Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
செப்டம்பர் - அக்டோபர் 2006

சங்க இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும்
அரங்க மல்லிகா

பெண்ணியம் என்பது பெண்விடுதலையை மையப்படுத்திப் பல்வேறு நாடுகளில், பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தளங்களில் போரிட்ட இயக்கத்தின் சித்தாந்த வெளிப்பாடு ஆகும். பெண்ணை ஓர் உயிருள்ள மனுஷியாகப் பார்க்கச் சொல்லும் ஒரு கருத்தாக்கமாகும். ஏனெனில் ஆணாதிக்கச் சமூகத்தில், பெரும்பாலான பெண்கள் ஒரு நுகர்பொருளாகப் பார்க்கப்படுகின்ற சூழல் தொடர்கிறது.

1971இல் ஃபிரான்சில் பெண்ணியம் என்ற சொல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 1872இல் அலெக்ஸாண்டர் டூமஸ் ஃபில்ஸ் என்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர், பெண்கள் ஆண்களால் நடத்தப்படுகிறார்கள் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். 1840இல் பெண்களின் உரிமைக்கான இயக்கம் (Women rights) தொடங்கப்பட்டாலும் 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்தான் பெண்ணின் இருப்பு நிலை குறித்த அடைமொழி, பண்பு சார்ந்து தங்களைத் தாங்களே பேசிக்கொள்வதும், சமூக பொருளாதார நிலைகுறித்த கேள்விகள் தொடர்ந்து தீவிரமாகச் சிந்திக்கப்பட்டன.

இந்தியாவில் “பெண்ணியம்” என்ற சொல் 1960க்குப் பிறகே அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் இந்தியா அல்லது தமிழக சமூக-பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்ப இது கோட்பாடாக வரையறுக்கப்பட்டுள்ளதா? என்பதை இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.

முதலில், கோட்பாடு என்பது என்ன? கோட்பாடு என்பது ஒரு முறையான சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கோர்வையாக விளக்கக்கூடிய ஒரு கூட்டுச் சிந்தனை என்று வரையறுக்கலாம் தர்க்க அடிப்படையில், பெண்ணின் சமூக நிலை சார்ந்த ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட முறையான பழக்க வழக்கங்களை, பண்பாட்டை கருத்தாக்கமாகப் பார்த்தல் தொடர்கிறது. ஆண் X பெண் என்ற பாலினம் இயற்கை/கலாசாரம் (Nature/Culture) சார்ந்த ஆணின் ஆளுகையில் பெண்வாழ்தல் என்ற மரபுப் பார்வையை விடுத்து, புதுக்கோட்பாடு வரையறுக்க வேண்டிய காலத்தேவை ஏற்பட்டுள்ளது. வரலாற்று அடிப்படையிலும் மொழிவாயிலாக, இலக்கியத்தில் பெண்ணின் உடல்/மனம் (Body/Mind) ஆணின் புனைவாக இருப்பதை மறுவாசிப்புக்குட் படுத்துகிறது பெண்ணியம். ஆணின் ஆதிக்கம் ஒரு கட்டமைப்பாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இந்த ஆதிக்கப் பரப்பில், தனது வெளியைத் தீர்மானிக்க முடியாமல் வாழும் பெண், ஆணின் அடக்குமுறைக்கு எதிராகக் கலகக்குரலை எழுப்புகிறான். ஆணுக்கு எதிரான நிலைபாட்டை முன்னெடுக்கிறாள். உதாரணமாக,

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த / நிச்சமும் பெண்பாற்குரிய”

(தொல்-பொருள்-களபு.8)

