Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
நவம்பர் - டிசம்பர் 2006

பிடெல் காஸ்ட்ரோ எண்பதாண்டு நிறைவு விழாவும் 8 நூல்கள் வெளியீட்டு விழாவும்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் பிடெல்காஸ்ட்ரா 80வது ஆண்டு நிறைவு விழாக்குழுவும் இணைந்து நடத்திய பிடெல் காஸ்ட்ரோவின் 81வது பிறந்த நாள் கூட்டமும் எட்டு நூல் வெளியீட்டு விழாவும் 2006, செப்டம்பர் 3 அன்று தேவநேயப்பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றன.

காலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நிழல் வண்ணன் உருவாக்கிய “மார்க்சியத்தின் அடிப்படைகள்” என்னும் நூலைச் சென்னை காரல்மார்க்ஸ் நூலகத்தை சேர்ந்த ச.சீ. கண்ணன் அவர்கள் வெளியிட தமிழ்நாடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் துணைச்செயலாளர் தேவபேரின்பன் பெற்றுக்கொண்டார். சே. கோச்சடை, த.வெ. நடராஜன் ஆகியோர் உருவாக்கிய “நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்” என்னும் நூலைத் தமிழக இயற்கை உழவர் இயக்கத்தைச் சார்ந்த திரு. நம்மாழ்வார் வெளியிட, தமிழக உழவர் தொழில் நுட்பக் கழகத்தைச் சேர்ந்த திரு. பாமயான் பெற்றுக்கொண்டார். தியாகு எழுதிய “கியூபா: கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம்” என்னும் நூலை திரு. ஆர். நல்லகண்ணு வெளியிட திரு. ச.சீ. ராஜகோபாலன் பெற்றுக்கொண்டார்.

சே. கோச்சடை உருவாக்கிய “மக்கள் மருத்துவம்: கியூபாவின் தனித்தடம்” என்னும் நூலை மருத்துவர் திரு. செ.நெ. தெய்வநாயகம் வெளியிட மருத்துவர் இ. ரவிந்திரநாத் பெற்றுக்கொண்டார்.

இரா. நடராஜன் மொழிபெயர்த்த “சூறாவளியும் அடிபணியும்” என்னும் நூலை திரு. எஸ்.ஏ. பெருமாள் வெளியிடத் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தைச் சார்ந்த திரு. வி.பி. குணசேகரன் பெற்றுக் கொண்டார். லதா ராமகிருஷ்ணன் உருவாக்கிய “மூன்றாவது கரை - கியூபாவின் இலக்கியத் தடம்” என்னும் நூலைப் பேரா. ஆர். சிவகுமார் வெளியிட நிழல்

ப. திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். அமரந்த்தா உருவாக்கிய “வீழ்வோமென்று நினைத்தாயோ?” என்னும் நூலை மக்கள் கல்வி இயக்கத்தைச் சார்ந்த பேரா. பிரபா கல்விமணி வெளியிட என்.சி.பி.எச். விற்பனை முதுநிலை மேலாளர் சண்முகநாதன் பெற்றுக்கொண்டார். மேற்கண்ட நூல்கள் என்சிபிஎச் வெளியீடாகவும் புது மலர் பதிப்பகத்தின் வெளியீடாக கி. வெங்கட்ராமன் உருவாக்கிய “கியூபப் புரட்சியின் இன்றைய பொருத்தப்பாடு” என்னும் நூலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் சி. மகேந்திரன் வெளியிட கண. குறிஞ்சி பெற்றுக்கொண்டார்.

விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய என்சிபிஎச் செயல் இயக்குநர் ஜி. துரைராஜ் அவர்கள், உலகமயச் சூழலில் வறுமையிலும், கடனிலும் உழலும் வளரும் நாடுகளுக்குக் கியூபா திடமான நம்பிக்கையை அளித்து வருகிறது. அந்த நம்பிக்கையைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறிய வேண்டி என்சிபிஎச் நிறுவனமும், புது மலர் பதிப்பகமும் இந்த எட்டு நூல்களை வெளியிட்டுள்ளன என்றார்.

நூலாசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் அமரந்த்தா தமது உரையில் பிடெலின் பிறந்த நாளைப் புத்தக வெளியீட்டு விழாவாகக் கொண்டாட வேண்டி முடிவெடுக்கப்பட்டு அதற்கு ஒப்புதல் அளித்த என்சிபிஎச் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நூல் ஆசிரியர்கள், நூலை வெளியிடுபவர்கள், நூலைப் பெறுபவர்கள், நூலைப் பற்றிப் பேசுபவர்கள் ஆகியோரின் தேர்வை முழுமையாக ஒப்புதல் அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவிற்கு நன்றி தெரிவித்துக்கொண்டு மேலும் தொடர்ந்து பேசும் போது 19-ம் நூற்றாண்டில் பிரிட்டனின் காலனி ஆட்சி நடந்து வந்தது. 21-ம் நூற்றாண்டு லத்தின் அமெரிக்காவினுடையது என்று குறிப்பிட்டார். அது எந்நாளும் விடுதலையை வலியுறுத்தும்.

