Font problem? Add us to your favorites! Press (Ctrl-D) on your keyboard.
Keetru Logo "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்று பற்றி விவாதிக்க...
கருத்துக்களை பரிமாறிக் கொள்ள...
கீற்று வலைக் குழுமத்தில் சேரவும்.
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
மார்ச் - ஏப்ரல் 2006

கட்டுரை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

ஆர். பார்த்தசாரதி

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிறந்து 18-03-1848 அன்று. அதனைக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிறப்புச் சான்றிதழ் என்று கூறுவர். பல்வேறு நூல்களையும் கட்டுரைகளையும் மார்க்சும், ஏங்கெல்சும் 1848ஆம் ஆண்டுக்கு முன் வரைந்திருந்தாலும் கம்யூனிசம் ஒரு செயல் திட்டமாகவும் அதன் இலக்கணம் வரையறுக்கப்பட்டதாகவும், ஒரு பேரீயகத்தினை உலகம் தழுவ உந்திச் செலுத்துவதான ஓர் இலட்சிய ஆவண மாகவும் திகழ்வது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே. மார்க்ஸ் மெய்யியல், பொருளாதாரம், சமூகம் பற்றிய கருத்துக்களை இதற்கு முன்னால் பல்வேறு கட்டுரைகளில் கூறியுள்ளார். பொருளாதார வரலாற்று நூல் என்று அறிஞர் உலகால் பாராட்டப்பட்ட “பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கம் வாழ்க்கை நிலைமைகளின் வரலாறு” என்னும் நூலில் முதலாளித்துவ தொழிற்கூட முறை (Factory Ststem) உருவாக்கிய பல்வேறு கொடுமைகளை ஏங்கெல்ஸ் எடுத்துக்காட்டியுள்ளார். மார்க்சும், ஏங்கெல்சும் இணைந்து படைத்த “ஜெர்மன் சித்தாந்தம்” என்னும் நூலில் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்தை தந்துள்ளனர். எனினும் எல்லாவற்றையும் சாரமாகப் பிழிந்து உலகத் தொழிலாளி வர்க்கத்தின் கடமையை, பொறுப்பைத் தெளிவாக அப்புரட்சி வர்க்கத்திற்கு வழிகாட்டியாக, செயல்திட்டமாக ஊக்குவிக்கும் விசையாக அமைந்தது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையே.

சோவியத் நாடும், கிழக்கு ஐரோப்பிய ஜனநாயக நாடுகளும் சிதைந்து போன பின்னரும் உலக அளவில் கம்யூனிச சித்தாந்தம் பின்னடைவு கண்டபோதும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 150-வது நிறைவு நாளைக் கொண்டாடப் பாரிசில் கூடிய மாநாடு இவ்அறிக்கை தோல்வி காணாத வாழும் இலக்கியம், தகுதிப் பாட்டில் (Relevance) சிறிதளவும் குன்றாதது, குறையாதது என முடிவு செய்தது எனில் அவ் அறிக்கையின் சிறப்பு விளங்கும்.

இவ்அறிக்கை வெளிவருவதற்கு முன் மார்க்சும், ஏங்கெல்சும், பல்வேறு திரிபுவாதக் கருத்துக்களை எதிர்கண்டனர். ஆனால் அவையே சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகும் பல்வேறு நிலைமைகளில், உருவங்களில் வகைகளில் மாறி மாறி வந்து மக்களை மயக்கி வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

ரஜனிபாமிதத் இதுவரை இருந்து வந்துள்ள எல்லா மெய்யியல் கோட்பாடுகளையும் பிய்த்திதெறிந்து சின்னா பின்னமாக்கிச் செயலிழக்கச் செய்த பெருமைமிக்கது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்று குறிப்பிடுகிறார். மார்க்சின் உயிர்த் தோழரான ஏங்கெல்ஸ், சைபீரியா முதல் கலிபோர்னியா வரை வாழும் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தின் ஒரே சர்வதேச இலக்கியம் என்று பாராட்டினார். லெனின் பல நூல்களின் பல தொகுதிகளுக்கு ஒப்பானது இச்சின்னஞ்சிறு வழிகாட்டி நூல் என்று சிறப்பித்தார். இக்கூற்றுகளில் இருந்து அறிக்கையின் சிறப்புப் புலனாகும்.

ஒவ்வொரு தேச வரலாறும் உலக வரலாறும் முடி மன்னர்களின் எழுச்சி, நிகழ்த்திய போர்கள் வென்ற நாடுகள் மடிந்த உயிர்கள் நேரிட்ட இழப்புகள் பற்றிச் சொல்வன என்னும் கருத்துக்கு முதன்முதலாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வரலாறு என்பது மக்களின் நல்வாழ்வுக்காக சுரண்டலை எதிர்த்து நடந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாறு என்று அறிவுறுத்தித் தொடங்குகிறது அறிக்கை. அதாவது சமூகம் பிறந்தது தொடங்கி இன்று வரையிலான வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறே என்ற முழக்கத்தோடு அறிக்கை தொடங்குகிறது.