என்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்கப் பண்பாட்டு உருவாக்கத்தை உணர்ந்து கொள்ளலாம். சங்க இலக்கியத்திலும், தலைவி தலைவனுடன் நேரிடையாகக் கூற்று நடத்த இயலாத தன்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதற்கு, தோழி, தலைவியின் உணர்வைத் தலைவனிடம் எடுத்துச்சொல்லும் தகுதி பெறுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். பிறருக்கு எடுத்துரைக்க இயலாததானே மனத்தில் அனுபவிக்கக் கூடியதை அகம் என்று சுட்டுவர். ஆயினும், தோழி, தலைவியின் அக உணர்வை எடுத்துச்சொல்லும் தகுதி பெறுவதுதான் சங்க இலக்கியத்தின் தனித்தன்மையாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியை ஆய்ந்து பார்த்தால், பெண்ணின் சமூகத் தகுதிநிலை புரியும். அதாவது தலைவி நேரிடையே தலைவனிடம் பேசுவது தவிர்க்கப்படுவதைக் “கற்பு” என்ற அடையாளத்துடன் பார்க்கப்படுகிறது. ஆனால் தோழி நேரிடையே தலைவனிடம் பேசமுடிகிறது.

எனவே, சங்க இலக்கியத்தின் பெண், தலைவியாக வரும்போது கற்புடையவளாக எண்ணுவதும், தோழியாக வரும்போது, தலைவியின் உணர்வுகளை எடுத்துச் சொல்லும் பண்புடையவளாக அங்கீகரிக்கப் படுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு பெண், இருவேறு பங்குநிலைப் பரிமாணம் பெறுவது சங்க இலக்கியத்தில் பேசப்பட்டிருக்கும் சூழலில் பெண்ணியம் என்பது மேலைநாட்டுக் கோட்பாடு என்றும், அது இந்தியாவில் வேரூன்ற முடியாமல் இருப்பதற்குப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து போராட, எந்தப் பிரச்சினையும் தீவிரமாக்கப் படவில்லை என்றும் கூறும் கருத்தை மறுத்து, இந்தியச் சூழலில் குறிப்பாக, மாநில/மொழி/சாதி அடிப்படையில் தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ளப் பெண்ணியத்திற்கான விதை சங்க இலக்கியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

ஏனென்றால், மேலை நாட்டிலிருந்து இந்தியச் சூழலுக்கு வருவித்துக் கொள்ளும் கோட்பாடுகள் இந்த மண்ணின் சூழலுக்கு ஏற்றவாறு பொருத்திப் பார்க்கப்படாமல் அப்படியே மேலைநாட்டுக் கலாசாரத்தோடு புரிந்து கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, இந்தியாவில் காலூன்ற எழுந்த மார்க்சியப் போராட்டம் (அங்கே பேசப்பட்ட) வர்க்கச் சிந்தனையை முன்வைத்துப் பேசப்படுகிறது. முதலாளி x தொழிலாளி, பணக்காரன் x ஏழை என்ற வர்க்கச் சிந்தனையை முன்னிலைப் படுத்திப் பார்க்கப்படுவதால், இந்தியாவில் இது வேர்கொள்ள இடர்ப்படுகிறது. காரணம், இந்திய அமைப்பு வருணத்தை உள்ளடக்கியது. சாதியமும், பார்ப்பனீயமும் இங்கே ஆதிக்கம் பெற்றவை. சாதியப் பார்வை மார்க்சியக் கோட்பாட்டில் இடம் பெறவில்லை. அதனால்தான் மேலை நாட்டிலிருந்து பெறப்பட்ட எந்தக் கோட்பாடும் இந்தியாவில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதேபோன்று தான் பெண்ணியமும் அணுகப்படுகின்றது.

இங்கே, பெண்ணின் பிரச்சினையைச் சாதியக் கட்டமைப்பை உள்ளடக்கிப் பேசியிருந்தால் பெண்ணிற்குக் கொடுமை அதிகரித்திருக்காது. பெண், சட்டத்தின் துணையோடு உரிமைப் பெற்றிருப்பாள். இந்திய மண்ணின் விழுமியத்தோடு பெண்ணின் இருத்தல் விசாரணைக்குட்பட்டிருக்கும் இது நடைபெறாமல் போனதற்கு, ஆண் என்பவன் ஆண்மை உடையவன்; வீரமுடையவன்; ஆண் அழக்கூடாது; குடும்பத்தைப் பாதுகாக்கவேண்டும்; வாரிசைப் பெற்றுத் தரும் உரிமை ஆணைச் சார்ந்தது; ஆண் அறிவுடையவன். அறிவு அதிகாரத்தை வழங்குகிறது. அதிகாரம் ஆணைச் சார்ந்தது என்று ஆணின் பண்புகள் நேர்க்கோட்டில் புரிந்துகொள்ளப்படுகின்றன.

