழில் இடம் பெறுகின்றது.
வறுமையில் வாடிய எளிய குடும்பத்தில் பிறந்த தமிழ்ஒளி தமிழ் மொழி உள்ளளவும் ஒளிவீசிப் புகழ் பரப்புவார். தம்புகழையன்று, தமிழின் பெருமையை, பொதுவுடமையின் பெருமையை. அவரை உருவாக்கித் தமிழகத்துக்கு வழங்கிய பெருமை பாரதிதாசனுக்கு உரியது.
பாரதிதாசன் பரம்பரையினர் பலர் இன்று இலக்கியவாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள். தமிழ்ஒளி மரபுக் கவிதை படைப்பதில் வல்லவர். அவரோடு மரபுக் கவிதையின் காலமும் முடிவடைகிறது என ஒருவாறு துணியலாம். தமிழ் ஒளிக்கு, அவரைப் படிக்க - நூல்களைப் பலரிடம் கொண்டு செல்ல முயற்சிகள் பல மேற்கொள்ளப் படவேண்டும். இதுவரை அவருடைய படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு அரிய முயற்சியைத் தொடர்ந்து செய்து வரும் செ.து. சஞ்சீவி பாராட்டுக் குரியவர். ஓர் இயக்கம் செய்ய வேண்டியதைத் தனி மனிதர் ஒருவர் செய்து வருவது வியப்பூட்டும் உண்மை.
மதுரை, மாநகர் தமிழகத்தின் தொன்னகர். சங்க காலம் தொட்டு இக்காலம் வரை தமிழுக்கு அரிய தொண்டாற்றி வருவது இந்நகர். புலவர் கூடித் தமிழாய்ந்த சங்கம் இருந்ததாக வரலாறு அறிவிக்கிறது. இத் தென்மதுரையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அறிமுகம் அருமையாக இருப்பது காணலாம். ஈரோடுப் புத்தகக் கண்காட்சி வெற்றி பெற்றதுபோல மதுரைப் புத்தகக் கண்காட்சியும் வெற்றி பெறும் என்பது உறுதி.
வீடுதோறும் கலை விளக்கம் பெறும்.
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.
|
Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
|
|
 |
|