முதலாளித்துவத்திற்கு முன் சென்ற தொல் பொதுவுடைமை, அடிமை, நிலமானிய சமூகங்களின் வரலாறுகளை ஓரளவு மேலெழுந்த வாரியாக மார்க்சும், ஏங்கெல்சும், கோடிட்டுக் காட்டிய போதிலும் உலகமெங்கும் வலை வீசிப் பின்னிப்பிணைந்து சந்தைகள் தேடி அலையும் முதலாளித்துவம் மக்களின் எதிர்காலப் பெரும் பிரச்சினை என்பதைக் கூர்ந்து பார்த்துத் தெளிந்து பூர்ஷ்வாக்களுக் கெதிரான தொழிலாளர்களின் எழுச்சி பற்றி முக்கிய கவனம் செலுத்தினர்.

முதலாளித்துவம், பின் ஏகாதிபத்தியமாக வளர்ந்து உலகம் எங்கினும் வலைவீசிப் பல கண்டங்களிலும் அங்குள்ள மலை முகடுகளிலும், குகைகளிலும், நாடு நகரங்களிலும் வாழ்ந்திருந்த மக்களைப் பிணைந்திழுத்து எல்லாவற்றையும் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இதனை முன் கூட்டியே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எதிர்ப்பார்த்துள்ளது என்பது முதலாளித்துவம் பல நாடுகளில் தங்கிக் கூடுகட்டும் சந்தையைப் பெருக்கும் மக்களை ஈர்க்கும் என்று அந்த அறிக்கை கூறுவதிலிருந்து புலனாகிறது.

புதிதாக எழுச்சி பெற்ற பூர்ஷ்வா வர்க்கம், அதற்கு முன் இருந்த சுரண்டல் வர்க்கங்களைவிட நாகரிகமானது, என்று நற்சான்றிதழுடன் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பூர்ஷ்வா சமுதாயம் ஜகஜாலப் புரட்டுகளைச் செய்யும் மந்திரவாதியைப் போன்றது. அது தோற்றுவித்த தீய சக்திகளை அதனாலேயே கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறது. அது மட்டுமல்லாமல் பூர்ஷ்வா வர்க்கம் தன்னை அழிக்கக்கூடிய தொழிலாளி வர்க்கத்தையும் உடன் பிறப்பாக உருவாக்கித் தன் செயல்களாலேயே அதனை வளர்த்து வலிமை பெறச் செய்துவிடுகின்றது என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பொதுவாக பூர்ஷ்வா வர்க்கம் தன்னாதிக்கத்தின் கீழ் வந்த உலக மக்களுக்கு நாகரிகத்தை கற்றுத் தந்தது என்று உரிமை கொண்டாடுகிறது. ஆனால் கொலை, கொள்ளை, நாடு பிடித்தல், மக்களைக் கொன்று குவித்தல், இயற்கை வளங்களை நாசப்படுத்தல், சுட்டெறித்தல், அழித்தல் என்னும் பல்வேறு கொடிய தீங்கான முறைகளைக் கடைபிடித்தே முதலாளித்துவம் தன் நாகரிகத்தினை உலகம் முழுவதும் பரப்பிற்று. தன் உற்பத்திப் பொருள்களுக்கு நிரந்தரமான சந்தைகள் வேண்டும் என்பதனை நிலைநாட்ட இத்தகைய வழிகளைக் கடைப்பிடித்தது. இந்த நாசங்களின் ஊடே தான் பின்தங்கி இருந்த நாடுகள் சற்று முன்னேற்றம் கண்டன என்பது உண்மை. இதுவே முதலாளித்துவத்தின் “வரலாற்றுப் பாத்திரம்” ஆகும்.

தங்கு தடையற்று தயவு தாட்சண்யமில்லாது தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டியது மட்டுமில்லாமல் பணமே பெரிது என்பதைத் தாரக மந்திரமாக்கி அதைச் சுற்றியே, மனித உறவுகளும், சமூக உறவுகளும் அமைதல் வேண்டும். மனிதனுடைய வாழ்வும், தாழ்வும், சிறப்பும், பெருமையும், பணத்தைச் சார்ந்ததே என்னும் கருத்தை, பணநாயகத்தை பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கிவிட்டது. குடும்பப் பாசம், அன்பு, பிணைப்பு, உற்றார், உறவினர், நட்பு, ஒப்புரவு என்னும் உறவுகள் புறம் தள்ளப்பட்டன. இரண்டாம் பட்சமாகச் சுரண்டலை நாகரிகத்தின் சின்னமாக மாற்றி விட்டது. ஒருநாடு மற்றொரு நாட்டைச் சார்ந்து வாழ வேண்டும். பின்தங்கிய நாடு முன்னேறிய நாட்டையும், வளராத நாடு வளர்ந்தோங்கிய நாட்டையும் சார்ந்து இருப்பதோடு கையேந்தும் நிலைமையையும் பூர்ஷ்வா வர்க்கம் உருவாக்கிவிட்டது என்றும் அறிக்கை தெளிவு படுத்துகிறது.

பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சமூகத்திற்காக, சமூக பொருளாதார தேவையை நிறைவேற்ற ஓரிடத்தில் சேர்ந்து உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அதன் பயனை ஒரு சிலரே அனுபவிக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டி, தொழிலாளி தன் உழைப்புச் சக்தியை விற்றாலொழிய வாழ்வில்லை. அவ்விற்பனையும் தன் குடும்பத்தின் வயிற்றுப் பாட்டுக்கே; அதாவது வயிற்றைக் கழுவுவதற்கான அளவை மட்டுமே கூலியாகப் பெறுகிறது. தொழிலாளிவர்க்கம் திரண்டு போராடினாலொழிய அதன் நிலைமை முன்னேறாது என்பதனையும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எடுத்துக் காட்டுகிறது. எல்லா வழிகளிலும் பூர்ஷ்வாவை வழிகண்டு தன்னை வளர்த்துக்கொண்டு வர்க்க உணர்வையும், அறிவையும் வளர்த்துக்கொண்டு புரட்சி வழியில் பூர்ஷ்வா வர்க்கத்தை தூக்கியெறியவேண்டும் ஆளும் வர்க்கமாக உயர வேண்டும் என்பது தொழிலாளிவர்க்கத்தின் இறுதி லட்சியமாக இருக்கவேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.

நாடு, தேசம் அனைத்தையும் கடந்து உலக அளவில் உழைக்கும் வர்க்கம் ஒன்றுபடவேண்டும் என்பதனை வலியுறுத்திக் காட்டும்போது, வட்டார, தேசிய, உலக இலக்கியங்கள், வாய்மொழி இலக்கியங்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதனையும் அறிக்கை எடுத்துக்காட்டத் தவறவில்லை. கூலி அடிமைத்தனத்திலிருந்து தொழிலாளி தன்னை விடுவித்துக்கொண்டு சமுதாயத்தையும் விடுவிக்க அவனால்தான் முடியும், அதுவும் வர்க்கப் போராட்டத்தால் தான் முடியும் என்று கூறும்போதே அவன் கையாளவேண்டிய நெறி முறைகள் கடந்து செல்லவேண்டிய கொடிய வழிகள் எதிர் காணவேண்டிய கருத்துக்கள் சக்திகள்-திரிபுவாதிகள் மயக்க வாதிகள், குழப்பவாதிகள் ஆகியோரை இனம் காண வேண்டும் என்பதனையும் பல்வேறு பகுதிகளில் அறிக்கை கூறுகின்றது.

சமுதாயம் தோன்றிய காலம் முதல் பல்வேறு சிந்தனையாளர்கள் மனிதநேயக் கருத்துக்களை அடிமைச் சமுதாயம், நிலமானியச் சமுதாயம் என்னும் சுரண்டல் சமுதாயங்களில் வாழ்ந்த சான்றோர் பலர் வழங்கிச் சென்றுள்ளனர். ஆனால், முற்றிலும் மாறான பூர்ஷ்வா சமுதாயத்தில் மதிப்புகள் மாறிய நிலையில் இச்சான்றோர் மொழிகள் பொன்னே போல் போற்றப்படவேண்டும். ஆனால் அவையே சுரண்டலற்ற சமுதாயம் சமதர்ம சோஷலிசம் அமைப்பதில்லை. தொழிலாளிவர்க்க வர்க்க உணர்வும் ஒற்றுமையும் இடைவிடாத போராட்டங்களும் தான் வழிகாட்டிகளாகும் என அறிக்கை வலியுறுத்துகிறது. மேலே எடுத்துக்காட்டியவையெல்லாம் அறிக்கையின் முழுப்பகுதி களல்ல; அவ்அறிக்கை, வரும் காலத்திலும் போராடும் மக்களுக்கு வழிகாட்டியாக இலங்கத்தக்க தகுதி வாய்ந்தது என்பதனை எடுத்துக்காட்டவே இங்கே ஒருசில பகுதிகள் மட்டுமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

இன்று உலகை அச்சுறுத்தி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் 150 ஆண்டுகளுக்கு முன் மார்க்சும், ஏங்கெல்சும் விளக்கமாக எடுத்துச்சொன்ன பூர்ஷ்வா வர்க்கத்தைவிட வேறுபட்டதன்று வேண்டுமானால் மோசமானது என்று கூறலாம்.

முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் இருந்தே காசே கடவுளாகக் கருதப்பட்டு வந்தது. பின்தங்கிய நாடுகள் எல்லாம் மேலை நாடுகளையும் விவசாய நாடுகள் எல்லாம் முதலாளித்துவ நாடுகளையும் கீழ்திசை நாடுகள் மேல் திசை நாடுகளையும் சார்ந்து, அடிபணிந்து வாழும் நிலையேற்பட்டு விட்டது. எனவேதான் முதலாளித்துவ வளர்ச்சி வீச்சில் வையகமே அடிபணிய நேரிட்டது. மண்ணும், கடலும், விண்ணும், சுற்றுப்புறச்சூழலும், செயற்கையும் இயற்கையும், முதலாளித்துவத்திற்கு ஏவல் செய்ய வேண்டிய நிலை உருவாகி விட்டது. ஆனால் இந்த நிலையை மாற்றியமைக்க உழைக்கும் வர்க்கம், ஆளும் வர்க்கமாக உயரவேண்டும். தொழிலாளிவர்க்க அரசு அமைந்தாலொழிய சுரண்டல் ஒழியாது, நிலைமை மாறாது என்று அறிக்கை கூறுகிறது. புதிய பொதுவுடைமை சமுதாயம் அடைய பழைய சமுதாயம், புதிய சமுதாயமாக அமையவேண்டும். புதிய சமுதாயம் அமைவதற்கு புதிய பொருளாதார, பௌதிக, அடிப்படைகளைப் போராடும் தொழிலாளிவர்க்கம் இடைவிடாது பொறுமையாக போராடி அமைக்கவேண்டும் என்றும் அறிக்கை வலியுறுத்துகிறது.

உற்பத்திச் சக்திகளும், உற்பத்தி உறவுகளும் மாறிய பொதுவுடைமைச் சமுதாயம் தொழிலாளியின் பொருளாதார வாழ்வை வளப்படுத்துவதோடு அவனைக் கற்றறிந்தவனாக, பண்பாளனாக, நல்ல மனிதனாக மாற்றும், உயர்த்தும். அன்றுதான் சரிநிகர் சமத்துவம் நிலவும். ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சி சமுதாய முழுமையும், மக்கள் எல்லாரும் நிறைநிலை வளர்ச்சி பெருவதின் அடையாளம் என்று அறிக்கைச் சுட்டிக்காட்டுகிறது.

முரண்பாடு, மாற்றம், வளர்ச்சி என்னும் வரலாற்று விதிகளை முதன்மைபடுத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வரலாற்றியல் பொருள் முதல்வாதிகளான மார்க்சும், ஏங்கெல்சும் ஒரே மாதிரியான செயல்திட்டம் எல்லா நாடுகளுக்கும் எல்லாக் காலத்திலும் பொருந்தும் என்று கூறியது இல்லை. ஒவ்வொரு நாடும் அதனதன் வரலாறு, வளர்ச்சி நிலை பண்பாடு, இனம், மொழி, பொருளாதார நிலைமைகள் சமூக உறவுகள். இவற்றை ஒட்டி கம்யூனிஸ்ட்டுகள் ஏற்ற திட்டங்களை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்று கூறி அறிக்கை கூறி முடிகிறது.

*****

மேற்கூறியவை ஒருசில முக்கியமானப் பகுதிகளே, அறிக்கையின் ஒவ்வொரு எழுத்தும், சொல்லும், கருத்தும் பொருள் பொதிந்தவை. எனவேதான் உலக மக்கள் எல்லாரும், உவந்து ஏற்றுக்கொள்ளும் சிறப்புடையது எனக் கருதப்படுகிறது.

உலகில் எங்கணும் இல்லாத சாதிமத பேதங்களை உடையது இந்தியநாடு. மனித நேயத்துக்கு - அன்புக்கு முற்றிலும் அப்பாற்பட்டதான காணாமை, அண்டாமை, தீண்டாமை என்னும் தீமைகளை பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மதித்துப் போற்றிப் பாராட்டிவருவது இந்திய நாடு. அதுபோல மாதர் தம்மை இழிவுசெய்யும் மடமையை வளர்த்த நாடு இந்திய நாடு. சமுதாயத்தின் கடையர்களாக, ஊமைகளாக, செயலற்றவர்களாக வாழ்பவர் இவ்விரு திறத்தினரே. அவர்களைக் கடைத்தேற்ற, ஈடேற்ற வல்லது மார்க்கியம் மட்டுமே. வரலாறு இதனை மெய்ப்பித்துக் காட்டும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...



படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anaruna.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP