Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2007

கட்டுரை

பேரா. நா. வானமாமலை
எஸ். தோதாத்ரி

ரா. நா. வானமாமலை 1917-ம் ஆண்டு பிறந்தார். 1980ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மறைந்தார். அவர் தந்தையார்
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரியின் கிராம முன்சீப்பாக அலுவல் பார்த்தார். எனவே அந்த ஊரில் ஒரு செல்வாக்கான குடும்பம் அவருடையது. நான்குனேரியில் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பு படித்தார். மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. (இரசாயனம்) கற்றார். மறைந்த வழக்கறிஞர் என்.டி. வானமாமலை அவரது கல்லூரித் தோழர் ஆவார். அதன் பின்னர் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் எல்.டி. பட்டம் பெற்றார். மதுராந்தகம், கோயில்பட்டி, தென்காசி, நான்குனேரி ஆகிய இடங்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

Na.Vanamaamalai நான்குனேரியில் அவரது அரசியல் வேலைகள் அதிகரித்தன. தோழர் நல்லகண்ணு, ப. மாணிக்கம், முத்துமாணிக்கம், பி.எஸ். காந்தி ஆகியோர் அவருடன் பணியாற்றியவர்கள் ஆவார். இதன் காரணமாக அவர் ஆசிரியப் பணியை ராஜினாமா செய்தார். நான்குனேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோயிலில் தாழ்த்தப் பட்டோரை ஆலயப்பிரவேசமாக அழைத்துச் சென்றார். நான்குனேரி மடத்தார் அதனை எதிர்த்த போதிலும் அவர் அஞ்சவில்லை.

அவரது வாழ்விற்காகப் பாளையங்கோட்டையில் கே. சீனிவாசன் என்பவருடன் இணைந்து “ஸ்டூடண்ட்ஸ் டியூட்டோரியல் இன்ஸ்டியூட்” என்ற தனிப் பயிற்சி நிறுவனத்தைத் துவங்கினார். இது பின்னர் பெரியதாக வளர்ந்து வானமாமலை தனிப் பயிற்சிக் கல்லூரியாக மாறி, அவரது வாழ்விற்கு ஆதாரமாக இருந்தது.

திருநெல்வேலிச் சதிவழக்கில் கைதாகி விடுதலை ஆனார். நெல்லை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் பல பொறுப்புக்களை வகித்தார். இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் அவருக்கிருந்த ஈடுபாடு நெல்லையில் செழிப்பாகவே வளர்ந்தது. “மணிக்கொடி”, “தாமரை”, “சாந்தி”, “சரஸ்வதி” ஆகியவற்றில் இலக்கியம் பற்றிப் பல கட்டுரைகள் எழுதினார். அவரது பரிணாம வளர்ச்சியானது ஒரு மார்க்சியச் சித்தாந்தவாதி என்பது இதன் விளைவு நாட்டார் வழக்காற்றியலில் அதிக ஈடுபாடு காட்டி, நாட்டார் பாடல்களைப் பதிப்பித்தார். அவரது இறுதிக்காலம் அமைதி யாகவே முடிந்தது.

பேராசிரியரது பணி பரந்து பட்டது. அவரது பணியில் முதலில் குறிப்பிட வேண்டியது மார்க்சிய அறிவைப் பரப்பு வதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சி. கம்யூனிஸ்ட் கட்சியில் மார்க்சிய வகுப்புகளை ஒரு முகப்படுத்தியது அவரது முக்கிய மான பணியாகும். தமிழகத்தின் பல இடங்களில் அவர் மார்க்சிய வகுப்புகளைக் கட்சியின் துணையுடன் நடத்தி யுள்ளார். அவர் ஒரு செவ்வியல் மார்க்சிய வாதி. மார்க்சியத்தை அடிப்படை மேற்கோப்பு என்ற உறவு நிலையிலேயே கற்பித்தார். அதே சமயத்தில் அவர் மார்க்சியத்தை ஒரு வரட்டுச் சூத்திர மாகக் காணவில்லை. அதனை ஒரு வழிகாட்டியாகவே கண்டார். அதனை தமிழகச் சூழ்நிலைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் மிகவும் அதிகமாக இருந்தது. அதன் விளைவுதான் அவர் எழுதிய “மார்க்சிய இயங்கியல்” மார்க்சியச் சமூகவியல் கொள்கை”, “மார்க்சிய அறிவுத் தோற்றவியல்” போன்ற நூல்கள் இவை அடிப்படையான நூல்கள்.