இப்பொழுது லத்தின் அமெரிக்காவில் பல மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. பல செய்தி ஊடகங்கள் இதைச் சொல்லுவதே இல்லை. ஜனநாயக முறையில் வெனிசுலா நாட்டில் சாவோஸ் பதவியேற்றார். பொலிவியாவில் ஈவா மோரால்ஸ், சிலியில் மிச்சேல் என்ற பெண் போராளி ஆட்சித் தலைவர்களாக இருக்கின்றனர். இவர்களெல்லாரும் ஜனநாயக முறையில் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதற்கு ஆதாரமாகக் கியூபா விளங்குகிறது. இவர்களின் ஒருங்கிணைவு புதிய நம்பிக்கைகளையும், புதிய சகாப்தங்களையும் லத்தின் அமெரிக்காவில் ஏற்படுத்தி வருகிறது. விடுதலையைக் காத்துக் கொள்வதும், நோய்களைத் தீர்ப்பதும் இயற்கைச் சீற்றங்கள் போன்ற மீறல்களைக் கட்டுப்படுத்துவதும் போன்ற கடுமையான பிரச்சினைகள் மூலம் கிடைத்த அனுபவங்களையும் வைத்துக் கொண்டு கருப்பினத்தவர், கலப்பினத்தவர், வெள்ளை நிறத்தவர் அனைவரும் சேர்ந்து சமூக ஒருங்கிணைவு மூலம் அவர்கள் பிரச்சினைகளுக்கும், மற்ற மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார்கள். கியூபா மக்களின் பல்வேறு அனுபவங்கள் இங்கு நூல்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன என்றார்.

தலைமையுரையாற்றிய கவிஞர் சிற்பி அவர்கள் தனது உரையில் மனித நிதி மூலதனத்தை விட மனித மூலதனம் மேலானது என்று காஸ்ட்ரோ சொல்கிறார். மனிதனை மூலதனமாக்கி, மனிதனை உள்ளார்ந்த அறிவு, ஆற்றல், கல்வி வளர்ச்சியோடும், சமூகப் பாத்திரமாக மாற்ற முடியும். இந்த நூல்களை நம் அரசியல் வாதிகளுக்குப் பாடப் புத்தகமாக வைக்கவேண்டும். அங்குத் தொடக்கக்கல்வி முதல் தொழில் கல்வி வரை தாய்மொழிக் கல்வியில்தான் வழங்கப்படுகிறது. கியூபாவில் 1959ல் புரட்சி வென்றபோது ஏறக்குறைய 40 சதவித மக்களே கல்வியறிவு பெற்றிருந்தார்கள்.

பின்பு மூன்றே ஆண்டுகளில் 96 சதவீதம் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். இதற்கு அரசும், அங்குள்ள மக்கள் இயக்கங்களுமே முக்கியக் காரணமாக இருந்திருக்கின்றன. அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் 6 சதவீதம் கல்விக்குச் செலவிட வேண்டும் என்று யுனெஸ்கோ தெரிவிக்கிறது. இந்தியா 3 சதவீதம் நிதி ஒதுக்குகிறது. கியூபா 11 சதவீதம் ஒதுக்குகிறது. அரசு நடத்தும் கல்விக் கூடங்களில் உயர் விளைவுகளைத் தந்தது கியூபா மட்டும்தான். அங்கு 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் உள்ளது. மேலும் இங்கு வெளியிடப்பட்ட நூல்களைப் பின்புலமாக வைத்து நம்முடைய மரபுகளிலிருந்து இலக்கியக் கோட்பாட்டைப் படைப்பதற்கு இந்த நூல்கள் தூண்டுதலாக இருக்கும் என்றார்.

“இந்திய நல வாழ்வு நல்லறம் இயக்க”த்தைச் சார்ந்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் அவர்கள் மக்கள் மருத்துவம் என்ற நூலை வெளியிட்டு தனது உரையில் கியூபாவில் மருத்துவக் கல்வி பயில மாணவர்களுக்கு உள்ளூர் சமூகங்களின் வலுவான பரிந்துரை வேண்டும். படிப்பைத் தெரிவு செய்வது அந்தப் பகுதி மக்களே, ஆட்சியாளர்கள் அல்ல. அங்குப் பச்சிலை மருத்துவப் பாரம்பரியத்தை ஊக்குவிக்கிறார்கள். இங்குத் தமிழகத்தில் பூனை மீசை என்ற மூலிகையை சிறுநீரகநோய்க்குப் பயன்படுத்துகிறார்கள். கியூபாவில் இதே மூலிகையைச் சிறுநீரக நோய்க்குப் பயன்படுத்துகிறார்கள். அங்குக் கருச்சிதைவும், தற்கொலையும் அதிகமாக நடைபெறுகின்றன என வெளியிடப்பட்ட நூல்களில் இது பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