இதற்கு நேர் எதிராக, பெண் அஞ்சி அடங்கி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்கக்கூடாது. உரத்தக்குரலில் பேசக்கூடாது. ஆணிடம் நேருக்குநேர் நின்று பேசக்கூடாது. உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இல்லறத்தை இனிதே காக்கவேண்டும். கணவன் வேறு பெண்ணை நாடிச் சென்றாலும் அவன் மீண்டும் இல்லம் வரும்போது, பெண் அவனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்க்கோட்டில் பெண்ணின் பண்புகள் ஆண்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளன. எனினும் இவற்றிற்கு எதிராக, பெண்கள் தங்கள் எண்ணங்களைப் பதிவு செய்துள்ளனரா என்பதைச் சங்க இலக்கியத் துணையுடன் ஆய்வுக்குட்படுத்தலாம்.

சங்க இலக்கியத்தில் பெண்ணின் உணர்வுகளை அகப் பாடல்கள் உணர்த்துகின்றன. அவர்களின் அந்தரங்க உணர்வுகள் மொழி மூலம் எடுத்துச் சொல்லப்படுகின்றன. மொழி, முக்கிய ஆளுமை வகிக்கிறது. மொழி மூலம் பெண் பிரச்சினைகள் பொதுமைப்படுகின்றன. பெண்கள் விளிம்பு நிலையில் வாழ்வது ஏன்? என்ற வினாவை மையப்படுத்தி சங்க இலக்கியத்தை ஆய்வு செய்தால் பெண்ணியத்தைக் கோட்பாடாக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொள்ளலாம். பெண் தன்னின் புறவாழ்வை அகத்தில் ஏற்றிச் சொல்லுதல் சங்க இலக்கியத்தின் மையமாக இருக்கிறது. கூரையின் ஓட்டை வழியே ஒளி ஊடுருவி, வீட்டின் இருளை அகற்றுவதைப் போல, பெண்ணின் விளிம்புநிலையை இருள் சூழ்ந்த வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டுவர பெண்ணியம் அவசியமாகிறது.

எனினும் பெண்ணியச் சிந்தனை சங்க இலக்கியத்தில் பதிவாகியிருக்கிறது என்று கூறமுடியுமா? என்றால் முடியாது. பெண் சமூகத்தால் ஒடுக்கப்பட்டிருக்கிறாள், கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது. ஓட்டுரிமை வழங்கப்படவில்லை என்பதையெல்லாம் உணர்ந்து பெண்ணிற்காகப் போராடிய ராஜாராம் மோகன்ராய், உள்ளிட்ட சமூகச் சீர்திருத்த சிந்தனையாளர்களின் கருத்துக்களைப் பெண்ணியமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதுபோலத்தான் சங்க இலக்கியத்தில் பெண்ணின் உரிமைகள் பேசப்பட்டிருக்கின்றன. ஒளவையார், வெள்ளிவீதியார், நச்செள்ளையார், காக்கைப் பாடினியார் ஆகியோரின் பாடல்கள் இதற்குச் சான்றாகும். பெண்பாற் புலவர்களின் மொழி, இன்றைக்குப் பேசப்படும் பெண்ணியத்திற்கான அனைத்துத் தன்மைகளையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளன.

ஆண் X பெண் என்ற இருமை எதிர்வுக்குள் இலங்கும் பெண்ணின் அடையாளம், பெண் உரிமை கோரல், பெண்ணின் உணர்வுகளை அப்படியே பதிவு செய்தல் எல்லாம் பெண்ணிய வாசிப்புக்குட் படுத்தப்படுகின்றன. ஆண் X பெண்ணிடையே உள்ள கலாசார அடையாளங்கள் கட்டுடைக்கப்படுகின்றன. அமைப்பியல், பின்-அமைப்பியல், பின் நவீனத்துவம் ஆகிய கருத்தாக்கத் தளங்கள், அர்த்தங்களைக் கட்டுடைத்து, புதிய அர்த்தத் தளத்தை உருவாக்கிக் கொள்ளத் துணைபுரிகின்றன. இந்த நிலையில் வாழ்வு, உடைமை, மனம், அறிவு போன்றன யாவும் மாற்றம் பெறுகின்றன. அத்துடன் மொழி, இலக்கியம், பண்பாடு போன்ற தளங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளன.

