நூல் அறிமுகம்
வரலாற்றை மீட்டெடுத்தல்
சு.ரமேஷ்
ஆ. சிவசுப்பிரமணியனின் இந்த ஆய்வு நூல் கல்வெட்டுகள், சுவடிகள், செப்பேடுகள் மற்றும் பழைய ஆவணங்களின் துணைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் மறைக்கப்பட்ட வரலாற்றின் சில பகுதிகளை மீட்டெடுக்கிறது. இந்நூலில் மொத்தம் 12 கட்டுரைகள் உள்ளன. இவற்றில் 10 கட்டுரைகள் வரலாறு தொடர்பானவை. மீதமுள்ள 2 கட்டுரைகளில் ஒன்று புதுமைப்பித்தன் எழுதிய ‘துன்பக்கேணி’ என்ற சிறுகதையின் வரலாற்றுப் பின்னணி பற்றியும், மற்றொன்று நாவலாசிரியர் அ. மாதவையா குறித்தும் எழுதப்பட்டுள்ளது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தற்பொழுது கருத்தளவில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், பாண்டியர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே தலித்துகள் அர்ச்சகராகப் பணி புரிந்திருக்கிறார்கள் என்று அக்காலக் கல்வெட்டொன்று கூறுகிறது. கோயில்களுக்கு தானம் வழங்கும் அளவிற்கு அக்கால தலித்துகளின் பொருளாதார நிலை மேம்பட்டிருந்திருக்கிறது. ஆதிக்க சாதியினருக்கு நிகராகக் கல்வி அறிவு பெற்றிருந்திருக்கிறார்கள். பின்னாட் களில் இவர்களின் அடிப்படை உரிமைகள் ஒவ்வொன்றும் சலுகைகளாக மாற்றப்பட்ட வரலாறு சோகமானது என்று நூலின் முதல் கட்டுரை கூறுகிறது.
1910ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஆஷ்துரை பொறுப்பேற்றான். இதற்கு முன்பு தூத்துக்குடியில் உதவி ஆட்சியராகப் பதவி வகித்து வந்தான். அப்பொழுதிலிருந்தே சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதில் முனைப்புக் காட்டி வந்தான். நெல்லைக்கு வந்த பின்னர் அதனைத் தீவிரப்படுத்தினான். இதனைக் கண்டு மனம் பொறுக்காத வாஞ்சிநாதன், ஆஷ்துரையும் அவனது மனைவியும் கொடைக்கானலுக்குச் செல்லும்போது மணியாச்சி இரயில் நிலையத்தில் வைத்து அவர்களை சுட்டுக்கொன்றான். பின்பு தானும் அதே துப்பாக்கியில் சுட்டுக்கொண்டு கழிவறையில் இறந்து கிடந்தான் என்பது வரலாறு. ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன் எழுதியதாக ஒரு கடிதம் கண்டெடுக்கப் பட்டுள்ளது. அக்கடிதத்தில் “கேவலம் கோமாமிசம் தின்னக் கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை ழுநடிசபந ஏ...” என்ற ஒரு வரி அக்கடிதத்தின் இடையில் வருகிறது. இவ்வரி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வாஞ்சி அய்யர் கொண்டிருந்த சனாதனப் போக்கையே காட்டுவதாக அமைந்துள்ளது. இந்நூலாசிரியர் ஏற்கெனவே ஆஷ் கொலை பற்றி ஒரு நூலை எழுதியிருக்கிறார். வாஞ்சிநாதன் குறித்த கட்டுரைகள் இந்நூலிலே மூன்று உள்ளன. தொடர்ந்து இது தொடர்பான ஆய்வுகளில் இயங்கி வருகிறார்.
சாதியின் இறுக்கத்தைச் சற்றும் விடாத வாஞ்சிநாதனால் மக்களை ஒன்று திரட்டுவது கடினம் என்பது இவரின் கருத்து. பின்னர் இவ்வரலாற்றைப் பதிவு செய்த பெ.சு. மணி வாஞ்சி அய்யரின் புனிதத்தன்மையைக் காக்கத்தான் எழுதிய “இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற நூலில் “எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை George V என்று மாற்றி வரலாற்று மோசடி செய்துள்ளதாக ‘பஞ்சமனா? பஞ்சயனா? என்ற கட்டுரை ஆதாரபூர்வமாக எடுத்தியம்புகிறது.
மேற்கண்ட கட்டுரையோடு தொடர்புடையது பெரியதம்பி மரைக்காயர் என்ற இஸ்லாமியர் குறித்து எழுதியுள்ள கட்டுரை. 17-ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களுக்கு எதிராகக் கடல் வாணிகத்தில் கொடி கட்டிப்பறந்த பெரிய தம்பி மரைக்காயர் சமயப்பகை காரணமாக கோவில்களையும் தேவாலயங்களையும் இடித்துத் தள்ளியதாக ஒரு கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இது முற்றிலும் தவறானது; கல்வெட்டிலிருந்து படி எடுத்தவர்கள் தவறாகப் பொருள் கொண்டிருக்கிறார்கள். அவர் பகை காரணமாக அதாவது கடற்கரையோரம் வசித்த கத்தோலிக்கப் பரதவர்கள் மீது கொண்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக இது நடந்திருக்கிறது என்று சான்றுகளுடன் விளக்குகிறார். அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக, அச் சமூகத்தின் மீது சனா-----னிகள் கொண்டுள்ள கருத்தை திணிக்கத் தேவையில்லை என்பதாக இக்கட்டுரை அமைந் துள்ளது.
19ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர் இடுப்புக்கு மேல் ஆடை அணிய ‘முலைவரி’ கட்ட வேண்டும் என்ற ஆணை திருவிதாங்கூர் சமஸ்தானத்து மகாராஜாவால் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நடத்திய போராட்டம்தான் ‘தோள் சீலைப்போராட்டம்’ கவர்ச்சிக்கான ஒரு பொருளாக மட்டுமே பார்க்கப்பட்டு வரும் ‘முலைகள்’ குறித்த ஒரு எதிர்வினைக் கட்டுரையும் இந்நூலில் உண்டு. தன்னுடைய முலைகளைத் தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவே பெரும் போராட்டங்களைப் பெண்கள் நடத்த வேண்டியிருந்தது.
வரி கேட்க வந்த அரசு அதிகாரிகளிடம் தன் முலைகளை அறுத்துக்கொடுத்து விட்டு, ‘இனி எதற்கு வரி போடுவாய்’ என்று கேட்ட சம்பவங்களும் அக்காலத்தில் நடந்ததுண்டு. 20ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தமிழகத்திலும் இப்பிரச்சினை பல்வேறு வடிவங்களில் இருந்தது. பொதுவுடைமை இயக்கங்களின் போராட்டத்தின் காரணமாக ஒழிக்கப்பட்டது. அதிகாரவர்க்கம் தன் அதிகாரத்தைச் செலுத்தும் இடமாக முலைகள் இருந்தன என்று இக்கட்டுரை கூறுகிறது. இப்போராட்டத்தை மையப்படுத்தி மலையாள எழுத்தாளர் நாராயன் எழுதிய ‘தலைக்கு முலைக்கும் வரி’ என்ற சிறுகதை காலச்சுவடில் (இதழ் 48) வந்து பரவலான கவனிப்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நூல் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமை களைச் சுட்டிக்காட்டுவதோடு வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுக்கவும் செய்கிறது.
பஞ்சமனா பஞ்சயனா,
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியன், வெளியீடு : பரிசல்,
1, இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, பத்மநாபா நகர், சூளைமேடு, சென்னை - 94, விலை : ரூ. 60/-
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|