மதிப்புரை
கரை ஒதுங்கிய கப்பல்களின் கூட்டம்
தமிழ்மகன்
ஒரு சம்பவமோ, நிகழ்ச்சியோ, ஏன் ஒரு வரிச்செய்தியோ கூட மனக்குளத்தில் அலைபரப்பி விரிகின்றது. ஒரு நிகழ்வு அதனுடன் தொடர் புடைய வேறு நிகழ்வுகளுக்குச் சங்கிலித் தொடர்போல நம்மை அழைத்துச் செல்கிறது. வாழ்க்கை, தொடர்ச்சியான சம்பவங்களின் தொகுப்பாக இருக்கிறது.
முன் முடிவுகள் எடுக்கிறோம், பின் விளைவுகள் பற்றி யோசிக்கிறோம்... அனுபவங்களின் அடிப்படையில்தான் செயல்படுகிறோம்.
.
தாசில்தார் அலுவலகம் ஒன்றில் சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே நம் அனுபவங்கள் அசைபோட ஆரம்பிக்கின்றன. பொறுப் பில்லாமல் பேசும் அரசு ஊழியர் ஞாபத்துக்கு வருவார். லஞ்சம் கேட்கிற ஆசாமிகள் மனத்திரையில் நடமாடுவார்கள். ‘அலைய விடுவார்களோ’ என்ற அச்சம் அரும்பும், கிளம்பும் போதே மனச்சோர்வு ஏற்பட்டுவிடும்.
சாதி என்ற பாகுபாடு ஏன் தோன்றியது, எதனால் சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது, இட ஒதுக்கீட்டின் அவசியம் என்ன, சமத்துவம் என்று ஏற்படும்?.... இப்படியும் அனுபவ அறிவு செயல்படும்.
கேள்வி ஞானமும், படிப்பறிவும், பட்டறிவும் உள்ளவர்களாலேயே ஒரு சம்பவம் சார்ந்து அடுக் கடுக்காக விஷயங்களை அடுக்க முடியும். அந்த வகையில் கவிஞர் யுகபாரதி தொட்டிருக்கும் விஷயங்கள் யாவும் பிரமிக்க வைப்பனவாக இருக்கின்றன.
சங்க இலக்கிய குறிப்புகள், சமகால எழுத்தாளர்கள், இயற்கை பாதுகாப்பு, பெண்ணுரிமை அறைகூவல், ஜோதிடப் புரட்டுகள், சினிமா, இலக்கியம், மூலிகை, வாசல் கோலம், நண்பர்கள், சித்தர்கள், மூடநம்பிக்கைகள், தத்துவவாதிகள், தற்பெருமைக்காரர்கள், இலங்கையில் நடக்கும் இனப்படு கொலை, என அவர் தொட் டிருக்கும் அத்தனை விஷயங்களும் ஆழ்ந்த சமூக அக்கறையை வெளிப்படுத்துகின்றன.
சரித்திரக் குறிப்புகள், விஞ்ஞான விளக்கங்கள் என்றும் தாம் தொட்ட விஷயத்துக்கு அழுத்தம் சேர்த்திருக்கிறார் யுகபாரதி.
பொறுப்புணர்வுடன் தம் அனுபவத்தை விளக்க முற்படுவது அரியகலை. யுகபாரதி துளசி இலை பற்றி எழுதினாலும், குரு-சிஷ்ய உறவு பற்றி எழுதினாலும் சர்வாதி காரி முசோலினி பற்றி எழுதினாலும் கவனமாக எழுதியிருக்கிறார். நான் சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள் என்ற தொனியிலில்லாமல் ‘பகிர்ந்து கொள்கிறேன்’ என்ற பக்குவம் வெளிப்பட்டிருப்பது சிறப்பு.
யுகபாரதியின் எழுத்து நடை கவித்துவமானது. ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்குமாக துள்ளி ஓடும் நடையும்கூட. மிகச் சுருக்கமாக தகவல்களைத் தந்திருப்பதால் அப்படி துள்ளி ஓடுவது போலத் தோன்றியிருக்கலாம்.
மற்றபடி, நடுக்கடலின் ஆழமும் தனித்துவமும் மிக்க சிந்தனைப் பொறிகள்!
நடுக்கடல் தனிக்கப்பல்
ஆசிரியர் : யுகபாரதி, வெளியீடு : நேர்நிரை,
D1/15, TNHB, தெற்கு சிவன் கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை - 24, விலை : ரூ. 60.00.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|