கட்டுரை
மதங்களிடையே ஒரு நல்லிணக்கம் (சரித்திர அடிப்படையிலான ஓர் ஆய்வு)
எம்.ஆர்.ராஜகோபாலன்
உலகெங்கிலும் வன்முறை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள். ஆப்பிரிக்காவைப் பொருத்தவரை - வெவ்வேறு மனித இனங்களிடையே போர் -உதாரணத்திற்கு - சோமாலியா, சூடான், ருவாண்டா - புருண்டி போன்ற நாடுகள். சில ஐரோப்பிய நாடுகள் இவ்வாறான போரில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆயுதங்களை விற்றும் அந்நாடுகளிலிருந்து கனிமங்களையும் பெட்ரோலியத்தையும் அபகரிப்பதற்காகப் பொருளுதவி செய்தும் - போராட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.
மத்தியக் கிழக்கு நாடுகளில் எப்போதுமே போராட்டம்தான் - சில இடங்களில் அரசியல் காரணங்களுக்காக - உதாரணத்திற்கு ஈராக்கில், அரசியல், மதவேறுபாடு காரணமாக - இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே, இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து சென்ற நாடுகளில் சில ரஷ்யாவுடன் இதே மத - அரசியல் காரணங்களுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன உதாரணம் - ரஷ்யாவில் செச்சன்யாவும்.
ஒரே மதத்தைச் சார்ந்த வெவ்வேறு பிரிவினருக்கிடையேயும் வன்முறைகள் நிகழ்கின்றன - மிகவும் மோசமான உதாரணம் ஈராக். இங்கு ஷியா, சன்னி - இரு முஸ்லீம் பிரிவுகளுக்கிடையே மிகக் கொடூரமான வன்முறை தினமும் அரங்கேறி வருகிறது. ஈராக்கின் “குர்ட்” பகுதியில் இப்போராட்டம் இனப் போராட்டமாகவும் மாறுகிறது. அமெரிக்கர்கள் ஷியா பிரிவினருக்கு ஆதரவு காட்டிப் போராட்டத்திற்குத் தூபம் போடுகின்றனர். அயர்லாந்து நாட்டில் கூட அவ்வப்போது புராடெஸ்டண்ட், கத்தோலிக்க இரு பிரிவு கிறிஸ்தவர்களிடையே வன்முறை நிகழ்கிறது. ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளில் சில சிறுபான்மை இனமக்கள் பிரிவினைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் வன்முறை வெடிக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை - வன்முறை - பல்வேறு உருவங்களில் வெடிக்கிறது. இது முஸ்லீம்களிடையே வன்முறை நிகழும் போது ஊடகங்கள் இந்த வன்முறைக்கு முக்கியத்துவம் தருகின்றன. சில பகுதிகளில் - அரசியல் - பொருளாதார அடிப்படையிலான போராட்டங்கள் நிகழ்கின்றன - நக்ஸலைட் - மாவோயிஸ்ட்கள் காரணமாக இப்போராட்டங்களும் வன்முறையும் கூட ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஹிந்து மதத்தின் பிரிவுகளிடையே நடைபெறும் வன்முறைகள் - குறிப்பாக தலித்துகளுக்கெதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு - ஊடகங்கள் அவ்வளவாக முக்கியத்துவம் தருவதில்லை. காரணம் ஊடகங்கள் மேல் ஜாதியினர் கையில் உள்ளதுதான்.
வன்முறைகள் சரித்திரப் பின்னணியில் பார்க்கும்போது நமது முகத்தில் அறைவது போன்ற தகவல் என்னவென்றால் மதங்களின் பெயரால் நடைபெறும் வன்முறைகளும் உயிர் பலியும் வேறு எந்தக் காரணிகளையும் விட அதிகமானவை என்பதுதான். 1914 முதல் 1919 வரை நிகழ்ந்த முதலாவது உலகப் போரிலும் 1939 முதல் 1945 வரை நிகழ்ந்த இரண்டாவது உலகப் போரிலும் கோடிக்கணக்கான போர்வீரர்களும் மக்களும் பலியாயினர். குறிப்பாக இரண்டாவது உலகப் போரில் ஐந்து முதல் பத்து கோடி வரை போர் வீரர்களும் மக்களும் பலியாயினர். ஆனால் அதே காலகட்டத்தில் ஜெர்மனியிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் இரண்டாம் உலகப் போரில் பலியானவர்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் யூதர்கள் நாஜிகளால் கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் சுதந்திர காலகட்டத்தில் - 1947-ம் ஆண்டில் பஞ்சாப், வங்க மாநிலங்கள் - இந்து முஸ்லீம் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதால் நடைபெற்ற வன்முறைகளிலும் ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் பலியாயினர்.