நம் நாட்டைப் போல அங்கும் மருத்துவச் சேவை பரவியிருக்கிறது. ஆனால் அங்கு மக்களைச் சென்றடைந் திருக்கிறது. இங்கு மக்களைச் சென்றடையவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை வந்தபிறகு கியூபா சோவியத் யூனியன் பக்கம் சாய்ந்தது. அப்போது அங்குள்ள மக்கள் தன் வாழ்வு தன் முனைப்புடனும் அதிகார வர்க்கம் அதிகாரத்தை ருசிக்க ஆரம்பித்தது. உடனே சுயபரிசோதனை முயற்சியில் காஸ்ட்ரோ தலைமையில் கூடி சேகுவரா வழியில் நடைபோடுவதாகவும் முடிவெடுத்தார்கள். அப்போதுதான் பாரம்பரிய வைத்திய முறை கண்டெடுக்கப்பட்டு வெற்றியும் அடைந்தது.

அடுத்துப் பேசிய மருத்துவர் ரவீந்திரநாத் சரியான நேரத்தில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகத்தில் உள்ள வளர்முக நாடுகள் ஏகாதிபத்திய மருத்துவத் தொழில் கூட்டமைப்பு நிறுவனங்களின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. நமது மருத்துவத்துறை மட்டுமல்லாது உலகத்தில் உள்ள எல்லா நாட்டு மருத்துவத் துறைகளிலும் இதுதான் நிலைமை. கியூபா மருத்துவத் துறையில் ஆற்றியுள்ள சாதனை நம்மைப் போன்ற வளர்முக நாடுகளுக்கு மருத்துவத் துறையில் என்ன செய்யவேண்டும், என்ன மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பனவற்றைத் தெள்ளத்தெளிவாக இந்தப் புத்தகம் உணர்த்துகிறது.

இங்கே இந்தியாவில் மருத்துவம், தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனும் தனது சொந்த நிதியிலிருந்து 83 சதவிகித நிதியைச் செலவு செய்கிறான். கியூபாவில் பொது மக்கள் செலவு செய்யும் தொகை 13.5 சதவீதம். இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு தேசிய உற்பத்தியில் அரசு செலவு செய்யும் தொகை .09 சதவீதம். கியூபாவில் அரசு செலவு செய்யும் தொகை 7.5 சதவீதம் ஆகும். கியூபாவில் உள்ள மருத்துவர்கள் சுமார் 2000 பேர். பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றி வருகிறார்கள். இங்கு மகப்பேறு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மகப்பேறு காலத்தில் விடுமுறை இல்லை. இந்தப் புத்தகம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மருத்துவர்களுக்குப் போராடுவதற்கு ஒரு கையேடாக உள்ளது என்றார்.

கியூபா புரட்சியின் இன்றைய பொருத்தப்பாடு என்ற நூலை வெளியிட்டு சி. மகேந்திரன் அவர்கள் உரையாற்றும் போது அறிவை வளர்ப்பதின் மூலமாக நூல்களை வெளியிடுவதின் மூலமாக மாவீரன் பிடலுக்கு மேலான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்ற விழாவாக இது அமைந்திருக்கிறது. இந்த வெளியீட்டில் பணியாற்றிய அனைவரும் நினைவுகூரத் தக்கவர்கள். கியூபாவில் 1959ல் தொடங்கி இன்றுவரை நடந்திருக்கும் பொருளாதார நிகழ்வுகள் அமெரிக்க ஏகாதிபத்திய யுத்தம், அது கொண்டு வந்த மாற்றங்கள் என்று பட்டியலிட்டு முன்வைக்கப்படுகின்றன. மார்க்சியம் என்பது அந்தரத்தில் கட்டப்படுவது கிடையாது. மார்க்சியம் என்பது அந்த மண்ணின் பொருத்தப்பாடுகளுடன் அமையவேண்டும் என்னும் போது இயல்பாகவே கேள்வியும் எழுகிறது.

மார்க்சியத்தின் பொருத்தப்பாடுகளுடன் நம்முடைய கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்படுகின்றனவா என்னும் கேள்வியும் முன் எழுகிறது. அதற்கான விவாதத்தையும் முன்வைக்கிறது. விவாதம் என்கிற பொழுது கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் ஆழமாக எதைச் செய்திருக்கின்றன. எவற்றையெல்லாம் ஆழமாகச் செய்யத் தவறியிருக்கின்றன என்பதை வெகுமக்களின் விவாதத்திற்கு உட்படுத்தும். எந்த ஒரு புரட்சியும், புரட்சிக்கு முன் தயாரிப்பு என்பதையும் நிராகரித்து விட முடியாது. இந்தியாவில் மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது. அந்தப் பாரம்பரியத்தின் மீது அதன் செயல்பாட்டைப் பற்றிய சில வலுவான கேள்விகளை விவாதத்திற்காக முன்வைக்கிறது. அந்த விவாதத்தை நிராகரிக்க முடியாது. அந்த விவாதத்தை மேலும் செழுமைப்படுத்தி ஆராய வேண்டியுள்ளது. இந்நூலில்

சே-வின் கருத்துக்களும், கிராம்சியின் கருத்துக்களும் கூறப்பட்டுள்ளன. இது விவாதிக்கப்படவேண்டிய நூல் என்றார்.