பெண்ணியத்தை, சங்க இலக்கியக் கோட்பாடாக பார்க்கும் பார்வைக்கு மேற்சொன்ன மாற்றம் உறுதுணை நல்கும். இதற்கு மொழி ஒரு கருவியாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இலக்கியத்தில் பெண் மீதான புனைவுகளும், பெண் தன் வலியை, வேட்கையைப் பதிவு செய்திருப்பதும் மொழிமூலம் சிதைக்கப்படுகிறது. உதாரணமாக, பெண்ணின் மொழி மௌனம் நிறைந்ததாகப் பார்க்கப்படுவதை, மௌனம் அதிர்வை ஏற்படுத்துவதை மறுவாசிப்புக்குட்படுத்துகிறது. பெண்ணியம் என்ற முனைவர் தேவதத்தா (“மௌனத்தின் அதிர்வுகள் - பெண்” உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 2005) கூறும் கருத்தை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம். பெண் எழுத்து, பெண் மொழிக்குச் சான்றாக ஒளவையாரின் பாடல்களைச் சுட்டலாம். “இவரின் பல பாடல்கள் பெருந்திணை வயப்படுவன என வ.சுப. மாணிக்கம் கருதுகின்றார்.

இவர், பெருந்திணையின் நான்கு துறைகளில் ஒன்று “தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்” என்பது தலைவியின் காமம் ஒரு தலைக்கொருகால் பெருகிச் செல்வதன்று தணிவதில்லை. தோழி ஆற்றியும் அடங்குவதில்லை. ஊரெல்லாம் அறிந்து பேசும்படிக்கு அவள் காமம் வெளிப்படையானதாகும். (அகம் 273) என்று முனைவர் மு. பழனியப்பன் கூறுவது அவதானிக்கத்தக்கது. மேலும், அவரே, குறுந்தொகை 102 ஆம் பாடலிலும், ஒளவையாரின் கடக்க இயலா காமவேட்கைப்பட்ட தலைவியைக் காட்டி, “என் காமம் வானளவு உயர்ந்தது, அதை என் காதலன் முற்றத் தணிக்கவில்லை” எனக் கூறுவதாக எடுத்துரைக்கிறார். (மு. பழனியப்பன், பெண்ணிய வாசிப்பும் பெண்ணெழுத்துத் திறனாய்வும், ப. 68) கள்ளின் சாடி அன்ன இளநலம் என்று நற்றிணை 296ஆவது பாடல் தலைவியின் காமம் கள்ளைப் போன்றது; மயக்கக் கூடியது என்று சுட்டுகிறது.

அகநானூற்றில், முலையிடைத் தோன்றிய நோய் (அகம்-273) என்று கூறப்பட்டுள்ளது. இதில் பெண் காமத்தின் வெளிப்பாட்டைப் பெண்ணின் மார்பு வெளிப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. காமம் ஆணுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டது என்ற கருத்தாக்கம் ஒளவையார் பாடலில் கட்டுடைகிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணின் காமம்) பெண்ணின் உடல் நுகர்வுக்குட்பட்டிருந்தது. பெண்ணியக் கோட்பாட்டை உருவாக்க, பெண்ணின் உடல் நுகர்வுக்குரியதில்லை என்ற மீட்டுருவாக்கச் சிந்தனை பெண்ணியத்தை உருவாக்க உதவும். பெண்ணினுடைய உள்மன உணர்வுகளை, ஆழ்மன உணர்வுகளை, நனவிலா மனத்தை வெளிப்படுத்த மொழி தடையாக இருப்பதில்லை. ஆனால் பெண், அப்படி கட்டற்று வெளிப்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதைப் பல சங்கப் பாடல்களால் உணரலாம். எனினும் ஒளவை, வெள்ளிவீதியார் பாடல்களில் அகமொழி இயல்பாய் வெளிப்பட்டிருந்தாலும் எண்ணிக்கையில் குறைவு. ஆனால் வீரியமிக்கப் பாடல்களாக இருப்பதை மறுத்துவிட முடியாது.

