புகைக்கல்லில் ஒரு புகைச்சல்
சேலம் பா. அன்பரசு
‘ஒகேனக்கல்’ என்னும் கன்னட மொழிச் சொல்லின் வடிவமே ‘புகைக்கல்’ என்பது.
பென்னாகரத்தில் செயல்பட்டுவரும் ஒகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக்குழுவைச் சேர்ந்த திரு. ந. நஞ்சப்பன் இந்நூலை எழுதியுள்ளார். அண்மையில் ஏற்பட்ட அருவியின் எல்லைப் பிரச்சனையின் விளைவினால் இது எழுதி வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. தா. பாண்டியன் அவர்களின் முன்னுரையுடன் நூல் தொடங்குகிறது. நூல் எளிய நடையில் யாவரும் படிக்கும்படி அமைந்துள்ளது பாராட்டப்பட வேண்டியது.
1956 இல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகம் மற்றும் கர்நாடக எல்லை காவிரி ஆற்றின் மையப்பகுதியே எல்லையாக வகுக்கப்பட்டது. இதனால், தமிழர்கள் நிறைந்த அளவில் வாழும் தௌதள்ளி, தண்டள்ளி, மாட்டள்ளி, இராமாபுரம், ஒடுக்காம் பள்ளம், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் ஆகிய பகுதிகள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.
மாதேசுவரன் மலை, பொன்னாகி மலை, நாகமலை, நாகமலையிலுள்ள நாகாளம்மன் கோயில்களும் பறிபோய் விட்டன. இக்கோயில்களில் பூசை செய்யும் பழங்குடி மக்களாகிய சோளகர்கள், பூசாரிகளாகிய லிங்காயத்து ஐயர்களும் தமிழகப் பகுதிகளில் இருந்து சென்றவர்களே.
நூலில் ஆசிரியர் ஆலம்பாடி கோயில் சிற்பங்கள் சங்கபாடி கோட்டை, சூலம்பாடிக் கோட்டை இவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவை சோழர்கள் தங்கள் மெய்கீர்த்திகளில் குறிப்பிட்டுள்ள சங்கபாடி நுளம்பாடி ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் கூறுவதும் அஞ்செட்டிப் பகுதி சங்ககால அதியமான் நெடுமான் அஞ்சியின் பெயரால் ஆகியது என்று கருதுவதும் ஆய்வுக்கு உரியன. சோழர்கள் ஒகேனக்கல் வழியாகவே கன்னட நாட்டிற்குப் படை கொண்டு சென்றார்கள் என்கிறார் ஆசிரியர்.
இரண்டாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில் எப்போதும் கன்னட அரசு ஆட்சி இப்பகுதியில் இல்லாதிருக்க தற்போது எல்லை உரிமை கொண்டாடுவது வியப்புக்குரியது எனக் கருதுகிறார் ஆசிரியர். நூலாசிரியர் ஒகேனக்கல் அருவியின் எந்த எல்லையையும் வெவ்வேறு பெயர்களில் அமைந்த அருவிகளையும் குறிப்பிட்டுள்ளார்.
ஐவாளைபாணி, பச்சைப்பாணி, பெரிய நீர் வீழ்ச்சி, ஐந்தருவி, சின்னபாணி, கூட்டாறு, காவிரி இரண்டாகப் பிரியும் இடத்திற்கு நடுவிலிருக்கும் கிடைத்திட்டு ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளதைப் படிக்கும் போது அவர் இந்த அருவியை எந்த அளவு கூர்ந்து கண்ணாலும், மனத்தாலும் அளந்திருக்கிறார் என்பது தெளிவாக விளங்குகிறது.
ஆட்சிக் குட்டியைப் புலி ஒன்று துரத்திக் கொண்டுவர ஆடு ஒகேனக்கல் அருவியின் பள்ளமான பகுதியை தாண்டி விட்டதாக இருக்கும். ஒரு செவிவழிச் செய்தி ‘சின்னபாணி’என்னும் அருவியுடன் தொடர்புடையது என்கிறார். சின்னவாணி, பெரியவாணி ஆகியவை 300, 400 அடிக்கு மேல் ஆழம் உடையவை என்னும் குறிப்பு நம்மை வியப்பளிக்கிறது.