சிலுவைப் போராட்டங்கள் (க்ரூசேட்ஸ்) நிகழ்ந்த காலம் கி.பி. 10 முதல் - 13 நூற்றாண்டுகள். இந்து முஸ்லீம் மத அடிப்படையில் பிரிக்கப்பட்டதால் நடைபெற்ற வன்முறைகளிலும் ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் பலியாயினர்.
இந்தச் சூழலில் சிந்திக்கும்போது - மதங்களின் முக்கியத்துவம் - குறிப்பாக வெவ்வேறு மதங்களுக்கிடையேயும் நல்லிணக்கம் மிகவும் அவசியமானதோர் தேவை என்பதை நம்மால் உணர முடிகிறது. மனித சமுதாயத்தில் பெரும்பாலான மக்களிடையே மதநம்பிக்கை சற்று ஆழமாகவே உள்ளது. உலகின் ஒவ்வொரு மதமுமே - அன்பு இரக்கம் - மக்கள் சேவை போன்ற நற்பண்புகளையே வலியுறுத்துகிறது. இருப்பினும் சில மதவாதிகளும் - தீயகுணம் கொண்டவர்களும் நமது மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டது - கையில் ஆயுதத்தை எடு - உன் மதத்தைக் காப்பதற்குப் போராடு - மாற்று மதத்தினரைக் கொல் - அல்லது உயிரைப் பலி கொடுத்து தியாகி என்ற பெயர் எடு - போன்ற போதனைகளை வழங்கி வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.
மதங்களிடையே நல்லிணக்கம் பற்றிய ஒரு தீர்வு காண்பதற்கு முன்பாக - மதமானது நாகரிகங்களுடனும் சரித்திரத்துடனும் எவ்வாறு பின்னிப் பிணைந்துள்ளது - போன்ற விஷயங்களைச் சற்று ஆய்வு செய்யவேண்டும். இந்த ஆய்வின்போது - ஒரு நாட்டில் பல்வேறு மதத்தினர் வசிக்கும் சூழலில் அவர்களிடையே பெரும்பாலும் சகிப்புத்தன்மைதான் நிலவி வந்ததே தவிர போராட்டங்கள் அல்ல என்பதும் புலப்படுகிறது. மதங்களின் பெயரால் வன்முறைகள் மிகவும் கூடியது இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் என்பதும் தெளிவாகிறது. இன்றைய சூழலில் உலக அமைதி மற்றும் மனித சமுதாயம் சந்திக்கும் மிகப் பெரிய - அபாயகரமான சவாலும் மதங்களிடையே நிகழும் போராட்டங்கள்தான்.
மதம் என்றால் என்ன?
மதங்களில் - முரண்பாடுகள் - பல்வேறு கூறுகள். பரிமாணங்கள் - எல்லாமே உண்டு. எந்த ஒரு மதத்திற்குமான சொற்பொருள் விளக்கம் (டெஃபினிஷன்) தருவது இயலாத காரியம். இருப்பினும் ஒவ்வொரு மதத்திற்கும் சில பொதுவான கூறுகளும் உள்ளன. உலகின் எல்லா முக்கிய மதங்களுக்குமே - பொதுவான கோட்பாடுகள் - புனைகதைகள் - நீதி மற்றும் சமூகம் சார்ந்த போதனைகள், சடங்குகள், சமுதாய அமைப்புகள், ஆத்மார்த்த அனுபவங்கள் மேலும் உணர்வுகள் உள்ளன. இந்தப் பரிமாணங்களின் அடிப்படையிலேயே - பெரிய கட்டிடங்கள், கலைகள், சங்கீதம் - மேலும் அடிப்படை நம்பிக்கைகள் - பழக்கங்கள் - எல்லாமே உருவாகின. ஆனால் எல்லா மதங்களுமே - கிறிஸ்தவ - மற்றும் புத்த மதங்களைப் போல் உருவாகவில்லை. இந்த மதங்களுக்கான நிறுவனங்கள் - கிறிஸ்தவர்களுக்கு தேவாலயங்கள் (சர்ச்சுகள்) புத்தர்களுக்கு சங்கங்கள் (புத்தபிட்சுக்களின் சங்கம்) - நாடுகள் - கலாச்சார எல்லைகளுக்கு அப்பாலும் அமைக்கப்பட்டுள்ளன.