கண. குறிஞ்சி தமது உரையில் குறைந்த நாட்களில் நிறைவாக எழுதப்பட்ட நூல். இந்தப் புரட்சியின் படிப்பினைகளை மூன்றாம் உலக நாடுகள் கற்றுக்கொள்ள வாய்ப் பிருக்கிறது என்றார்.

எஸ்.ஏ. பெருமாள் தமது உரையில் “சூறாவளியும் அடிபணியும்” என்னும் நூல் தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் புது விஷயமாகத்தான் இருக்கமுடியும். சோஷலிச ஆட்சி முறைதான் இந்த மகத்துவத்திற்கான காரணமாகும் என்றார். தொடர்ந்து பேசிய வி.பி. குணசேகரன் அவர்கள் இடர் பேரிடர் ஆவது எப்படி என்பது பற்றி இந்நூல் கூறுகிறது. மக்கள் விழிப்புப் பெறாவிட்டால் இடர் பேரிடர் ஆகிறது. மக்களை விழிப்புறச் செய்வது அரசின் கடமையாகும் என்பதை உணர்ந்து கியூபா அரசு செயல்படுகிறது. இங்குள்ள அரசுகளும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கியூபா: கல்விக்கு ஒரு கலங்கரை விளக்கம் என்னும் நூலை வெளியிட்ட கல்வியாளர் ச.சீ. ராஜகோபாலன் தமது உரையில் ஒரு சமுதாயப் புரட்சி ஏற்படாவிட்டால் கல்விப் புரட்சி ஏற்படாது என்பதுதான் அடிப்படை. அங்கு முழுமையான இலவசக் கல்வி, இங்கு முழுமையான கட்டணக் கல்வி என்ற நிலை இருக்கிறது. அங்கு schooling is not education என்பது வேதமந்திரமாக இருக்கிறது. நான்கு சுவருக்குள் என்ன மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறோம் என்பதுதான் அங்குள்ள கல்வி. இங்கு நான்கு சுவரைப் பற்றித்தான் கல்வி. முதலில் இங்கு ஆசிரியர் கல்வியில் மாற்றம் வரவேண்டும் என்றார்.

“மூன்றாவது கரை” என்ற நூலை வெளியிட்டு பேசிய பேரா. ஆ. சிவக்குமார் கூறும்போது லத்தின் அமெரிக்க இலக்கியம் என்ற உடனே மாய யதார்த்த இலக்கியக் கருத்தாக்கம்தான் நம் நினைவுக்கு வரும். இந்த எட்டு நூல்களில் உள்ள கருத்துக்களைத் திரட்டி ஒரு சிறு நூலாக வெளியிட்டுக் கல்லூரிப் பாடத்திட்டத்தில் சேர்க்க முயன்று பார்க்கலாம். முதன் முதலில் 1963ல் லத்தின் அமெரிக்கச் சிறுகதையைக் கா.நா.சு. மொழி பெயர்த்தார். அந்தக் கதை இலக்கிய வட்டத்தில் போர்ஹேஸின் லாட்டரி இன்பாபிலோன் என்ற சிறுகதையாக வெளியிட்டார். 1971ல் கசடதபற இதழில் பிரம்மிள் வட்டச் சிதைவுகள் என்ற போர்ஹேஸின் சிறுகதைகளை வெளியிட்டார். வானம்பாடி இதழ் பாப்லோநெருடாவின் சில கவிதைகளை வெளியிட்டது நினைவிலிருக்கிறது. 1986ல் மீட்சியின் வெளியீடாக லத்தின் அமெரிக்கச் சிறுகதைகள் கொண்டுவந்தோம்.

பிறகு அமரந்த்தாவின் “அன்று செவ்வாய்க் கிழமை மறக்கமுடியுமா” என்னும் சிறுகதைத் தொகுப்பு என்சிபிஎச் வெளியீடாக வந்தது. இந்நூலில் ஒசேமார்த்தி, சாண்ட்டோ மரியா பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. கியூபாவில் உள்ள இலக்கிய அமைப்பில் ‘தயவு செய்து அரசியல் பேசுகிறது என்பதற்காக விருதுக்கு தேர்ந்தெடுக் காதீர்கள். இலக்கியத்தரம் இருக்கிறதா என்று பார்த்துத் தேர்ந்தெடுங்கள்’ என்ற சர்வதேச நடுவர் குழுவுக்குச் சாண்ட்டோமரியா சொல்லிய குறிப்புகளும் இந்நூலில் உள்ளன. மேலும் இந்நூலில் இரண்டு சிறுகதைகள், நான்கு கட்டுரைகள், கடிதங்கள், 21 கவிதைகள் உள்ளன என்றார்.

“நீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்” என்னும் நூலை வெளியிட்ட திரு. நம்மாழ்வார், இந்நூல் வேளாண் தொழில் நுட்பம் பற்றிய கையேடு. கியூபாவில் சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு பாரம்பரிய விவசாயத்திற்கு மாறுகிற தன்மையைப் பார்க்க முடிகிறது. நிலங்களை அரசுடமையாக்கும்போது உழவர்கள் நிலத்திலிருந்து அந்நியமாகிறார்கள். அதனால் கியூபாவில் நிலத்தை மறுபகிர்வு செய்கிறார்கள். அந்த வட்டத்தில் முதலில் மரபு வழி விவசாயம் செய்தவர்களும் அடுத்து விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள். மரபு வழி விவசாயக் கருத்துக்களை அறிவியல் பூர்வமாகக் கியூபா அரசு மாற்றியிருக்கிறது. 1966ல் ஜே.சி. குமரப்பா ‘கிராம உத்தியோக்’ என்ற பத்திரிகையில் இங்குள்ள பல்கலைக் கழகங்களில் உள்ள திட்டங்களுக்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள்தான் நிதி கொடுக்கின்றன என்று எழுதியுள்ளார். கியூபாவில் மனித நேயத்தைத் தாண்டிப் பாரம்பரிய விவசாயத்தின் மூலமாக உயிர் நேயத்துக்கான கட்டத்தை நோக்கி மக்களும், விவசாயிகளும், அரசும் சென்று கொண்டிருக்கின்றன என்று இந்த நூல் மூலம் அறிய முடிகிறது என்றார்.

“வீழ்வோம் என்று நினைத்தாயோ?” என்ற நூலைப் பற்றிப் பேசிய தியாகு, கவித்துவமும் வீரமும் நிறைந்த தலைப்பு கொண்ட இந்த நூல் கியூபாவின் மனித உரிமைச் சவால்களைப் பற்றிப் பேசுகிறது. பொதுவாக ஒரு நாட்டைச் சிறப்பாகக் காட்டுவதற்குப் பள்ளிக்கூடங்கள், குழந்தைக் காப்பகங்கள், குழந்தைகள் நலம், பெண்கள் நலம் ஆகியவற்றைக் கூறுவார்கள். ஆனால் காஸ்ட்ரோ அங்குள்ள கைதிகளின் உரிமைகளை உதாரணத்தோடு சொல்லுகிறார். அங்குள்ள சிறைக் கைதிகள் இரண்டு விதமாக இருக்கிறார்கள். ஒன்று எதிர் புரட்சிக் காரர்களும், சி.ஐ.ஏ.வினால் தூண்டிவிடப்பட்டு கியூபாவில் நாசவேலை செய்தவர்களும். இன்னொன்று யார் ஆட்சிக்கு வந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் திருடிக் கொண்டே இருப்பவர்கள்.

அவர்களுக்குப் பிளாண்டிடோஸ் என்று பெயர். இவர்கள் சிறைச் சாலை விதிகளை மதிக்க மாட்டார்கள். சிறையில் கொடுக்கும் சீருடைகளை அணிய மாட்டார்கள். அவர்களை வன்முறையால் இதை செயல்படுத்த முடியும். ஆனால் வன்முறையைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் நாங்கள் ஒழுங்கின்மையைக் பொறுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் வன்முறை அமைப்புக்கு எதிரானவர்கள் என்கிறார் காஸ்ட்ரோ. சோவியத் இரும்புத் திரை போட்டது, சீனாவில் மூங்கில்திரை போட்டது, கியூபாவோ உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அமெரிக்கர்கள் உட்பட அனைவரையும் வரவேற்று கியூபாவைப் பார்வையிடச் சொல்லுகிறது. எந்த ஒளிவுமறைவு மின்றி இவ்வளவும் நாங்கள் சொன்னபிறகு எங்களுக்கு எதிராக இருப்பவர்களுக்கு நாங்கள் சொல்லுகிறோம் தாய்நாடு, வீரமரணம், வெற்றி நமதே என்கிறார் காஸ்ட்ரோ. இவை போன்ற செய்திகள் இந்நூலில் உள்ளன என்றார்.