ஒகேனக்கல் நீர்மின் திட்டம் காமராசர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. பிறகு ஆட்சி மாற்றத்தின் போது கைவிடப்பட்டது என்று குறிப்பிடுகின்றார். காவிரியம்மன் கோயில் பிற்காலத்தில் தேசி நாதீஸ்வரர் கோயில் ஆகியது. ஒகேனக்கல் தொங்குபாலம் ஊடுறுவல்காரர்களுக்குக் குறுக்கு வழியாகப் பயன்பாட்டு வருவதை நூலாசிரியர் அனுபவத்தினால் கண்டறிந்து கூறியுள்ளார்.
அண்மையில் உருவான தமிழக - கர்நாடக எல்லைப் பிரச்சினையில் இரு தரப்பு அரசு அலுவலர்களும் கலந்து கொண்ட பின் கர்நாடக அலுவலர்கள் பிரச்சினைக்குள்ளான அனைத்தும் தமிழகப் பகுதியிலே இருப்பதாக ஒப்புக் கொண்டுள்ளன என்று தெளிவு படுத்தியுள்ளார்.
எல்லைப் பிரச்சினையும் உருவாக மூல காரணம் எது என்பதை நூலாசிரியர் தமது நூலில் வெளிப்படையாகவே கூறியுள்ளார். 1993 ஆம் ஆண்டில் பரிசல் துறை 3,25,000 ரூபாய்க்கு ஏலம் போனது. அதை ஏலத்தில் எடுக்க இயலாத ஆறுமுகம் என்பவர் செய்த சூழ்ச்சியால்தான் அனைத்தும் நிகழ்ந்துள்ளன. கோபிநந்தம் மண்டல பஞ்சாயத்துத் தலைவரைச் சந்தித்து ரூ. 400/-க்கு ஏலம் எடுத்ததாக இரசீது பெற்றுத் தமிழகத்திற்குச் சொந்தமான பகுதிகளில் பரிசல்கள் விட்டு இலாபம் கொண்டார்.
இது வரை பொதுமக்களுக்குத் தெரியாத பல செய்திகளைத் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். ஆடு தாண்டுக்கால்வாய் (மேக நாட்டு) தமிழக எல்லையில் உள்ளது போல கன்னட எல்லையிலும் ஒன்று உண்டு. இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் கன்னட மக்கள் சிலர் தமிழக எல்லையில் இருக்கும் ஆடு தாண்டுக் கால்வாயும் தங்கள் எல்லைக்கு உட்பட்டதாகக் கருதுகிறார்கள். இது பற்றி இரு சாராரும் கோப-தாபங்களுக்கு உட்படாமல் சிந்தித்துச் செயல்படவே வேண்டும் என்பது நூலாசிரியர் வேண்டுகோள்.
ஒகேனக்கல் அருவிப்பகுதியில் மீண்டும் அளவீடு செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது சில கர்னாடக மக்களின் ஆதங்கம் இந்த முடிவை எவரும் ஒத்துக் கொள்ளக் கூடாது என்பதற்குக் கன்னடமாநிலம் சார்ந்த இந்திய ஜெனரல் சர்வேயர்க்ள் டாக்டர் ஹரி நாராயணன், 1974=75 ஆம் ஆண்டுகளில் பிரச்சினையாக உருவாக்கப்பட்ட நிலப்பரப்பும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிப் பகுதிகளும் தமிழக எல்லைக்குள் அடங்கியுள்ளதைத் தெளிவுபடுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
புகைக்கல்லில் ஒரு புகைச்சல்
ஆசிரியர் : ந. நஞ்சப்பன், ஒகேனக்கல் உரிமைப் பாதுகாப்புக் குழு, அமைதி இல்லம், பென்னாகரம், தருமபுரி மாவட்டம், விலை : ரூ. 50/-.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|