மறந்து போகுமோ மனிதம்?
அ.வெண்ணிலா
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்!’ என்று உலக சகோதரத் துவத்தைப் பேசும் இலக்கிய வாழ்க்கைக்கு நாம் சொந்தக்காரர்கள் என்றாலும் மனிதகுலம் முழுமைக்குமான ஒரே நீதி, ஒரே நியாயம், ஒரே உரிமை, ஒரே உண்மை என்பவையெல்லாம் மழுங்கடிக்கப்பட்டே நம்மின் வரலாறு வாழ்கிறது.
இதிகாச கால நாயகனான ராமன் தொட்டு இன்றைக்கு மரண தண்டனைக் கைதியாக உள்ள அப்சல் வரை இதே வாழ்வின் நியதி. மன்னனுக்கு ஒரு நியதி, மன்னன் மனைவிக் கொரு நியதி, மன்னனின் காவலாளுக்கொரு நியதி என்பவை யெல்லாம் சமூக நியதிகளாக்கப்பட்டு, மனிதர்கள் வாழ்வு நிலைகளில் ஏற்றத்தாழ்வானவர்களே என ஆழமாக நாம் நம்புகிறோம்.
வெட்டுப்பட்ட ஏகலைவனின் கட்டை விரலுக்கும் ஒரு சமாதானம், எரிக்கப்பட்ட நந்தனின் சாம்பலுக்கும் ஒரு சமாதானம், திண்ணியத்தில் மலம் தின்னும் மனிதர்களுக்கும் ஒரு காரணம்.... என மனித நீதி / உரிமை சிதைக்கப்படுவதற்கு நாம் நெஞ்சு நிறைய காரணங்களைச் சுமந்து கொண்டு சமாதானமடைகிறோம். வர்ணாசிரமம், பெண் அடிமை, உள்ளவன் - இல்லாதவன் போன்ற மனித உரிமைகளுக்கெதிரான எல்லாச் சீர்கேடுகளும் செழித்து வளர்வது இதன் வழியே!
மனித உரிமைகளுக்கான அளவுகோல்களை நம் இதயங்களில் ஆழமாக எழுதி வைத்திருக்கிறது. நம் சமூக அநீதி உயர் குலத்தில் பிறந்தோனாக அறிவித்துக் கொள்ளும் ஒருவனுக்கு மழைநீர் வேகமாக மேலே விழுந்தால் கூட வழக்குப் போட்டு சாதிக்க இயலும். தாழ்த்தப்பட்டவன் வாயில் மலம் திணிக்கப்பட்டால் கூட, நீதிமன்றங்களின் கதவை, தக்கதுணை யின்றி தட்ட இயலாது. இறுகிப்போன இம்முரண்பாடுகளின் மூட்டைகளோடு தான் நம் வாழ்வு.
மனசாட்சியைக் கேலி செய்யும் போலி வாழ்வை, எள்ளி நகையாடவும், குத்திக் கிழிக்கவுமே கவிதைத் தொகுப்பொன்று வந்துள்ளது. கவிஞர் ஸ்ரீரசா எழுதிய ‘மறுபடியும் மானுடம்’ என்னும் இத்தொகுப்பில் ‘மதம், சாதி, கடவுள், புராணங்கள், வர்ணாசிரமம், பெண் அடிமை’ என நம் சமூக அநீதிகளை, மனித உரிமைக்கெதிரான போலித்தனங்களைப் பதிவு செய்துள்ளார்.
மனிதனை, மனிதனாகப் பார்க்க நம் மதம் தடையாக நிற்கிறது. நம் சாதீய உணர்வு தடையாக நிற்கிறது. நம் பொருளாதார நிலை, கல்வி, பால் பேதம்.... எல்லாமே மனத்தடையின் காரணிகளாகின்றன. ‘இந்து’ என்ற ஒற்றைச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் நால்வர்ணமும் வெளிப்படை யானது; உணரக்கூடியது. ஆனால் நால்வர்ணமும் எரித்துப் போட்ட ஐந்தாவது வர்ணமாய்; கருப்பு வண்ணமாய்ப் பெண். குறைந்த உழைப்பில் நிறைவாக வாழ்வதும், தசை தீய உழைத்தும் இழிவான வாழ்க்கை வாழ்வதும் வெறும் பிறப்பினால் தீர்மானிக்கப்படுகிறது என்ற அவலம், நம் சமூக அவலம். உழைப்பு குலம் சார்ந்தும் உயர்வு தாழ்வு கொண்டுள்ளது. கவிதையொன்று யுகாந்திரமான இவ்வலத்தைச் சுட்டுகிறது.
