மதிப்புரை
“நால்வரிகள்”
பி.பீ.ஸ்ரீநிவாஸ்
நல்லெண்ண மணமலர்களின் மதுவுண்டு, நந்நாளில் இந்நூலின் வைரவரிகளைப்பற்றி, என் உணர்வின் நால்வரிகள் வழங்குகின்றேன்! இந்நூலின் தனிச்சிறப்பைச் சங்காய் முழங்குகின்றேன்”.
எளிதில் நுணுக்கங்களைக் கவனித்துப் படித்து, இன்ப அமுதின் சுவை மிகு கருத்துத்தேனைக் குடித்து, பாராட்டக்கூடிய பகுத்தறிவைப் பகிர்ந்து, பலருக்கும் கொடுக்கவே, இது நல்லதோர் விருந்து”.
இப்புத்தகக் கடலில் எண்ணில் அடங்காத வகையில், ஏராளமாகக் கிடக்கின்றன, கிடைக்கின்றன சிந்தனை முத்துக்கள், இம்முத்துக்களின் அறிவொளி எட்டு (பத்து திசைகளிலும் பரவட்டும், இந்த அனுபவக் கவிஞரின் கனிந்த கவிதைகள் இசைச்சுவை மழையாய்ப் பொழிட்டும்”. வாழ்வின் பயணத்தில் நிரந்தர வழித்துணையாய், உலகோருக்கு உதவட்டும்! வாடாத உண்மைகளின் எழிலுடல்கள், நித்தமும் புத்துயிருடன் திகழட்டும்! வங்சம் அறியாத நேர்மையுடன், நெஞ்சங்கள் நேசப்பால் பருகி, மகிழட்டும்! வளர்ந்தோங்கும் நற்புகழுடன், வெற்றி விழாக்கள், வைபவத்துடன் நிகழட்டும்!
இவர்தம் படைப்புகளாலும் நற்செயல்களாலும், மக்கள் நற்பலன்கள் அடையட்டும், எந்நாட்டிலும் நாள்தோறும் புதுப்பொலிவுடன், மதிக்கதிர் ஒளியுடன், விடியட்டும்!, நட்பின் பாரிஜாத புஷ்பங்கள், பகைமையை மறைக்க, மலர்ந்து மணக்கட்டும்! நல்ல மன உறுதியின் நூலால், அன்பின் மாலையில், இதய உதிரிப்பூக்களை இணைக்கட்டும்.
இந்நூலின் நிமிர்ந்த தலையில் ஆனந்தத்தின் வளமையை மேலும் மேலும் அளிக்கும் எத்தனை எத்தனையோ சொந்தத் தன்மையுடன் நுனி நீட்டித் தம் தம் தலையைத் தூக்கும் அர்த்தமுள்ள விந்தையான வியப்புணர்வின் ரசனை மிக்க மூக்குகள் பலவுண்டு. இந்த மறுக்கமுடியாத உண்மையை உணர்ந்து, ஜெயரவியை வாழ்த்துபவன் மதுவண்டு.
உலகில் தோன்றும் பற்பல எழுத்துக்கலை மேதைகளில் உலகானுபவத்தைப் பருகிப் பருகிப் பலரும் தனித்தனிப் பாதைகளில் கலைத்தொண்டு புரிந்து கொண்டே, வளர்புகழ் பெறுகிறார்கள்! உலகுக்குத் தம் தம் தனிப்பெருந்திறனால் முன்னேற்ற வரம் தருகிறார்கள். அத்தகைய உலக நலம் விரும்பிகளில் இவர் ஒரு இயல்பு மேதை! முத்தொளி வீசும் ஜெயரவியின் சிந்தனை பிடித்துக் கொண்டது. சீர்மிகு பாதை, தனிமுறையில் சிந்தித்து, சிந்தனைச் சிற்பங்களைச் செதுக்கும் ஆற்றல் தந்தாள் கலைக்கோதை!! இனிய சுவை உள்ள இவர்தம் இப்புதுப்படைப்பின் ஓரோ கருத்து மலரும் தருகிறது சிறந்த தூதை.
கவிஞர் ஜெயரவியின் கலைத்தொண்டின் வெற்றிப் பயணம் தொடங்கி, மேன்மேலும் பண்போடு விளங்கித் தொடரட்டும்”.
முக்கியக்குறிப்பு :
சிறுவயதினிலேயே ஜெயரவி படைத்த பெரும் சாதனை - அந்நாள் குடியரசுத் தலைவர் சர்.எஸ். ராதாகிருஷ்ணன் அவர் பாராட்டி வழங்கிய “பாலகவி” என்ற சிறந்த விருது!!!
ஒவ்வொரு அணுவும் ஒரு அகிலம்
ஆசிரியர் : ஜெயரவி, வெளியீடு : கீதாஞ்சலி பதிப்பகம்,
எண். 133, 16வது குறுக்குத் தெரு, நியூ சவுத்ரிநகர், வளசரவாக்கம், சென்னை - 87, விலை : ரூ. 75.00
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|