அடுத்து மாலை நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சி. மகேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமையுரை ஆற்றிய திரு. ஆர். நல்லகண்ணு, 21ம் நூற்றாண்டில் உலகத்தில் விடுதலையடைந்த நாடுகளுக்கும், பின்தங்கிய நாடுகளுக்கும் வழிகாட்டியாகத் திகழும் கியூபா நாட்டின் தலைவர் பிடெலின் 81வது பிறந்த நாள் விழா கொண்டாடும் வேளையில் அறிவு சார்ந்த நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அறிவியல் சார்ந்த சமூகப் புரட்சி நடந்திருக்கும் கியூபா நாட்டின் வளர்ச்சியும், நிருவாகமும் பல துறைப் பரிமாணங்களோடு அங்கு ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி உலக நாடுகளுக்கு, குறிப்பாகப் பின்தங்கிய நாடுகளுக்கு, அதிலும் குறிப்பாக ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து விடுபட்ட நாடுகளுக்கு எப்படி வழிகாட்டியாக இருந்தது என்பதை விளக்கும் வகையில் இந்த எட்டு நூல்கள் உள்ளன. நூல்களை உருவாக்கிய ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நூலை ஆராய்ந்து சொற்பொழிவாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கியூபத் தூதர் மேதகு அபிலார்தோ ஆர். கியூட்டோ சோஸா வாழ்த்துரை வழங்கினார். (இவரது உரை தனியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது).

வாழ்த்துரைக்குப் பின் அமெரிக்கச் சிறைகளில் உள்ள கியூபர்களைப் பற்றிய நூலை தியாகுவுக்குக் கியூபத் தூதர் பரிசாகக் கொடுத்து தமிழில் கொண்டுவரும் படி கூறினார். அப்போது திரு. ஆர். நல்லகண்ணு அவர்கள் தியாகு இந்நூலை மொழி பெயர்த்துக் கொடுத்தால் என்சிபிஎச் விரைவில் வெளியிடும் என்றார்.

அடுத்துப் பேசிய நடிகர் ராஜேஷ் 1960-61களில் காஸ்ட்ரோவைப் பற்றி நமக்கு அறிமுகமாகியது. பிடெலின் தொன்மங்கள் அப்போதிருந்து இன்றுவரை பிரபலமாக இருந்தது. உற்பத்திச் சாதனங்கள் மூலம் ஏற்படும் உற்பத்தி உறவுகள்தான் மனிதனின் குணாம்சமாகத் தீர்மானிக்கப்படுகிறது. தொழில் நுட்பயுகத்தில் பொதுவாகப் புத்தகங்கள் வழிகாட்டுதலாக இருக்கவேண்டும். அப்படித்தான் இங்கு வெளிவருகின்ற புத்தகங்கள் இருக்கின்றன என்றார். மாநிலத் திட்டக்குழுவின் இணைத் தலைவர் பேரா. நாகநாதன் தமது உரையில் முதலாளித்துவ உலகத்திற்கு ஒரு மாற்றாக இன்றும் ஒரு சோஷலிச குடியரசு இருக்கிறது. அதன் பேராற்றல் மிக்க மனிதனாக பிடெல்காஸ்ட்ரோ இருக்கிறார். பிடெலின் தலைமையில் லத்தின் அமெரிக்காவில் உள்ள சில நாடுகள் ஒன்றாக இணைந்து பொருளாதார ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு வளங்களைப் பரிமாற்றம் செய்துகொண்டு உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவைகளைச் சாராமல் தற்சார்புக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வளருகின்றன. இது அமெரிக்காவின் உலக மயமாக்குதல் செயலுக்கு எதிராக உள்ளது என்றார்.

அடுத்துப் பேசிய இந்திய நிதித்துறை இணையமைச்சர் திரு.எஸ்.எஸ். பழநிமாணிக்கம் அவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் மட்டும் பிடெல் பிரச்சினையாக இருக்கவில்லை. பொதுவுடைமை இயக்கத்திற்கும் பிரச்சினையாக இருந்தார். நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய கருத்துக்களை நடைமுறைப்படுத்தினார்.

புரட்சியில் பங்கேற்றும் கியூபாவில் ஆட்சியமைத்த பிறகும் கியூபாவில் இருந்த கம்யூனிஸ்டுகளோடு சேர்ந்தார். நல்ல சிந்தனையாளர்கள் அனைவருமே நல்ல போராளியாக இருக்க முடியாது. நல்ல போராளிகளாக இருப்பவர்கள் நல்ல நிருவாகிகளாக இருக்கமுடியாது. நல்ல நிருவாகிகளாக இருப்பவர்கள் நல்ல ராஜதந்திரியாக இருக்கமுடியாது. ஆனால் பிடெல் இதில் எல்லாவற்றையும் சாதித்து நல்ல போராளியாக, நல்ல நிருவாகியாக, நல்ல ராஜதந்திரியாக 50 ஆண்டுகளுக்கு மேல் கியூபாவின் மிகப் பெரிய ஆளுமை மிக்க மனிதனாக உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதிநிதியாக இன்றும் இருந்து வருகிறார் என்றார். இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் அவர்கள் தமது உரையில் கியூபா நாட்டின் நிகழ்வுகளை நாம் அறிந்துகொண்டு இங்குள்ள புரட்சிகர இயக்கங்களை எடுத்துச் செல்வதற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மக்கள் 110 கோடி பேரை மிரட்டிக் கொண்டிருப்பதை எதிர்த்து போராடுவதற்கும் அம்மக்களை திரட்டுவதற்கும் இத்தகைய நூல்கள் பயன்படும் என்றார்.

நிறைவுரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் தா. பாண்டியன் அவர்கள் தமது உரையில் கியூப மக்களைப் புரிந்துகொண்டு பிடெல் நடைமுறைகளைப் பயன்படுத்தினார். கடந்த 40 வருடங்களாக இந்த மனிதன் தொடர்ந்து பேசி வருகிறார். அவருடைய பேச்சு குறைந்தது 21/2 மணி நேரம். அதிகபட்சம் 61/2 மணி நேரம் நீண்டிருக்கிறது. நீண்ட உரையாற்றலில் இடைவெளி விட்டு மக்கள் டீ, காபி குடித்துவிட்டுத் திரும்பவும் கேட்பதற்குக் கூடுகிறார்கள். அப்படி ஒரு மகத்தான சக்தி அந்தத் தலைவனிடம் இருக்கிறது. அதனால்தான் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அமெரிக்க நூலாசிரியர் பிடெலை ஒரு மகத்தான மனிதர் என்று கூறுகிறார்.

பிடெல் என்ற பெயர் மனிதனைக் குறிக்கும் பெயர்ச் சொல் அல்ல. அது லட்சியத்தை குறிக்கிற ஒரு சொல்லாகத் தான் உலகம் முழுதும் அறிந்திருக்கிறது. ராகுல்காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு முன்னாலே வந்தவர்.

பிடெல் காஸ்ட்ரோ பிறகுதான் வருகிறார். தலைமறைவான அரசியல் கைதியாகப் பொலிவியாவில் குவெராவைப் பிடெல் சந்திக்கிறார். ஒரு புரட்சி வீரனுக்கு உள்ள திண்மையும், உயரிய லட்சியமும் இருக்குமானால் எல்லாவற்றையும் வெற்றிகரமாகக் கொள்ளமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் பிடெல். பிடெல் குவெரா சந்திப்புதான் வரலாற்றின் முக்கியத் திருப்புமுனையாக அமைகிறது. பிடெலை மட்டும் நம்பியில்லை கியூபா. அங்குப் புரட்சிக்கு என்று தயாரிக்கப்பட்ட மக்களும், தலைவர்களும் இருக்கின்றனர் என்றார்.

விழா நிறைவில் பா. பாஸ்கரன் நன்றி கூறினார்.


இந்தியா அனைத்துக் கியூபர்களின் இதயத்திலும் இருக்கிறது
கியூபா அனைத்து இந்தியர்களின் இதயத்திலும் இருக்கிறது


- அபிலார்தோ ஆர். கியூட்டோ சோஸா

இவர் இந்திய கியூபத் தூதரகத்தின் துணைத்தலைவராகவும் அரசியல் ஆலோசகராகவும் இருக்கிறார். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் இயக்கத்தின் தேசிய கமிட்டியின் முக்கிய அலுவலராக இருந்தவர். கியூப கம்யூனிஸ்ட் இயக்க ஆய்வு மையத்தின் ஆசிய பகுதியில் பொறுப்பாளராகவும், கல்வியாளராகவும் இருந்திருக்கிறார். அங்கிருந்து கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்கு உயர்வு பெற்று ஆசியாவின் தென்பகுதிக்கும் பொறுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அங்கோலா யுத்தத்தின்போது கியூபா படைப்பிரிவில் பணிபுரிந்து கியூபாவின் வெற்றிகளைத் தேடித்தந்தவர்களில் ஒருவர். கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் போராளி. இவர் சென்னையில் நடந்த விழாவில் வாழ்த்துரை வழங்கிய பகுதி....

என்னுடைய ஆங்கிலம் அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. ஆங்கிலத்தில் புலமை படைத்தவர்கள் அல்ல நாங்கள். எங்கள் முதல் எதிரியின் மொழியே ஆங்கிலமாக இருக்கிறது என்றபோதிலும் தேவைப்படுகிற அளவில் உலகெங்கும் தொடர்புகொள்ள ஆங்கிலம் கற்று இருக்கிறோம். சில குறைகள் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். இங்கு நான் முதன் முதலில் குறிப்பிடவேண்டிய சொந்தச் செய்தி ஒன்று இருக்கிறது. நான் இந்தியாவில் இருக்கும்போது என்னைச் சூழ்ந்து சகோதரர்களும் சகோதரிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு வரும்போது கண்ணை மூடிக்கொண்டால் ஹவானாவில் இருக்கிற உணர்வே ஏற்படும். தமிழ் குறித்தும் தமிழ்நாடு குறித்தும் நான் பெருமைப்படுகிறேன். பல்லாயிரம் ஆண்டு வரலாறு படைத்த தமிழ் மொழி என்பதும் தமிழ் மொழி ஒரு செவ்வியல் மொழி என்பதும் நான் அறிந்துள்ளேன். தாய்லாந்தில் உள்ள கோயில் கோபுரங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் பழைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. எங்கள் தலைவர் காஸ்ட்ரோ அறுவை சிகிச்சைக்குப் பிறகு விரைவில் குணமடைந்து வருகிறார் என்ற செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புரட்சி குறித்த நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த நம்பிக்கை பரவ வேண்டியிருக்கிறது. லத்தின் அமெரிக்காவில் நாங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறோம். உலக மக்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும். உலகம் முழுவதையும் மீட்க முடியும் என்று நம்புகிறோம். மூதாதையர்கள் விட்டுச் சென்ற இந்த புவிக்கோளத்தை அழியவிடக்கூடாது. இழந்துவிடக் கூடாது. இதனைப் பாதுகாத்து வருங்காலத் தலைமுறையினர் கையில் ஒப்படைப்பதற்கு நாம் சேர்ந்து போராட வேண்டும், சேர்ந்து உழைக்கவேண்டும்.

