கட்டுரை
தமிழகச் சமூகப் பண்பாட்டுத் தளங்களில் பெண்ணியம்
இரு நாள் தேசியக் கருத்தரங்கம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், எம்.வி.எம். அரசினர் கல்லூரி சார்பில் திண்டுக்கல், எம்.வி. முத்தையா அரசு மகளிர்க் கல்லூரியில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் இருநாள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. பெண்ணியச் சிந்தனைக் கருத்துக்கள் பெண்கள் கல்லூரியிலேயே நடைபெற்றது மிகுந்த வரவேற்கத்தக்கது. பெரியாரிய மார்க்சியம். தலித்தியம், காந்தியம் எனும் ஒவ்வொரு மையப் பொருளிது. அதன் பல்வேறு தளங்களிலும், பெண்ணியம் சார்ந்த பதிவுகளை முன் வைத்த ஆய்வுக் கட்டுரைகள் பேராசிரியப் பெருமக்களால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன. பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக் கழக, மாணவ, மாணவிகள் பங்கேற்று கருத்தரங்கத்தைச் சிறப்புச் செய்தனர்.
தொடக்க விழா, முனைவர் ஜி. பங்கஜம், முன்னாள் துணைவேந்தர் அவர்கள், கிராமியப் பல்கலைக் கழகம், பெண்ணியம் என்ற பொறியை ஏற்றி வைக்கவேண்டும் என்று தலைமை உரையாற்றினார் பேரா. சரோஜினி புதியவன், எம்.வி.எம். மகளிர் கல்லூரி அவர்கள் வரவேற்புரை நல்கினார். முனைவர் பா. ஆனந்தகுமார், காந்தி கிராமியப் பல்கலைக் கழகம் அவர்கள் குறிக்கோளுரை வழங்கினார். முனைவர் என். கலா, இயக்குநர் மகளிரியல் துறை அவர்கள் தொடக்கவுரை யாற்றினார். “பெண்களின் சிந்தனை, ஆற்றல், கூர்படுத்த தொடக்கவுரையாற்றினார்” பெண்களின் சிந்தனை, ஆற்றல், கூர்படுத்த படவேண்டும் என்ற சிந்தனையோடு, கல்லூரி முதல்வர் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அ. கிருஷ்ணமூர்த்தி (என்.சி.பி.எச்) அவர்களது நன்றியுரையோடு, ஆய்வரங்கம், காலையில் தோன்றும் கதிரவன் ஒளியைப் போல, காமராஜர் கலையரங்கு எங்கும் ஒலி படர்ந்தது.
மாணவ-மாணவியர் அரங்கம் எங்கும் நிறைந்திருக்க முதல் அமர்வு தொடங்கியது. “பெரியாரியமும் பெண்ணியமும்” எனும் மையப் பொருளில் அமைந்த முதல் அமர்விற்கு நாவலாசிரியர் டி. செல்வராஜ் தலைமை வகித்தார். பெரியாரியத் தத்துவமும் பெண்ணியமும் என்ற தலைப்பில் பேரா. அ. ராமசாமி அவர்களால் கட்டுரை வாசிக்கப்பட்டது. பெண்களைப் பற்றிப் பெரியாரின் சிந்தனைகளை முன் வைத்து, “பெரியாரின் பெண்ணியச் சிந்தனை இறுதியில் இருந்து தொடங்குகிறது” என்றார். இரண்டாவதாக, முனைவர் ந. முருகேசபாண்டியன் அவர்களின், பெண்ணிய வாசிப்பில் திராவிட இயக்க நாவல்கள் எனும் கட்டுரை, திராவிட இயக்கப் படைப்பாளர்களின் படைப்புகளில் பெண்ணியம் பற்றிய பதிவுகள் விமர்சனமாக அமைந்தன. மூன்றாவது ஆய்வுக் கட்டுரையாக, பேரா. ஷாஜஹான்கனி, அவர்களால் திராவிட இயக்கச் சார்பு ஊடக சித்திரிப்புகளில் பெண்ணியம் எனும் தலைப்பில் கட்டுரை வாசிக்கப்பட்டு நாடகம், திரைப்படம் போன்ற ஊடகங்களின் வழியாகத் திராவிட இயக்கப் படைப்பாளர்கள், பெண்ணியம் பற்றியப் பதிவுகளை விளக்கியும், பெண் என்பவள் இரண்டாம் தலைபட்சமாகவே ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறாள், வருகிறாள் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.