2.2 பழங்குடி மக்களின் நாகரிகங்களும் மதங்களும்:
எகிப்து, மெசப்பட்டோமியா, அஜ்டெக் மற்றும் மாயா (செவ்விந்தியர்) நாகரிகங்களில் மதம் என்பது அந்த நாடுகளின் வழிபாட்டு மரபாகவே இருந்தது. மதம் சார்ந்த கோவில்கள் இயற்கையின் உலக நியதியையும் - சமுதாயத்தையும் ஒருநிலைப்படுத்தி வந்தன. அரசின் வழிபாட்டு மரபுகள் கல்விக்கான சாதனமாகவும் விளங்கின. மெசப்பட்டோமியா நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்ட புத்தாண்டு விழாவில் உலக நியதி - உலகம் தோன்றிய கதை - முற்றிலுமாகப் படிக்கப்பட்டு நடித்தும் காட்டப்பட்டது. எகிப்து நாட்டிலும் ஒவ்வொரு முறையும் ஒரு மன்னரிடமிருந்து மற்றொரு மன்னரிடம் ஆட்சி ஒப்படைக்கப்படும் தருணங்களில் வெற்றி பற்றி மறைபொருள் நாடகம் (மிஸ்டரி ப்ளே) நடித்துக் காண்பிக்கப்பட்டது.
விவசாயத் தொழில்நுட்பத்தில் புதிய மாற்றங்கள் காரணமாகவே இக்கலாச்சாரங்கள் உருவெடுத்தன. இந்தத் தொழில்நுட்பத்தைச் சார்ந்தே புனிதமான அல்லது தெய்வீக - அரசுடைமைக் கோட்பாடு உருவாகியது. நாகரிகத்தின் எல்லா முக்கிய கூறுகளையும் உள்ளடக்கியவனாக அரசன் கருதப் பட்டான். விவசாயம், உலகநியதி, அரசியல் ஆகியவை அழியாமல் தொடர்வதற்கு அரசனே காரணமாகவும் கருதப்பட்டான். இந்த நாகரிகங்கள் தொடர்ந்து நீடிப்பதற்கு உரியதோர் கல்விமுறையும் அவசியமாக இருந்தது. இந்தக் கல்வியை மதகுருமார்கள் அளித்தனர். அவர்கள் கோவில்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர். மாணவனை மதபோதனையில் ஈடுபடுத்துவதற்காகவும் அல்லது வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்தவும் - கல்வி பயன்படுத்தப்பட்டது. இந்தப் பழங்கால நாகரிகங்களில் கல்வி - உலக நியதியை - நிலைப்படுத்தி நாட்டினை அழியாமல் காப்பதற்கு அவசியமாகக் கருதப்பட்டது.
பிற்கால சாம்ராஜ்யங்கள்:
உலகின் பல பகுதிகளிலும் புதிய சாம்ராஜ்யங்கள் உருவாகின. மன்னர்கள் தங்களை தெய்வத்தன்மை கொண்ட வர்களாகக் கூறிக்கொண்டனர். மதகுருமார்கள் இக்கொள்கைக்கு ஆதரவு நல்கி அதனை வலியுறுத்தி வந்தனர். இவ்வாறாக மதத்திற்கும் - அரசியலுக்குமான தொடர்பு சரித்திர காலம் முழுவதுமே தொடர்ந்து வந்துள்ளது. மதம் நாட்டை ஒருங்கிணைக்கும் அல்லது நிலைப்படுத்தும் சக்தியாக விளங்கி வந்துள்ளது.
இந்திய நாட்டில் ராமாயண காலத்திலிருந்தே (ஏறத்தாழ கி.மு. 10வது நூற்றாண்டு) மன்னர்கள் தங்களைக் கடவுளர்களின் சந்ததிகள் என்று வலியுறுத்தி வந்துள்ளனர். தங்களை சூரிய - அல்லது சந்திர வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர். இந்துக்களுக்கு சூரியன் சந்திரன் இரண்டும் தெய்வங்கள்தான். கி.பி. ஏழாவது நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பல்லவ மற்றும் சோழ சாம்ராஜ்யங்கள் உருவெடுத்தன. கூடவே பக்திக் காலமும் தொடங்கியது. நாட்டின் மிகப்பெரிய கோவில்களின் கடவுளர்களின் பெயர்களை இந்த மன்னர்கள் சூட்டிக்கொண்டனர். பாமர மக்களுக்கு அரசனுக்கும் தெய்வத்திற்குமிடையே வேறுபாடு எதுவும் தெரியவில்லை. மன்னனுக்கு சட்ட அடிப்படையிலான ஏற்புடைமை (Legistimacy) மத குருமார்களின் ஒத்துழைப்புடன் கிடைத்தது. நாட்டின் சமூக நிலைப்பாடும் உறுதி செய்யப்பட்டது.
