சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் மடியில் பாரதியார்
கே. முருகேசன்
ம. சிங்காரவேலரின் சீடரும் அவர்கள் வாழ்க்கை வரலாறு 3.12.82 ஆங்கில நூலின் கூட்டு ஆசிரியருமான நாகை.கே. முருகேசனும் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வெற்றிப் பயணம்” என்னும் நூலின் ஆசிரியருமான ஆர்.பி.எஸ்ஸூம், ஓஸ்மானிய பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட முதுகலைக் கல்லூரி ஆங்கில இலக்கியத் துறைத் தலைவரும் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவரும் ம. சிங்காரவேலரின் மூத்த அண்ணன் பேத்தியுமான எழுபத்து மூன்று வயதினரான மூதாட்டி ஜெயபாஸ் அம்மையார் அவர்களை 01.12.1982 அன்று அவர்களது மயிலாப்பூர் இல்லத்தில் பேட்டி கண்டபோது அம்மையார் தெரிவித்த விபரங்களில் ஒரு சில.
“நான் 1909-ம் ஆண்டு நவம்பரில் பிறந்தேன். எனக்குப் பண்ணிரண்டு வயதாகும்போது பாரதியார் மறைந்தார். அந்த நிகழ்ச்சி எனக்கு இன்னும் நினைவில் பசுமையாக இருக்கிறது.
எனது பாட்டனார் சிங்காரவேலருக்கும் சுப்பிரமணிய பாரதியாருக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. தேசிய இயக்கமே அவர்களை ஒன்றிணைத்தது. எனது பாட்டனார் ம. சிங்காரவேலனார் 22, சவுத் பீச் ரோடில் குடியிருந்தார். புத்த மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு அவருக்கு இருந்தது. சென்னை எழும்பூர் புத்த சங்கத்துடன் தொடர்புண்டு. ஆண்டுதோறும் சிரக பௌர்ணமி கொண்டாடப்படும். விழா அவர் இல்லத்திலோ, எழும்பூரிலிருக்கும் புத்த சங்கக் கட்டிடத்திலோ நடைபெறும். குழந்தைகளுக்கு திராட்சைப்பழமும், பூந்தியும் வழங்கப்படும். பாரதியாரின் மூத்த மகள் சகுந்தலாவும், தங்கையும் மனைவி தங்கம்மா பாரதியும் விழாவுக்கு வருவதுண்டு. தங்கம்மா பாரதி ஒரு புறத்தில் இருப்பார். பாரதியார் மகளும், தங்கையும் பாடுவதுண்டு. பெரும்பாலும் பாரதியார் பாடல்களே பாடப்படும்.
1921-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் திருவல்லிக்கேணியில் பாரதியார் குடியிருந்தார். என் பாட்டனார் ம. சிங்காரவேலர் அடிக்கடி பாரதியார் சந்திப்பது வழக்கம். பாரதியாரைக் கோயில் யானை தூக்கியெறிந்து அவர் நோய் வாய்ப்பட்டவுடன் நாள்தோறும் காலை மாலை இருவேளைகள் சென்று வருவார். பாரதியாருக்கு மருந்தும், ஹார்லிக்ஸூம் வாங்கித் தருவார். சில சமயம் அவர் கையாலேயே மருந்தூட்டுவதும் ஹார்லிக்ஸ் தருவதும் உண்டு. பத்தாம் தேதி இரவு அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை 11 மணிக்கு வீடு வந்து சேர்ந்தார். (சோர்ந்த முகம், சற்றே நடுங்கிய உடல், தேசீயக்கவிஞன் தேச விடுதலை வீரன் சுப்பிரமணிய பாரதி நாற்பதாண்டுகளும் நிறைவுறாத இளைஞர் என் மடியில் தலை வைத்தபடியே விடிகாலை 4 மணிக்கு இறந்துவிட்டார். என்ன இழப்பு, என்ன இழப்பு” என்று மனம் நொந்து வாய்விட்டுச் சொல்லி வேதனைப்பட்டார்.
“ஜனசக்தி”
பாரதி நூற்றாண்டு விழா நிறைவு மலர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|