உணவு இடைவேளைக்குப் பின், கவிஞர். திலகவதி அவர்கள், “திராவிட இயக்கக் கவிதைகளில் பெண்ணியம்” என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார். இக்காலப் பெண் படைப்பாளர்கள் பற்றியும் அவர்களது சிறப்புப் பற்றியும் பேசப்படவில்லை என்றும் பெண்ணியம் பற்றி பாரதி முதல் சோ. தருமரின் பேச்சி வரை இருக்கிறது என்று தனது ஆய்வுக் கட்டுரையை முடித்தார். இக்கட்டுரைகளுக்குப் பின்னர், முனைவர். காசிமாரியப்பன் அவர்களால் “திராவிட இயக்கச் சிறுகதைகளில் பெண்ணியம் என்னும் தலைப்பில் கட்டுரை வாசிக்கப்பட்டது. கட்டுரையின் சாராம்சமாக திராவிட எழுத்தாளர்கள், திராவிட அழகியலை முன் வைத்து ஏற்றுக் கொண்டு எழுதவில்லை, மாறாக பிராமணிய அழகியலை முன் வைத்தே படைப்புகளைப் படைத்தார்கள். நுகர்வுக் கலாசாரம் திராவிடப் படைப்பாளர்களில் காணப்படுகிறது எனும் கருத்தையும் முன் வைத்து இக்கட்டுரை அமைந்தது.
முனைவர். வாசுகிஜெயரத்தினம், அன்னைதெரசா மகளிர் பல்கலைக் கழகம் அவர்களது தலைமையில் இரண்டாம் அமர்வு நடத்தப்பட்டது. “தலித்தியமும் பெண்ணியமும்” எனும் மையப் பொருளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. முனைவர் கே.ஏ. குணசேகரன் அவர்களால் “தலித்தியச் சார்பு ஊடகச் சித்திரிப்புகளில் பெண்ணியம் என்ற தலைப்பில் முதல் கட்டுரை வாசிக்கப்பட்டது. நாடகம், திரைப்படம் மற்றும் குறும்படங்கள் போன்ற ஊடகங்களில் தலித் பெண்களின் பதிவுகள் காரண, காரிய முறைகள் முன் வைத்துப் பேசப்பட்டன. தலித் பெண்ணியப் பதிவுகள் நாடகத்தில் அதிகமாகவும், திரைப்படங்களில் மிகவும் குறைவாகவேக் காணப்படுகின்றன. மேல் சாதி வர்க்கத்திற்குத் தியாகம் செய்யும் பாத்திரப் படைப்புகளாகவே, தலித் மற்றும் தலித் பெண்கள் ஊடகத்தில் சித்திரிக்கப்படுகின்றனர் என்றார். முனைவர் சி. வாசுகி, அவர்களால் “தலித் சிறுகதைகளில் பெண்ணியம்” எனும் தலைப்பில் இரண்டாவது கட்டுரை வாசிக்கப்பட்டது. தலித் பெண்கள் சிறுகதைகளில் சித்திரிக்கப் படும் பாத்திரப் படைப்புகளின் நிலையைப் பேசுவதாகக் கட்டுரை அமைந்திருந்தது. திரு. சு. வேணுகோபால் அமெரிக்கன் கல்லூரி அவர்கள் “தலித் நாவல்களில் பெண்ணியம்” என்ற தலைப்பில் மூன்றாவது கட்டுரையை வாசித்தார். ஆனந்தாயி, கோவேறுக் கழுதைகள் ஆகிய இரு நாவல்களை மையமிட்டு பெண்ணியப் பதிவுகள் அமைந்திருந்தன. இவ்வாய்வுக் கட்டுரைகளோடு முதல் நாள் கருத்தரங்க அமர்வு இனிதே நிறைவுற்றது.
இரண்டாம் நாள் கருத்தரங்கத்தின் முதல் அமர்வு பேரா. பா. ஆனந்தகுமார், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. “மார்க்சியமும் பெண்ணியமும்” எனும் மையப் பொருளில் கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. மார்க்சியத் தத்துவமும் பெண்ணியமும்” என்னும் தலைப்பில் முனைவர் பா. ஆனந்தகுமார் அவர்கள் ஆய்வுக் கட்டுரை வாசித்தளித்தார்கள். பெண்ணியம் பற்றிய ஆரம்ப கருத்துத் தோற்றம் அதன் வளர்நிலை, பேசப் பட்டு, மார்க்சியம் பெண்ணியத்தைப் பார்க்கும் கண்ணோட்டம், அவற்றின் ஒட்டுமொத்தமான பார்வைகளைப் பேசுவதாகக் கட்டுரை அமைந்திருந்தது. மேலும் மார்க்சியம் “பெண் விடுதலை என்பவை ஒட்டுமொத்தமாகவேப் பார்க்கிறது” என்றார். அடுத்த கட்டுரை “மார்க்சியக் கவிதைகளில் பெண்ணியம்” எனும் தலைப்பில் முனைவர் சு. துரை அவர்களால் வாசிக்கப்பட்டது. மார்க்சியத்தை முன் வைத்தே இக்கவிதைகள் ஆக்கம் பெற்றுள்ளன. “பெண் தொன்மப் பாத்திரங்கள் மறுவிசாரணைக்குட்பட்டு, மார்க்சீய நோக்கோடு பெண் பிரச்சினைகள் கவிதைகளில் படைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் புறநிலை யதார்த்தக் கவிதைகள் மட்டுமே இடம் பெறுகின்றன.