இந்திய நாட்டைப் பொருத்தவரை அரசர்களும் அரசாங்கமும் - பல்வேறு மதங்களுக்கிடையே வித்தியாசம் பாராட்டாமல் - சகிப்புத்தன்மை காட்டினர். இது இந்து மததின் கோட்பாடுகளில் இயல்பாகவே அமைந்திருந்தது. இந்து மதம் உலகின் மிகத் தொன்மையான மதங்களில் ஒன்றாக இருந்தும் கூட - இம்மதத்திற்கான - தனியானதோர் கடவுளோ, மறைச் செய்தியோ, குறிப்பிட்ட நிறுவனமோ கிடையாது. கடவுளர்கள் ஏராளமாகவே உள்ளனர். பல்வேறு நம்பிக்கைகளும் சடங்குகளும் உள்ளன. சரித்திர காலத்திற்கு முன்பாகவே நாத்திகமும் இந்தியாவில் தோன்றிவிட்டது. நாத்திகர்களான சார்வாகர்கள் மதகுருமார்களுக்கு சவாலாக விளங்கி வந்தனர். சார்வாகர்களை இந்து சமுதாயம் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டது.
உண்மையில் ‘இந்து’ - ‘இந்து மதம்’ போன்ற வார்த்தைகள் கி.பி. எட்டு - ஒன்பதாவது நூற்றாண்டுகளில்தான் தோன்றின. அராபியர்களும் - பாரசீக நாட்டவர்களும் - சிந்து நதிப் பிரதேசத்தில் வசிக்கும் மக்களை - ஹிந்து என்று குறிப்பிட்டனர். அந்த மொழிகளின் எழுத்து வடிவத்தில் ‘ஸ’ எழுத்தும் ‘ஹ’ எழுத்தும் மாற்றி உச்சரிக்கப்படுவதால் - சிந்து என்கிற வார்த்தை ஹிந்து அல்லது இந்துவாக உருவெடுத்தது. உலகின் வேறு எந்த மதத்திற்கும் இப்படி ஒரு வேடிக்கையான தற்செயலான பெயர் இருப்பதாகத் தெரியவில்லை. இந்து மதம் என்கிற பெயர் வருவதற்கு முன்பு - நம் நாட்டில் நிலவி வந்த மதம் - ‘சனாதனதர்மம்’ சைவம், வைஷ்ணவம், சாக்தம் - போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டது.
அசோகமன்னர் ஆட்சிபுரிந்த காலகட்டத்தில் புத்தமதம் தோன்றி 200 அல்லது 300 ஆண்டுகளே ஆகி இருந்தன. அசோகரின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். கி.மு. மூன்றாவது நூற்றாண்டில், கலிங்கப் போரில் பெற்ற வெற்றிக்குப் பின் வன்முறையைத் துறந்து புத்தமதத்திற்கு மாறினார். அவரது கல்வெட்டுகள் தரும் செய்தி என்னவென்றால் - எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் - ஏதோ சில காரணங்களுக்காக - மரியாதைக்குரியவர்கள் - என்பதுதான். இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் - அசோக மன்னர் புத்தமதத்தைத் தழுவினாலும் அம்மதத்தை மகத நாட்டின் மதமாக அறிவிக்கவில்லை. புத்தமதம் தோன்றிய காலகட்டத்திலேயே தோன்றிய சமணமதமும் (ஜைனமதம்) தொன்மையான இந்துமதமும் அசோகரது ஆட்சியின் தழைத்தன.
தென்னிந்தியாவிலும் - பல்லவர் - சோழர் ஆட்சிக் காலத்தில் சமணர் கோவில்களும், புத்தவிஹாரங்களும் இந்துக் கோவில்களுடன் - எல்லா நரகங்களிலும் இருந்து வந்தன. பாமர மக்களுக்கு எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றும் உரிமை இருந்தது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் தோற்றுவித்த பக்தி இயக்கத்தில் (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) இந்து கடவுள்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டனர். இதன் விளைவாக புத்த, சமண மதங்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. புத்த - சமண மதங்களில் - நாயன்மார்கள் - ஆழ்வார்கள் போன்று - மக்களைக் கவரும் இனிய பாடல்களைப் பாடி நாட்டைச் சுற்றி வந்து மதத்தைப் பரப்பும் நபர்கள் தோன்றவில்லை. (தொடரும்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|