கட்டுரை
ராவ்பகதூர் N. சிவராஜ் (1892-1964)
நமச்சிவாயம் என்பவருக்கும் வாசுதேவி அம்மையாருக்கும் சிவராஜ் மகனாகப் பிறந்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் B.A. பட்டம் பெற்று, I.P.S தேர்வு எழுதி வெற்றி பெற்றார். எனினும் இவருக்கு அப்பணி கிட்டவில்லை. பிறகு சட்டம் படித்தார். சட்டக் கல்லூரியில் மூன்று ஆண்டு பேராசிரியராகவும் பணியாற்றினார். சிவில் கிரிமினல் வழக்குகளில் புகழ்பெற்றார். சட்டக் கல்லூரியில் சக மாணவர்கள் K.M. கரியப்பா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி, வி.கே. கிருஷ்ணமேனன், ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆகியோர் ஆவர்.
இவருக்குத் துணை நீதிபதி பதவி வந்தது. அதை ஏற்க மறுத்தார். ‘எனது சமூக மக்களுக்கும் பிற ஏழை எளியவர்களுக்கும் எதுவும் நன்மை செய்ய இயலாது போய்விடும். நம்மினத்தில் பதவியில் உள்ளவர்கள் எல்லாம் தன்னல சுகம் தேடி வாழ்வதைப் போலவே நானும் ஆகிவிடுவேன்’ என்று நீதிபதி பதவியைவிட நான் பிறந்த சமுதாயத்திற்கு என் கடன் பணியாற்றுவதை நான் பெரியதும் விரும்புகிறேன் என்றும் கூறினார். காங்கிரஸ் இயக்கம் நடத்திய B.C. மில் தொழிலாளர் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீதிக்கட்சிக்கு ஆதரவாக இருந்ததால், அவர் வாழும் சேரி, குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்தினர். மில் வேலைக்குச் சென்ற தொழிலாளர்களையும் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கினர். இந்த நேரத்தில் சிவராஜ் அவர்கள், இலவசமாக அந்த வழக்கில் வாதாடி, நிரூபித்து வெற்றிப் பெற்றார். இதற்குக் காரணமானவர்கள் காங்கிரஸ் தலைவர்கள் என்றும், அன்றைய ஆளுநர் வெலிங்கடன் பிரபு மற்றும் வைஸ்ராய் ரெட்டிங் பிரபுவைச் சந்தித்துக் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டினார். அதன் விளைவாக 1922ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டனர்.
ஜஸ்டிஸ் கட்சி தீர்மானப்படி வெள்ளையர் அரசு அளித்திருந்த ராவ்சாகிப், ராவ் பகதூர் என்ற பட்டத்தைத் துறந்தார். “நாம் யாருக்கும் எவ்வகையிலும் தாழ்ந்த சாதியினர்கள் அல்ல! பிறரைப் போல ஆண், பெண் இரு சாதியாகத்தான் மறந்திருக்கிறோம். திருவள்ளுவர், ஒளவையார், காரைக்கால் அம்மையார், இவர்களெல்லாம் நம் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவை தெரியாம நம்ம ஜனங்க மறந்துட்டு இருக்காங்க. சாதிக்காரப் பார்ப்பானுங்க, சாதி வெறி இந்துங்க ரெண்டு பேரும் சதி செய்து சாதியை வச்சிபுட்டானுங்க. இந்தச் சாதி ஒழிந்தால் தான் தீண்டாமை ஒழியும். இதுக்கு நம்ம சமூக இளைஞனுக படிக்கணும் எல்லாரும் ஒரு கட்டுப்பாடாக இருந்து ளுநடக சுநளயீநஉவ என்னும் தன்மானப் புரட்சி செய்யவேண்டும். நம்ம பசங்க எல்லாம் அம்பேத்கர் மாதிரி ‘எய்ம் டிடர்மினஷன்’ வைத்து படிக்கணும்” என்பார்.
அக்கால அரசியலில் காங்கிரஸ், நீதிக்கட்சி இரண்டும் தென்னகத்தில் செல்வாக்குப் பெற்றவை. இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதரவு யாருக்கென்று தீவிர ஆலோசனை செய்து, நீதிக்கட்சிக்கு ஆதரவளித்தார்.