சுதந்திரமடைந்த மக்கள் போராட்டங்களில் அக்கறை செலுத்துகிறார்கள். கியூபாவில் உள்ள மக்கள் எல்லாரும் கியூபப் புரட்சியில் ஆர்வம்கொண்டு கலந்துகொண்டவர்கள். நாங்கள் அமெரிக்க வல்லாதிக்கத்தை எதிர்த்து நின்று போராடமுடிந்தது என்றால் அதற்கு காஸ்ட்ரோ மட்டும் காரணம் அல்ல. கியூப மக்கள் அனைவரும் ஒரே சக்தியாகக் கூட்டு அறிவாற்றலை, கூட்டுத் திறனை பயன்படுத்தி அந்த வெற்றியைச் சாதித்து இருக்கிறார்கள். சோவியத் யூனியனில் சோஷலிச அரசில் ஒரு கட்சியாக அமைக்கப்பட்டது. நீங்களும் அதையேதான் செய்கிறீர்களா என்று கியூபாவில் கேட்டார்கள். கியூபாவில் புரட்சிக்குப் பின் வந்தது அல்ல ஒரு கட்சி அமைப்பு. ஸ்பானிய காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஒசேமார்த்தி ஒரு கட்சியாக மக்கள் அனைவரையும் இணைத்தார். அதேபோல் மக்கள் அனைவரும் ஒரே கட்சியாக இணைந்து எங்கள் கட்சி என்பது கியூப மக்களின் கூட்டு அறிவாற்றல் பயனாக உருவாகியிருக்கிறது.

கியூபப் புரட்சியின் ஒரு பகுதி என்பது பிடலால் உருவாக்கப்பட்டது. ஆனால் புரட்சி காஸ்ட்ரோவையும் தாண்டிச் செல்லும் பிடலுக்குப் பிறகும் புரட்சி உண்டு. ராகுல் காஸ்ட்ரோ, என்னையும் தாண்டி புரட்சி வெற்றிகரமாக செல்லக்கூடியது. என்னுடைய நான்கு வயது பேத்தி என்ன படிப்பு படித்தாலும் எங்கள் நாட்டில் கட்டணம் செலுத்தாமலே படிக்க முடியும். உயர் படிப்பு வரை எளிதில் பெற முடியும். அவள் உயிரோடு இருக்கும் வரையில் இலவச மருத்துவம் உண்டு. அவளுக்கு ஓய்வூதியம் பெறும் வயதில் ஓய்வூதியம் பெறுவாள். இவைகளைத்தான் கியூபப் புரட்சி சாதித்து இருக்கிறது. கியூப மக்கள் ஒருபோதும் இதை இழக்க விரும்பமாட்டார்கள்.

ஒரு புதிய அமைப்பைக் கியூப மக்கள் உருவாக்கிவருகிறார்கள். எங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. நாங்கள் எங்கள் வலிமையை மட்டும் நம்பி இதை நாங்கள் சொல்லவில்லை. இதே அளவுக்கு நாங்கள் உலக மக்களையும் உங்களையும் நம்பிச் சொல்லுகிறோம். உங்களை நான் சந்திக்கும்போது ஒரே தோழர்களாக, ஒரே பதுங்கு குழிக்குள் நின்று சேர்ந்து போராடுகிற போராளிகளாகப் பார்க்கிறேன். ஐ.நா. அமைப்பில் முதல் முதலாக உரையாற்றிய பிடெல் அமெரிக்கா போயிருந்தபோது தெரசா விடுதியில் தங்கியிருந்தபொழுது நேரு வந்து சந்தித்தார். இந்திரா காந்தியிடம் கூட்டுச் சேரா நாடுகளின் தலைவர் பொறுப்பை பிடெல் ஒப்படைத்தார். இந்தியா அனைத்துக் கியூபர்களின் இதயத்திலும் இருக்கிறது. கியூபா அனைத்து இந்தியர்களின் இதயத்திலும் இருக்கிறது. கியூபாவுக்கு இந்தியாவில் எல்லா வரம்புகளுக்கும் அப்பாற்பட்டு நல்ல நட்புறவு இருக்கிறது. கியூபப் புரட்சியை எவராலும் வெல்ல முடியாது என்றார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com