விபத்தைத் தடுப்போம்
இது ஒரு வித்தியாசமான புத்தகம். அதாவது மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான அனைத்து விஷயங்களும் அடங்கியது. விபத்து நடக்காமல் இருக்கப் பல வழிகள் உண்டு. இதற்குப் பலர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் விபத்து நடந்தால் என்ன செய்யவேண்டும் என்பது பற்றிப் பாமரமக்களுக்கும் எளிதாகக் கடைப்பிடிக்கக் கூடிய வழிகள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன.
முதலில் First Aid என்கிற முதல் உதவி எப்படிச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ‘Golden Hour’ல் செய்யக்கூடிய விஷயங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன. இந்தச் சமயங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் என்ன என்ன செய்யக் கூடாது என்றும் விபரமாக கூறியுள்ளது. விபத்து அடைந்தவரின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில், காவல் துறையின் பங்கு என்ன என்றும் அவர்களை அணுகுவது எப்படி என்றும் மருத்துவமனைக்குச் செல்வது எப்படி என்றும் ஒரு விபத்தில் ஈடுபட்ட உயிரைக் காப்பதில் போலீஸ் மூலம் தொல்லைகள் உண்டா அது சம்பந்தமான சுப்ரீம் கோர்ட்டின் கைட் லைன் ஆகியவைகள் இதில் உள்ளன.
விபத்து நடந்தவரைத் தனியார் ஆஸ்பத்திரிக்கோ அல்லது அரசாங்க ஆஸ்பத்திரிக்கோ எடுத்துச் செல்வது பற்றியும் இதில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. அதில் உள்ள சந்தேகங்கள் அனைத்திற்கும் பதில் உள்ளன. சட்ட நுணுக்கம் அனைத்தும் அதில் உள்ளன.
ஒருவர் இறந்து போனால் அவர் உடலைப் பதப்படுத்தும் வழிகள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன. உடலை வெளியூருக்கு எடுத்துச் செல்ல ரயில் மூலமும், ஆம்புலன்ஸ் மூலமும், விமானப் பயணம் மூலமும் எடுத்துச் செல்வதைப் பற்றிய முழு விவரங்கள் உள்ளன.
இறந்தவருக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கப் பல வழிகள் உள்ளன. உதாரணமாக வாகனங்களின் மூலம் விபத்து ஏற்படுத்தி விட்டு நிறுத்தாமல் தப்பி ஓடி விட்டாலும் விபத்து அடைந்தவர்களுக்குக் கிடைக்கக் கூடிய நிவாரணம் பற்றியும், முதல் அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றியும் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
ஆம்புலன்ஸ் வாகனத்தை அணுகிட அதன் தொலைபேசி எண்களும், ஆஸ்பத்திரிகளின் விவரங்களும் இதில் உள்ளன. வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு நம் நாட்டில் விபத்து ஏற்பட்டு விட்டால் என்ன செய்ய வேண்டும் என்று இந்தப் புத்தகத்தில் கூறி உள்ளார்கள். சாதாரண மக்கள் தெரிந்து கொள்ளக் கூடிய பல விஷயங்கள் இதில் உள்ளன.
இதன் ஆசிரியர் இது சம்பந்தமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டார். “Prevint Accident & Prevent Crime” என்ற அந்தப் புத்தகத்தை அன்றைய போலீஸ் கமிஷனர் திரு. நடராஜ், IPS வெளியிட்டார்.
தற்போது இந்தப் புத்தகத்தில் இன்றைய தேதி வரை கிடைத்துள்ள அனைத்துத் தகவல்களையும், தமிழில் அனைவரும் படித்துத் தெரிந்து பயன் அடையும் விதத்தில் இதை எழுதி தொகுத்துப் பதிப்பித்திருக்கிறார்கள். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரே அந்த நபரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்.
அவசரச் சிகிச்சை செய்ய ஒரு மருத்துவரோ மருத்துவ மனையோ மறுக்க முடியுமா? இதற்கு இந்தப் புத்தகத்தில் விளக்கம் உள்ளது. ஒரு ஏழைக்கு அடிபட்டு அவருக்கு அருகில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை கிடைக்குமா என்பது பற்றியும் இதில் உள்ளது.
வாகனம் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படிச் சமரசமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்ற வழிகள் உள்ளன. விபத்து ஏற்பட்டுப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டால் போக்குவரத்தை எப்படிச் சீர் செய்வது என்பது பற்றிய விவரங்களும் இதில் உள்ளன.
போக்குவரத்து புலனாய்வு எவ்வாறு முறைப்படி நடக்கும் விதமும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்துக்களைத் தடுப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கை அமலாக்குதல் பற்றியும் குறிப்பு உள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண நிதி அளவு எவ்வளவு என்று இதில் உள்ளது.
இலவச சட்ட ஆலோசகரை அணுகும் முறை எப்படி என்ற விபரமும் இதில் உள்ளது. இதற்குத் தேவையான ஆவணங்கள் என்ன என்ன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இறப்பு சான்றிதழ் எப்படிப் பெறுவது என்றும் அதற்குண்டான வழி முறைகள் இதில் உள்ளன. இறந்த உடலை எடுத்துச் செல்வதில் அதன் உறவினர்கள் மிகவும் மன அழுத்த நிலையில் இருப்பதைப் பயன்படுத்திப் பல ஆயிரம் ரூபாய்களை பொது ஜனம் என்கிற முறையில் பலர் பறிக்க முனைவார்கள். அந்த சமயங்களில் நண்பர்களுக்கும், வழிப் போக்கர்களுக்கும் உறவினர்களின் வாரிசுகளுக்கும் அனுதாபம் ஏற்படுவதற்குப் பதிலாக “ஏண்டா இந்த வேதனை”, செத்தும் இவன் நம்மைக் கெடுத்தான் என்றுதான் புலம்பத் தோன்றும். இவைகளைத் தவிர்க்கவும் வழிமுறைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
இப்படியாகப் பல விஷயங்கள் உள்ளன. படித்துத் தெரிந்து கொள்ளலாம். 5 வருட கடுமையான அனுபவத்தின் மூலம் இந்த புத்தகம் Accident & Death Care Cell Chairmal Ln. P.T அலி அவர்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடைசியாகக் குற்றங் களைக் குறைப்பது எப்படி என்றும் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. விபத்தைத் தடுப்போம், உயிரைக் காப்போம்
ஆசிரியர்: P.T. அலி,
வெளியீடு : நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை - 600 098. விலை: ரூ. 75.00.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|