ஆதிதிராவிட மக்கள் சட்டை அணியக்கூடாது. காலில் செருப்புப் போட்டு நடக்கக்கூடாது என்று தமிழ்நாட்டின் பல பாகங்களில் இருந்து வரும் கொடுமையைத் தடுத்திடத் தனி அதிகாரி நியமிக்கவேண்டும் என்று வற்புறுத்தி அமல் செய்தார். ஆதித்திராவிட மகாஜன மாநாடுகளில் இரட்டை மலை சீனிவாசனுடன் இணைந்து செயல்பட்டார். சென்னை மாநகராட்சியின் தாழ்த்தப்பட்டோர் சமூக முதல் மேயராக இருந்து, சென்னை நகர முன்னேற்றம், ஆதி திராவிட குடிசைவாசிகள் நலன், பள்ளிகள் என்று அமைத்தார். 1930, 1931, 1932 ஆகிய ஆண்டுகளில் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, இலண்டன் வட்டமேஜை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசனார் சேர்ந்து பணியாற்றினார். 1932 ஜனவரி 4-ல் வெலிங்கடன் பிரபு காந்தியாரைக் கைது செய்து ஏரவாடா சிறையில் அடைத்தனர், காந்தியார் தாழ்த்தப்பட்ட மக்களின் தனித்தொகுதி உரிமையை எதிர்த்துச் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அப்போது ஆந்திரகேசரி பிரகாசம் மற்றும் பல காங்கிரசுகாரர்களும் சேர்ந்து சிவராஜ் மூலம் அம்பேத்கருக்குத் தந்தி அனுப்பினர். பிறகுதான் M.R. ஜெயகர், C. ராஜகோபாலாச்சாரி, மதன்மோகன் மாளவியா, சரோஜினிநாயுடு ஆகியோர் அம்பேத்கரை வற்புறுத்தினர். அந்த ஒப்பந்தத்தில் அம்பேத்கருடன் 31 பேர் கையெழுத்திட்டனர். அதில் இரட்டைமலை சீனிவாசன், சிவராஜ், எம்.சி. ராஜா ஆகியோர் ஆவார்.
அம்பேத்கர் அமைத்த A.I.S.C.F. (அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் சம்மேளனம்) 1942 முதல் தலைவராக இருந்தார். தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் மேல்படிப்பு படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித்தரும் குழுவின் தலைவராக இருந்து, நூற்றுக்கு மேற்பட்டவரை அனுப்பினார். இந்தக் குழுவை ராஜகோபாலாச்சாரி கவர்னர் ஜெனரல் ஆனதும் கலைத்துவிட்டார். A.I.S.C.F. -யை அம்பேத்கர் கலைத்துவிட்டுக் குடியரசு கட்சியை அமைத்தார். அதற்கு 1956 முதல் தலைவராக சிவராஜ் நாக்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாகும் வரை குடியரசுக் கட்சியின் தலைவராகவே இருந்தார்.
ஆலயப்பிரவேசம், ஜாதி ஒழிப்பு வெறும் வேடிக்கை ஏமாற்றுப் பேச்சாக அமையுமே தவிர, பிறரின் பார்வைக்கும், கவனத்துக்கும் மெச்சும் வகையில் ஏட்டுத் திட்டமாக இருக்குமே தவிர, தீண்டாமை என்னும் சாதிநோய் மாறாது, மறையாது. அதை ஒழித்தாலன்றி மனிதனை மனிதன் மனிதனாய் மதிக்காத சாதி மனப்பான்மை, பாகுபாடு போகாது. நாமெல்லாம் தமிழர், நாமெல்லாம் இந்தியர் என்ற தேசிய மனிதநேயம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஊடுருவி அமையவேண்டும்.
அகில இந்தியாவிலும் உள்ள செட்யூல்டு வகுப்பு மக்கள், இந்து மதத்தில் இருந்து, இந்துக்கள் நாம் என்று ஒப்புக்கொண்டு வாழ்கிற வரையில் நாமெல்லாம் தீண்டப்படாதவர்களாக, தாழ்ந்த சாதியாகத்தான் இருக்கமுடியும். இந்து மதத்தை புறக்கணித்துவிட்டு, மதம் மாறினால் நாம் தனி இனமாக உரிமைக்குரல் எழுப்பிடமுடியும். போராடமுடியும்.
சைமன் கமிஷன், மாண்ட்போர்ட் குழு, சௌத்பரோ குழு, ஆகியவற்றுக்கு அம்பேத்கரின் ஆணைப்படி தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கையை ஆதிதிராவிட மகாஜனசபா தலைவர்களான எம்.சி. ராஜா, ஏ.டி. பன்னீர்செல்வம், சக்ஜ்ஜாநந்தம், முனுசாமி பிள்ளை, வி.ஜி. சந்தோஷம் பிள்ளை, ஆர். வீரய்யன், தர்மலிங்கம்பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன், துரைசாமி பிள்ளை இவர்களோடு சிவராஜ்ம் மனு கொடுத்தனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|