அகநிலை யதார்த்தக் கவிதைகள் படைக்கப்படவில்லை. இக்கட்டுரைகளைத் தொடர்ந்து, முனைவர் க. நாகநந்தினி, அவர்கள் மார்க்சியச் சிறுகதைகளில் பெண்ணியம் என்ற தலைப்பில் பெண் என்பவள் உருவாக்கப்படுகிறாள் அவள் பிறப்பதில்லை என்றும், மார்க்சியச் சார்புடைய சிறுகதைகள் மனித நேயப் பார்வை படைக்கப்பட்டுள்ளதே தவிர பெண்ணிய விடுதலைக்கான பார்வையில் படைக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இவர்களைத் தொடர்ந்து, முனைவர். நா. கருணாமூர்த்தி, தியாகராசர் கல்லூரி அவர்கள், “மார்க்சிய நாவல்களில் பெண்ணியம்” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கப்பட்டு மார்க்சியச் சிந்தனைகளோடு படைக்கப்பட்ட நாவல்களை எடுத்துக்கொண்டு அவற்றில் உள்ள குறைபாடு களையும் விளக்கி விழிப்புணர்வு மற்றும் தீர்வுகளை முன் வைத்து அவை படைக்கப்பட்ட தன்மைகளைக் கூறுவதாக கட்டுரை அமைந்தது. பின்பு ஒளி ஒலிக் காட்சியும், உரையும் நடைபெற்றது. முனைவர். க. கோவிந்தன் அவர்களால் நாடகம், திரைப்படங்கள் போன்றவற்றில் பெண்ணியம் பற்றிய கருத்துக்கள் விமர்சிக்கப்பட்டன.
உணவு இடைவேளைக்குப் பின்னர், முனைவர். ச. ஜெயப்பிரகாசம் அவர்கள் தலைமையில் செயல்பாட்டு அரங்கமாக இவ்வாய்வரங்கம் அமைந்திருக்கிறது என்ற தலைமையுரையோடு இரண்டாம் அமர்வு தொடங்கியது. முனைவர். நா. காந்திமதி அவர்கள் காந்தியச் சிறுகதைகளில் பெண்ணியம் என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தார். காந்தியச் சிந்தனைகளை முன் வைப்பதிலேயே கவனம் செலுத்தப் பட்டுள்ளது. காந்தியச் சிந்தனைகளோடு பெண்ணிய அணுகுமுறை அமைந்துள்ளது என்றார். அவரைத் தொடர்ந்து திரு. இரா. விச்சலன் அவர்கள் “காந்திய நாவல்களில் பெண்ணியம்” எனும் தலைப்பில் கட்டுரை வாசித்தார். காந்தியப் பெண்ணியம் என்பது இதுவரை இலக்கணப்படுத்தப்படவில்லை என்றும், காந்தியப் பெண்ணியம் என்பது ஒரு சமயம் சார்ந்த சிந்தனையோடு தொடர்புடையது என்பதையும் இவரது ஆய்வுக்கட்டுரை வெளிப்படுத்தியது. திரு. அ. அழகுச் செல்வன் அவர்களால் “காந்தியச் சார்பு ஊடகச் சித்திரிப்புகளில் பெண்ணியம்” என்ற தலைப்பில் கட்டுரை வாசிக்கப்பட்டது. காந்தியச் சார்பு ஊடகங்களில், காந்தியம் பெண்மை கருத்திற்கு எதிராகவே உள்ளது என்றார்.
நிறைவுரையாக பேராசிரியர் இராமசுந்தரம் அவர்கள் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற உலக மகளிர் தினத்திற்கான முன் சிந்தனையாகவே இக்கருத்தரங்கம் அமைந்துள்ளது எனக் கூறி நிறைவு செய்தார். தேசியக் கீதத்தோடு இவ்வாய்வரங்கம் இனிதே நிறைவுற்றது.
தொகுப்பு : ஆ. பாண்டி, காந்திகிராமம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|