நூர் விமர்சனம்
உயிர்க்கலம்
நி. நதியா
கவிதை வடிவம் மிகப் பழமை வாய்ந்த இலக்கிய வடிவமாகும். சங்க காலம் தொட்டு இன்று வரை கவிதையானது தன்னை ஒவ்வொரு
காலகட்டத்திலும் புதுப்பித்துக்கொண்டு உயிர்ப்புடன் இயங்குகிறது. அதுபோல் கவிதைக்கான பாடுபொருளும், சமூகத்தில் மக்களின் வாழ்க்கைப் பற்றியதாகவே அதன் உள்ளடக்கம் அமைகிறது.
ஆங்கிலேயரின் வருகையினால் இங்குப் புதுக்கவிதைகள் தோன்றியது என்பதும், இவ்வடிவம் முன்பிருந்த மரபுக் கவிதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, கற்றறிந்த அனை வரையும் கவர்ந்தது. காரணம், எளிய சொல், எளிய பதம், எளிய நடை என்பதாகத் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு எல்லோருக்குமான சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைப்பதின் மூலம் சமூக மாற்றத்திற்காக முன்நின்றது. இவையே கலை இலக்கியத்தின் பணியாகவும் கொள்ளலாம். கவிதை இவ்வுச்சத்திற்குச் சென்றதைப் பாரதியிடம் காணலாம்.
இவ்வாறு வளர்ந்த கவிதைகளில் இன்றைய கவிதைகளை நோக்கும்போது, கவிதை பெரும் வீழ்ச்சிக்குள்ளாக இருப்பதை அறிய முடிகின்றது. இன்றைய கவிதை உத்தி, நுற்பங்களில் மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தாலும் உள்ளடக்கம் மிகவும் பின்தங்கியதாகவே இருக்கிறது.
இன்றைய கவிதைகளைப் பற்றி ஓரிரு வரிகளில் சொன்னால் கவிதை யாருக்கும் புரிய வேண்டியதில்லை. அதற்கென்று சமூகப் பயன் எதுவும் இல்லை. எளிமையாக புரிந்தால் அது கவிதையே இல்லை என்று இன்று கவிஞர்களாலேயே கவிதைக் குறித்து கூறப்படுகின்றன.
இத்தகைய கவிதைச் சூழலிலிருந்து கவிஞர் கோபால்தாசன் அவரது ஆறாவது தொகுதியாக வெளிவந்துள்ள ‘உயிர்க்கலம்’ கவிதைத் தொகுதியைப் படிக்கும்போது, இருட்டறைக்குள்ளிருந்து வெளிவந்தது போன்ற உணர்வு தோன்றுகின்றது. காரணம் மிகவும் எளிமையான சொற்களும், எல்லோரையும் கவரக்கூடிய நட்பும் காதலும் கலந்த உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.
இதற்கு முன்பிருந்த நிலப்பிரபுத்துவச் சமூகத்தில் இல்லாத சமூக உறவு ஆண் பெண் இடையிலான நட்பு. ஆணிடம் பேசினாலே பெண்ணை தரக்குறைவாகக் கருதும் சமூக உறவை முதலாளித்துவச் சமூகத்தில் மிகவும் உன்னதமான சமூக உறவாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட சமூக உறவு எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு தருணத்தில் ஒவ்வொருவரையும் கடந்துதான் சென்றிருக்கும். தன் வாழ்வில் ஏற்பட்ட பாதிப்பைக் கவிஞர் கோபால்தான் அவர்கள் ஒரு புத்தகம் முழுக்க நெடுங்கவிதையாக அழகுறப் படைத்துத் தந்துள்ளார்.
இக்கவிதையைப் படிக்கும்போது இது காதல்தான், இக்காதல் வெற்றியடையத்தான் போகிறது என்ற ஆவலோடு படிப்பவரை ஒவ்வொரு பக்கத்திற்கும் விரைவாக இழுத்துச் செல்கிறது. ஆனால் இறுதியில் தூய்மையான நட்பாகவே முடிந்துவிடுவது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஆனாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
கவிஞரது கவிதை ஆற்றலுக்கு உதாரணமாக, ஒழுக்கத்தில் / என்னை நீ / யாரிடமும் உதாரணப்படுத்தினாலும் / அது / உன்னால்தான் ஏற்பட்டது / என்பதைக் கூற ஏன் / மறுத்து விடுகிறாய்....
ஆண் பெண் இருவருக்கும் இடையான நட்புணர்வு ஏற்படும் பொழுது அதைத் தூய்மையான நட்பாக கடைபிடிக்கும் போதே நான் ஒழுக்கமானவாக உயர்ந்தது. உன்னுடனான நட்புணர்வினால்தானே என்ற இவ்வரிகளிலும் கண்ணத்தில் / அழைக்க அழைக்க / ஓடி வரும் சந்தோஷம் / அப்போது / வழுக்கி வழுக்கி / விழுந்து கொண்டிருந்தது.... என்று அழுகையை வர்ணிக்கும் வரிகள் அவரது கவிதா ஆற்றலுக்குச் சான்றுகளாக அமைந்துள்ளது.
இக்கவிதைத் தொகுதி பற்றியும், கவிஞரைப் பற்றியும் இறுதியாகக் கூற வேண்டுமானால், புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் நட்புணர்வுக்கும், ஏற்கெனவே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பாலுணர்வுக்கும் இடையில் நகர்ந்து கொண்டிருக்கும் நவீன கால இளம் சோடி ஒன்றின் கால் தடங்களே இந்நூலில் கவிதைகளாகப் பதிந்திருக்கின்றன. ஒரு கணம் ஆண்-பெண் ஈர்ப்பாகவும், மறுகணம் நவீன யுகத்தின் புத்தகம் புதிய நட்புறவாகவும், மாறி மாறித் தோற்றமளிக்கும்.
இந்த உறவின் இயக்கத்தைக் கனவுமயமான மென் - நாடகப் பாங்கில் நடத்திச் செல்கிறார் ஆசிரியர். நெடுங்கவிதை என்ற வடிவத்தில் இந்த உள்ளடக்கம் புத்தம் புதியது. தமிழுக்குத் தேவைப்படுவது என்ற அணிந்துரையில் “பொன்னீலனின்” வரிகள் சிறந்த மதிப்பீடாக அமைகிறது. புத்தகம் பார்ப்பதற்கு அழகாகவும் பிழைகள் அற்றுச் சிறப்பாக வெளிவந்துள்ளது. இளம் கவிஞர்கள் வாங்கிப் படிக்கவேண்டிய நூல்.
உயிர்க்கலம்
ஆசிரியர் : கோபால்தாசன்,
வெளியீடு : அறிவுப் பதிப்பகம், 142, ஜானி ஜான்கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை - 600 014, விலை : ரூ. 45/-
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|