ஜீவா நூற்றாண்டு விழாவும் ஜீவா நூல் வெளியீட்டு விழாவும்
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலமும் இணைந்து நடத்திய ஜீவா நூற்றாண்டு விழாவும், ஜீவா நூல் வெளியீட்டு விழாவும் 12-10-2007 அன்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
தொடக்க விழாவில் பேரா. மு. மணிவேல் வரவேற்புரை நிகழ்த்த, பேரா. இரா. மோகன் தலைமையேற்க, நாவலாசிரியர் பொன்னீலன் தொடக்கவுரை ஆற்றினார். தமது தொடக்க உரையில் பொன்னீலன்: “வரலாறு தொடர்ச்சியாக வாழையடி வாழையாகக் கீழே போனால்தான் அந்த வரலாறு நம்மைச் செயல் ஊக்கம் செய்யும், அந்த வகையில் இங்கே தமிழ் படிக்கின்ற மாணவர்களுக்கும், மூன்றாம் தலைமுறையினருக்கும் ஜீவாவைக் கொண்டுசெல்ல இந்த மாதிரி விழாக்கள் பயன்படும். இங்குக் கருத்தரங்கமும், நூல் வெளியீட்டு விழாவும் ஏற்பாடு செய்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தையும், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தையும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் தமிழகம் இருபதாம் நூற்றாண்டில் பல பெரியவர்களை நமக்குத் தந்திருக்கிறது. அந்த மனிதர்களையும் தேடிப்பார்க்கும் போது ஜீவாவை நாம் வித்தியாசப்படுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் பரிமாணமுள்ள ஒரு முழுமையான மனிதராக வாழ்ந்தார். வாழ்நாள் முழுதும் தேடல்களுடனே வாழ்ந்தார். அவர் தேசியம், பகுத்தறிவு, பொதுவுடைமை, பெண்ணியம் ஆகியவற்றின் ஊடாகப் பயணம் செய்தார். தமிழில் மார்க்சியம் உருவானதில் ஜீவா முன்னோடியாக இருந்தார். இப்படியாக இந்த மா மனிதனை புரிந்துகொள்ள இந்நூல்கள் உதவும்” என்றார்.
அடுத்து நிகழ்ந்த முதலாம் அமர்வில் ஜீவாவின் மொழிப்பார்வை என்ற தலைப்பில் பேரா. இராம சுந்தரமும், ஜீவாவின் இதழியல் பணி என்ற தலைப்பில் பேரா. இராகுலதாசனும், ஜீவாவின் பாடல்கள் என்ற தலைப்பில் முனைவர் செ. சாரதாம்பாளும், ஜீவாவின் பாரதி ஆய்வுகள் என்ற தலைப்பில் பா. ஆனந்தகுமாரும் கட்டுரை வாசித்தனர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நடந்த இரண்டாம் அமர்வுக்கு ம. திருமலை தலைமை தாங்கினார். ஜீவாவின் தத்துவப் பின்னணி என்ற தலைப்பில் ந. முத்துமோகனும், ஜீவாவும் தொழிலாளர்களும் என்ற தலைப்பில் அருணன், முனைவர் வீ. ரேணுகாதேவியும் கட்டுரை வாசித்தனர். மாலையில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் சிங்காரம் அவர்கள் தலைமை தாங்கினார். ப. ஜீவானந்தம் ஆக்கங்கள் (இரண்டு தொகுதிகள்) என்ற நூலினை மாண்புமிகு பள்ளிக் கல்வியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
இவ்விழாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் தோழர் தா. பாண்டியன் வாழ்த்துரை வழங்கும் போது ‘பொதுவுடைமைக் கருத்துகளை முதலில் எழுதிய தமிழன் ஜீவா. அவர் எல்லாச் சிந்தனையாளர்களையும், கருத்தோட்டங்களையும் குறிப்பிட்டு அழகு தமிழில் எழுதியுள்ளார். வருங்காலச் சந்ததியினர் இந்த நூல்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய கவிஞர் தேவேந்திரபூபதி தனது உரையில் கடித இலக்கியத்தின் முன்னோடியாக ஜீவாவைச் சொல்லலாம். அவருடைய ஐம்பத்தொன்பது கடிதங்கள் இன்றைக்கும் சம காலத்திற்கும் பொருந்துவதாக உள்ளன. இந்தப் புத்தகங்களின் மூலம் ஜீவாவின் ஆளுமையை முழுமையாகப் புரிந்துகொள்ளமுடியும். இந்தப் புத்தகத்தை வெளியிட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு தமிழ்ச் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது என்றார். மேலும் இந்தப் புத்தகங்களுக்கு அரசு நூலகத்துறை ஆதரவு தரவேண்டும். பேரா. நா. வானமாமலையின் அனைத்துப் படைப்புகளும் தொகுப்பாக வரவேண்டும் என்றார்.
இந்நூலின் தொகுப்பாசிரியர் வீ. அரசு தம்முடைய ஏற்புரையில், “தமிழ்நாட்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஆளுமை மிக்க மனிதர்களுக்கு நினைவுச் சின்னம் ஏற்படுத்தும் வகையில் ஜீவாவை விரிவாக வாசிக்கவும், அவரோடு உரையாடவும் இந்நூல் உதவும். இந்த நூல்கள் வெளிவர மிகப்பெரிய பின்புலமாக இருந்தவர்கள் இரா. நல்லகண்ணும், என். சி. பி. எச் நிர்வாக இயக்குநர் இராதாகிருஷ்ண மூர்த்தியும்.
இவர்கள் தம்மோடு வாழ்ந்த தோழனின் பதிவைத் தமக்குக் கிடைத்த அச்சு ஊடகத்தின் மூலமாக இப்போது அரங்கேற்றியிருக்கிறார்கள். ஜீவாவை நாம் இப்போது புரிந்துகொண்டதிலிருந்து இன்னும் விரிவாக இந்தத் தொகுப்பின் மூலம் உணரலாம்” என்றார்.
நூலை வெளியிட்டுப் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தம் உரையில், “இணையற்ற தலைவர்களில் ஒருவரான நூற்றாண்டு விழா நாயகரான ஜீவாவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகப் பெரும் பேறாகக் கருதுகிறேன். என். சி. பி. எச். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய நிறுவனம்.
இன்று பதிப்புலகம் மிகப் பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் நாம் இருக்கும் கிராமங்களுக்கு என். சி. பி. எச். கொண்டுவந்து சேர்த்தது. இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலே ஒரு மிகப் பெரிய தலைவனின் எழுத்துக்கள் வந்திருப்பதை நாம் எல்லோரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.
நிறைவுப் பேருரை ஆற்றிய என். சி. பி. எச். இயக்குநரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரு மான இரா. நல்லகண்ணு தமது உரையில், “ஜீவா பொது வாழ்க்கைக்கு வந்தபோது எப்படி இருந்தாரோ அப்படியே இறுதிவரை வாழ்ந்தவர். ஐக்கியத் தமிழகம் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்ச் சமூக அறிஞர்களை நேசித்தவர்.
தொகுப்பு என்பது அந்தந்த மனிதர்களின் முழுமையான ஆளுமையைப் புரிந்துகொள்ள முடியும் என்றார். அந்த வகையில் ஜீவா தொகுப்பு முக்கியமானது. மேலும் இந்நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்த, கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். விழாவில் மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|