பெண்களின் அகஉணர்வுகள் ஆண்களின் மொழிவழி வெளிப்படுத்தப்பட்டதைப் போல, அவர்களால் உருவாக்கப்பட்ட எல்லைக்கு வெளியே நின்று பெண்கள் தங்கள் உணர்வுகளைப் பதிவு செய்வது விமரிசனத்திற்குட்படுகிறது. இந்த முரணைப் பெண்ணியவாதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதற்கு, எனது அனுபவம் எனது ப்ரத்யேக மூலப்பொருள். இதிலிருந்துதான் என்னடைய கவிதை தீர்மானிக்கப்படுகிறது. அக பெண்களுக்கே உரிய அனுபவம் இருக்குமே அதிலிருந்துதானே அவர்களின் கவிதைமொழி உருவாகக் கூடும் (சுகுமாரன், திசைகளும் தடங்களும், V. 51) என்கிற சுகுமாரன் கூறும் கருத்து, பெண்ணியக் கோட்பாட்டை வரையறுக்க உதவிடும்.

பெண் உடலைப் பெண்ணிடமிருந்து பிரித்து அதை ஆணினுடைய உடலாகப் பார்க்கும் ஆணியக் கட்டமைப்பைச் சிதைத்துப் பெண் தன் உடலை மீட்பதில் பெண்ணியக் கோட்பாடு உருவாக்க முடியும்.
பெண் உடல் மீட்புக்கு,

விசும்பு விசைத்து எறிந்த கூதனங் கோதையின் / ... ... / நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் / நம்முடைய உலகம் உள்ளார் கொல்லோ? / முலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுலை / அசைவுடை நெஞ்சத்து உயவுத்திரன் முடி / ஊரோர் எடுத்த அம்பல் அம்சினை / ஆராக்காதல் அவிர்தளிர் பரப்பிப் / புலவர் புகழ்ந்த நாண் இல் பெருமரம் / நிலவரை எல்லாம் நிழற்றி / அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே” (ஒளவை, அகம்-273)

முலையிடை முளைவிட்ட நோய் நெஞ்சில் /வேர்விட்டு, அம்பலாகிய கிளை கிளைத்து / காதல் தளிர் பரப்பி, புலவர்கள் புகழும் / நாணம் இல்லாத பெரிய மரமாக மாறி / நிலம் முழுவதும் பரவி அலரையும் அரும்பையும் / பூத்து நிற்கின்றது. நோய்க்குக் காரணமான / தலைவன் மட்டும் வரவில்லை என்று கூறுகிறது
மேற்சொன்ன பாடல்.மற்றொரு பாடலில்

முட்டுவென் கொல் தாக்கு வென்கொல் / ..... .... / அலமரல் அசைவளி அலைப்பவென் / உயவு நோய்றியாது துஞ்சும் ஊர்க்கே (ஒளவை, குறுந் - 281).

காமம் மிகுதியாக, முட்டிக் கொல்வேனோ எனப் பெண் புலம்புவதாக மற்றொரு பாடல் இடம் பெற்றுள்ளது.
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி /இடைப்படை யழுவத்துச் சிதைந்த வேறாகிய / சிறப்புடையாளர் மாண்பு கண்டருளி / வாடுமுலை யூறிச் சுரந்தன / ஓடாப் பூட்கை விடலைத் தாய்க்கே
(ஒளவை-புறம்: 295)