சாக்கடை சுத்திகரி / சகதியில் இறங்கி உழு / ----- / மலம் அள்ளு / பிணம் எரி / தோலறுத்துச் செருப்புத் தை / ----- / தொந்திமேல் பூணூல் புரள / வேதம் ஓதி மந்த்ரஞ் சொல்லி / ஏமாற்றிப் பிழைப்பதை விட / கடவுள் பற்றிய நம்பிக்கைகளும், அவரின் சக்தியின் மீதான தீவிர நம்பிக்கைகளும் அளப்பரிது. ஆயிரக்கணக்கான கதைகளைக் கொண்டது. ஆனால், ஆதியும் அந்தமும் இல்லாத ஜோதி, அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்த அருள் ஜனிக்கும் பூமி மட்டும் அங்குலம் இடம் மாறக் கூடாது என அரசியலாக்கப்பட்டு, பிழைப்புத் தேடியலையும் அரசியல் கட்சிகளுக்கு, கடவுளும் ஓர் அரசியல் துர்க்கருவி யாகி உள்ளதை சுட்டிக்காட்டும் ஒரு கவிதை.
இந்துவும் முஸ்லீமும் மோதிக் கொள்வதில், இந்தியாவில் தினந்தினம் செத்து விழுந்து கொண்டிருக்கிறது மனிதம். திரேதா யுகமோ, துவாபரயுகமோ, கலியுகமோ.... மதங்களின் பின்னால் வெறி பிடித்துச் செல்லும் காட்டுமிராண்டித்தனம் சொல்கிறது. இது மனிதர்களுக்கான யுகமில்லையென்று.
இந்திய மெய்ஞ்ஞானத் தேடலில் இந்திய மண் புண்ணிய பூமியாகக் கொண்டாடப்படுகிறது. ஆன்மீக விசாரங்களும், தத்துவத் தேடல்களும், துறவறங்களும் அன்பை விதைக்கவும், ஆன்மா செழிக்கவும் கண்ணீர் சொரிந்து கவி பாடியுள்ளனர். கடவுளை வேண்டி உருகி உருகித் தெறித்த பக்திப் பழங்களுக்குப் பின்னால், சாதாரண மக்கள் சிந்திய ரத்தமும், மதங்களுக் கிடையிலான சண்டையில் மிதந்த மண்டை ஓடுகளும், வயிற்றைக் கீறி எடுத்துக் கொளுத்தப்படும் நிறைமாதக் கருவும்.... நம் போலி மனிதத்தைத் தோலுரிப்பதைப் பாடும் இக்கவிதைகள் நம் தேசத்தின் இருப்பை வெட்ட வெளிச்சமாக்குகின்றன.
மானுட வாழ்வின் மேன்மைக்குத் தடையாயுள்ள எல்லாச் சிக்கல்களும் ஸ்ரீரசாவின் கோப வரிகளில் முகமூடியில்லா உண்மையாய்ச் சிரிக்கின்றன. சமகால வாழ்வின் பொய்மை மட்டுமல்ல இது.... நம் வரலாற்றின் பொய்மையும் என நிரூபித் துள்ள இத்தொகுப்பு சமகால இலக்கியத்தின் முக்கிய வரவாகும்.
மறுபடி மானுடம்
ஆசிரியர் : ஸ்ரீரசா,
வெளியீடு : காலம், 25, மருதுபாண்டியர் 4-வது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர்வீதி,
மதுரை - 2, விலை : ரூ. 40/-
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|