இந்த மார்க்சிய ஞானம் தான் அவரைத் தமிழகப் பண்பாட்டு விஷயங்களைக் காண்பதற்கு உறுதுணையாக இருந்தது. தமிழ்நாட்டின் வரலாற்றை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து சில அடிப்படையான கருத்துக்களை முன்வைத்தவர் பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள். சங்க காலம் என்பது நிலப்பிரத்துவத்தின் தோற்ற காலம் என்பது அவரது கருத்தாக இருந்தது. சோழர்கள் காலத்தின் சமூக உறவுகளை அவர் தெளிவாகவே ஆராய்ந்துள்ளார். “The consolidation of fludalism during the period of later cholas” என்ற ஆங்கிலக் கட்டுரை சோழர்கள் காலத்திய நிலப்பிரபுத்துவம் ஒரு உயர்ந்த கட்டத்தை அடைந்ததைச் சுட்டுவதாக உள்ளது. இதே போன்று நில உடை அமைப்பிற்குள் இடம் பெற்ற அக மாறுதல்களை விளக்கும் வகையில் அமைந்த கட்டுரைகள் அவர் நாட்டார் வழக்கியலில் பெருங்கதைகளுக்கு எழுதிய முன்னுரைகள் தெளிவாக விளக்குகின்றன. ‘கட்டபொம்முகதை’, ‘ஐவர் ராஜாக்கள் கதை’, ‘முத்துப்பாட்டன் கதை’, ‘வீணாதி வீணன் கதை’ போன்றவற்றின் முன்னுரைகள் தமிழக வரலாற்றை மார்க்சிய நோக்கில் எழுதுவதற்கு முன் மாதிரியாக அமைந்தவை.

தமிழகத்தில் தத்துவத்தின் வளர்ச்சி பற்றி அவர் தீர்க்கமான கருத்துக்களைக் கொண்டிருந்தார். இன்று பின் நவீனத்துவத்தின் தாக்கம் காரணமாக பலர் மாற்றுக் கலாசாரம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் பின் நவீனத்துவத்தின் துணை இல்லாமலேயே மாற்று கலாசாரம் பற்றிய சிந்தனையை முன் வைத்தவர் அவர். இதனை அவரது தத்துவம் பற்றிய கட்டுரை களிலும், நாட்டார் வழக்காற்றியல் தொகுப்பிலும் காணலாம். சங்க இலக்கியங்களில் காணப்படும் பொருள்முதல் வாதக் கருத்துக்களை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். சித்தர்களின் தத்துவம் பற்றியும் சிலப்பதிகாரத்தில் காணப்படும் நாட்டார் வழக்காற்றியல் மரபுகள் பற்றியும் எழுதியுள்ளார். மரபுவழி யிலான தத்துவம், இலக்கியம் ஆகியவற்றில் காணப்படும் எதிர்க்குரல்களை அவர் பதிவு செய்துள்ளார். ஆனால் அதே சமயத்தில் பெரிய இலக்கியங்களில் உள்ள மனித நேயக் கூறுகளை அவர் மறுக்கவில்லை. அவர் ‘நந்தன் கதை’ பற்றி எழுதியுள்ளது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். கம்பனில் காணப்படும் மனித நேயக் கூறுகளை அவர் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலக்கியம் பற்றி அவர் பல கருத்துக்களை வெளி யிட்டுள்ளார். சங்க இலக்கியம் தொட்டு, தற்கால இலக்கியம் வரை அவர் கையாள்வது மார்க்சிய அணுகுமுறை ஆகும். அதாவது இலக்கியத்தை அதன் சுற்றுப்புறத்தோடு பொருத்திப் பார்த்துக் காண்பதாகும். அவருடைய “புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்” என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. புதுக்கவிதைப் பற்றி மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட முதல் நூல் என்று கூட இதனைக் கூறலாம். புதுக்கவிதையின் மீது ஆதிக்கம் செலுத்தும், சரியலிசப் போக்குகளை விமர்சனம் செய்து, அதன் இடது சாரிப் போக்குகளை வரவேற்று எழுதிய நூல் இதுவாகும். “மார்க்சிய அழகியல்” ஒரு முக்கியமான நூல். பிரதிபலித்தல் கோட்பாட்டை அடிப்படையாக ஏற்றுக் கொண்டு மார்க்சிய அழகியல் பற்றி விளக்கமாக எழுதப்பட்ட நூல் இது. வள்ளுவர், கம்பன், கார்க்கி என்று பல இலக்கிய கர்த்தாக்களை மேற்கோளாகக் காட்டி இந்த நூலை எழுதியுள்ளார். யதார்த்தவாதம், சோஷலிச யதார்த்த வாதம் ஆகியவற்றிற்கு விளக்கத்தை இந்த நூலில் காணலாம்.
பேராசிரியரின் பணிகளில் மிக முக்கியமானது தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது ஆகும். தமிழ் நாட்டின் கிராமியப் பாடல்களைத் தொகுத்து அவற்றிற்கு விளக்கம் அளித்து வெளியிட்டது அவரது மிகச் சிறந்த பணி. அவரது மதிப்புக்களின் சிறப்பு மூல பாடத்தை மாற்றாமலேயே பாடல்களை இடம் பெறச் செய்தமை ஆகும். நாட்டார் வழக்காற்றியலில் இடம் பெற்றிருந்த பெருங்கதைப் பாடல்கள், சிறுசிறு நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட சிறு பாடல்கள் என்ற இருபகுதிகளாக அவர் இவற்றை வெளியிட்டார். நாட்டார் வழக்காற்றியல் பற்றித் தார்வார்பல்கலைக் கழகத்தில் ஓராண்டுக் காலம் தங்கி ஆய்வு செய்து ஒரு ஆய்வு நூலையும் வெளியிட்டார்.

“Studies in the folkalore of Tamilnad” என்ற அந்த நூல் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. இந்த ஆய்வுப் பணிக்காக இலங்கை யாழ்பாணப் பல்கலைக் கழகம் அவருக்கு டி.லிட். பட்டம் அளித்தது. பேராசிரியரது இப்பணிகாரணமாகத் தமிழகப் பல்கலைக் கழகங்களில் நாட்டார் வழக்காறு பற்றிய ஆய்வுகள் இடம் பெற்றன எனலாம். ஆனால் அந்தப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியரது மார்க்சிய முறை இயல் என்பது பின்பற்றப் படவில்லை என்பது வருந்தத்தக்க விஷயம் ஆகும்.

பேராசிரியரது பணிகளில் சிகரம் வைத்தது போன்ற நிகழ்ச்சி நெல்லை ஆய்வுக் குழுவை நிறுவியதும் அதன் தொடர்பாக ‘ஆராய்ச்சி’ பத்திரிகையை வெளியிட்டதும் ஆகும். 1969-ம் ஆண்டு துவங்கி 1980 வரை வெளிவந்த ‘ஆராய்ச்சி’ பத்திரிகையானது தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். இதில் பேராசிரியரது அணுகுமுறை மார்க்சியம் என்று இருந்தாலும், பல்வேறு வகையான, முற்போக்கான கருத்துக்களை அவர் வரவேற்றார். தரமான கட்டுரைகளை இதில் வெளியிட்டார். இந்தப் பத்திரிகை மூலம் வெளிவந்த கட்டுரைகள் தமிழ் ஆராய்ச்சியில் புதிய பாதையை வகுத்துக் கொடுத்தவை என்றால் மிகை ஆகாது. பல்துறை அறிஞர்கள், கடுமையான பயிற்சி பெற்றவர்கள் இதில் எழுதினார்கள். தமிழ் ஆராய்ச்சியின் வரலாற்றை எழுத விரும்புபவர்கள் அதன் வளர்ச்சியை ‘ஆராய்ச்சி’ என்பதற்கு முந்தி பிந்தி என்று வரிசைப்படுத்திக் கொண்டனர். இயக்க மறுப்பியல் போக்கினையே அதிகமாகக் கொண்ட தமிழ் ஆராய்ச்சியை இயங்கியல் போக்கிற்குத் திருப்பியது ஆராய்ச்சியின் பங்களிப்பாகும்.

நெல்லை ஆய்வுக் குழு மூலம் பேராசியர் அவர்கள் ஒரு ஆய்வு குழுவினரையே உருவாக்கியுள்ளார். குமரியில் பல பயிற்சி முகாம்களை அமைத்தார். குழுவினர் இன்று பல துறைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியரது பணி பரந்து பட்டது. அவர் ஒரு மார்க்சியவாதி. ஆனால் அதனைக் கொச்சைப்படுத்தியவர் அல்லர். அவர் ஒரு பண்பாட்டுப் போராளி. தமிழகப் பண்பாடு பற்றி அவர் அதிகம் சிந்தித்தவர். ஆனால் அவர் பண்பாடு என்பதைக் குறுகலாகக் கண்டவர் அல்லர். அவர் ஒரு மனித நேயவாதி. ஆனால் அவர் பாட்டாளி வர்க்க மனித நேயத்தை உயர்த்திப் பிடித்தவர். மொத்தத்தில் அவர் ஒரு பன்முகச் சிந்தனையாளர். அவரைப் பற்றிய புரிதல் இன்று நமக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com