போர்க்களத்தில் இறந்த மகனை, அவனது வீரத்தைக் கண்டு மகிழ்ந்தபோது அவளுடைய வற்றிய முலைகளில் பால் ஊறிச் சுரந்தது என்று ஒளவை பதிவு செய்திருப்பது தனி மனித காமம் X சமூகக்காதல் என்ற அடிப்படையில் சமூக விழுமியமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கன்னும் உண்ணாது கலத்தினும் படாஅது / .... .... /பசலை உணீய வேண்டும் / திதலை அல்குல் என் மாமைக் கவினே -- (வெள்ளிவீதியார், குறுந் - 27) என்ற பாடலிலும்

பெண்ணுடல் காமவயப்பட்டிருக்கும்போது உடல் மாற்றமடைவதை அந்தரங்கமான மாற்றத்தை
விரல்கவர்ந்து உழந்த கவர்வின் நலியாழ் / யாமம் உய்யாமை நின்றன்று / காமம் பெரிதே கலைஞரே இலரே
(வெள்ளிவீதியார், நற் - 335)

என்ற பாடலில் அலை பொங்க, கரையுடைத்துப் புறப்படும் கடல், மலர்ந்து மணம் வீசும் தாழைமலர், கரிய பனையில் மோதும் காற்று, எலும்புருக்க கத்தும் அன்றில் பறவை, யாமம் வரை வாசிக்கப்படும் யாழ் எல்லாவற்றிலும் பெரியது என் காமம் என்று கூறும் பாடலிலும் கூறப்பட்டுள்ள பெண்ணின் காமம் பெண்ணிற்குக் கூறப்பட்டுள்ள கற்பு ஒழுக்கத்திற்கு மாறானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கற்பெனப்படுவது / உயிரினும் சிறந்தன்று நாணே; நாணினும் / செயிர்திர் காட்சிக் கற்பு சிறந்தன்று எனத் / தொல்லோர் கிளவி (தொல்-3 நூற்பா-23)

என்ற நூற்பாவில் கற்பின் திறம் சுட்டப்படுகிறது. ஒரு பெண் தன் உயிரைவிட நாணத்தைப் போற்ற வேண்டும். அந்நாணத்தை விட கற்பு சிறந்தது என்பதை உணரவேண்டும். அதைப் பாதுகாக்கவேண்டும். ஆதலால் கற்பைப் பேணுவதற்கு உயிர் நாணம் இவற்றைவிட வேண்டி இருந்தால் தயங்குதல் கூடாது என்று தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. எனவே கற்பொழுக்கம் தலைவனைப் பேணுதல், அவனை மதித்தல், அவனை வழிபடுதல், அவன் பரத்தமைப் பேணினாலும் பொறுத்திருத்தல் என்றளவில் பெண்ணுக்கு வலிந்துரைக்கப்பட்ட கற்பு கோட்பாடு மேற்குறிப்பிட்ட பெண்பாற் புலவர்களின் பாடல்களில் மாறுபடுகிறது. கற்பு என்பது புனிதமாகப் பார்க்கப்படுகிறது. காமம் சமூக நெறிமுறைக்கு எதிரானதாக விளக்கப்படுகிறது.

ஆண் உறுதிபடுத்திய கற்பு கருத்தாக்கம் மற்றும் பெண் தங்கள் உடல்சார்ந்து சமூகத்திற்கு வெளிப்படையாகப் பதிவு செய்த காமம் கருத்தாக்கம் (கற்பு X காமம்) கற்பைப் பெண்ணுக்குரியதாகவும், காமம் ஆணுக்குரியதாகவும் இருப்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பெண்ணின் காமம் அலராக்கப்படுகிறது. ஆணின் காமம் அதிகாரமாக்கப்படுகிறது. அலர், பெண்ணைப் பழிக்கப் பயன்படுகிறது. ஆணிற்கு அதுவே மதிப்பை நல்குகிறது. எனவே, சங்க இலக்கியத்தில் பெண்ணியத்தைக் கோட்பாடாக்க எடுக்கும் ஆய்வுக்கு கற்பு X காமம் கருத்தாக்கம் அடிப்படையை அமைத்துத் தருகிறது. இதன்மூலம் புனிதங்கள் கட்டுடைக்கப்படலாம். பெண்ணின் மீட்சி புதுப்பிக்கப்படலாம். பெண் உடல் அதிகாரப் படுத்தப்படலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP