தலையங்கம்
உங்கள் நூலகத்தின் எட்டாம் இதழ் தலித்தியம் - பெண்ணியம் இதழாக வெளிவருகிறது.
இந்திய சமுதாயம் தோன்றிய காலத்திலிருந்தே, குறிப்பாக வர்க்கங்கள் அடிப்படையில் சமூக உறவுகள் அமையத் தொடங்கிய தொல் பழங்காலத்திலிருந்தே மக்களில் முக்கியப் பிரிவினராக படைப்பாளிகளாகக் கருதப்பெறும் உழைப்பாளர்கள், தாழ்த்தப்பட்டோரும் மனித சமுதாயம் நிலைபேறு உடையதாகச் செய்யும் பெண்ணினமும் மிகக் கேவலமாக புழு, பூச்சிகளிலும், இழிவாகக் கருதப்பெற்று, கணிக்கப்பெற்று நடக்கப் பெற்று வந்துள்ளனர். கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாக இப்பிரிவினரின் விழிப்புணர்ச்சி, எழுச்சி மதித்துப் பாராட்டப்பட்டவையாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.
உங்கள் நூலகம்
இரு திங்கள் இதழ்
கௌரவ ஆசிரியர்
முனைவர். அ.அ. மணவாளன்
ஆசிரியர்
ஆர். பார்த்தசாரதி
நிர்வாக ஆசிரியர்
ஆர். சாரதா
ஆலோசகர் குழு
ஏ.எஸ். மணி
ஆர். ராதாகிருஷ்ணமூர்த்தி
கல்பனாதாசன்
ஆசிரியர் குழு
கே.ஜி.சத்தியநாராயணன்
எஸ். சண்முகநாதன்
பா. பாஸ்கர்
சண்முகம் சரவணன்
சி.பி. ராணி
இதழ் வடிவமைப்பு
மாரிமுத்து
உங்கள் நூலகம்
நியூ செஞ்சுரி வாசகர் சங்கம்
41-B, சிட்கோ இண்ட்ஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர்,
சென்னை – 600 098.
தொலைபேசி: 044-26251968
Email: [email protected]
தனி இதழ்: ரூ.10
ஓராண்டு சந்தா: ரூ.100
வெளிநாட்டு சந்தா: 12 டாலர்
|
இவ்விரு சாராரின் எழுச்சிக்குத் தமிழகம் சீரிய பங்காற்றியுள்ளது. தாழ்த்தப்பட்டோர் இயக்கமெனில் முன்னோடிகளாகக் கருதப்பெறும் அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா, என். சிவராஜ் போன்றோரின் அரிய பணிகள் நினைவு கூரத்தக்கவை. குறிப்பாகப் பாலி, ஆங்கிலம் வடமொழி தமிழ் வல்லுநராக அயோத்திதாசப் பண்டிதர் தென்னகத்தில் பௌத்தத்தை பரப்பியவர் என்று கருதப்பெறுகிறார். இவர் பௌத்தத்தின் ‘தென்னிந்தியப் பிதாமகன்’ என்று கருதப்பெறும் பேராசிரியர் லட்சுமி நரசு, பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி முதல்வர் பிதாமகர் என்று பாராட்டப் பெறும் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் ஆகியோருடன் இணைந்து பணி செய்தவர்; பௌத்தம் பரப்பியவர்; சித்த வைத்தியர், குழந்தைப் பருவத்தில் முடக்குவாதம் என்னும் கொடிய நோய்வாய்ப்பட்டு மரணத்தின் வாயிலிலிருந்த திரு.வி. கலியாணசுந்தரனாருக்கு மருத்துவம் செய்து மீட்டெடுத்து, தமிழகத்துக்குத் தந்தவர் அயோத்திதாசப் பண்டிதர்.
சில வழிகளில் அம்பேத்கர் பௌத்தம் ஏற்பதற்கு முன்னோடியாக இருந்தவர், “ஒரு பைசாத் தமிழன்” “தமிழன்” இதழாசிரியர். இவருடைய மைத்துனர் இரட்டைமலை சீனிவாசன். ‘பறையன்’ என்ற இதழாசிரியர் இருவரும் தாழ்த்தப்பட்ட மக்களைத் தட்டியெழுப்பியவர் என்று பாராட்டப் பெறுபவர். இவர்களைப் பற்றிய கட்டுரைகளும், இவர்கள் தோற்றுவித்த இயக்கம் சார்ந்த தலைவர்களைப் பற்றிய கட்டுரைகளும் இவ்விதழை அணி செய்கின்றன. அண்ணல் அம்பேத்கரைப் பற்றிய தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் கட்டுரை சீரிய சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
‘தலித்’ என்பது மராத்தியச் சொல் அடக்கி ஒடுக்கப்பட்டோர் என்ற பொருள் உடையது. தலித் சிந்தனையாளர்கள் தலித் மக்களிடையேயும் பல்வேறு பிரிவுகளும், தீண்டாமையும் இருப்பது வேதனை தருவதாகும் என்னும் உண்மையை உணரத் தலைப்பட்டுள்ளனர். அவர்கள் இது பற்றிப் பல்வேறு கோணங்களிலிருந்து ஆழ்ந்து ஆய்ந்து, அவர்களுடைய ஒற்றுமைக்காக அரும் பணி செய்து வருவது பாராட்டுக்குரியது.
‘பெண்ணியம்’ என்பது சிறப்பான சொல். சமுதாயத்தின் சரிபாதிக்கு மேல் இருப்பவர்கள் பெண்கள், எல்லாப் பொறுப்பான பணிகளையும் செய்வதிலிருந்து, சமுதாயத்தின் அடிவேராகவும், பருமரமாகவும், நிழல்தரும் கிளைகளாகவும், மனித சமூகத்தின் படைப்பாளிகளாகவும் இலங்குபவர்கள் மாதர்களே இவர்கள் எல்லா வழிகளிலும் வழிபடத்தக்கவர்கள் ஆவார்கள்.
வேதங்களிலிருந்து பக்தி இலக்கியங்கள் வரை பெண்ணினத்தின் உரிய சிறப்பை ஏற்றதில்லை. புலவர் பெண்களைப் பாடினாலும், சிந்தனையாளர், சமூகப் பணியாளர் என மாதர் பலர் சிறந்தோங்கியுள்ளனர். எனினும் இவர்கள் எல்லாரும் விதிவிலக்குகளாகவே கருதப் பெறுபவர். பொது விதி, கருத்து பெண் ஓரடிமை என்பதே. பெண்ணடிமைத் தனத்தில் தலித் பெண்ணடிமை, மிகவும் கீழ்த்தரமாக, மோசமாக மதிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்களும், பெண்ணினத் தலைவர்களும், குறிப்பாக, தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்ட முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் உட்பட பலர் வரலாறு படைத்துள்ளனர்.
இந்த இதழ் வெளிவரும் போது மாமேதை கார்ல் மார்க்ஸ், அவர்களைப் பற்றிய சிந்தனை எழுவது இயல்பு. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனப் பிரெஞ்சுப் புரட்சியில் பூர்ஷ்வா வர்க்கத்துக்காக எழுப்பிய முப்பெரும் கோரிக்கைகளை, முழக்கங்களை, உழைக்கும் வர்க்கங்களுக்கு குறிப்பாகப் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளருக்கும் மனித சமுதாயத்தைப் படைக்கும் மாதருக்கும் தேவை என உணர்ந்து மார்க்சும், ஏங்கெல்சும், தம் இளம் வயதில் 1848 மார்ச் 18 அன்று உருவாக்கிய ஆவணம் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” ஆகும். ஏறத்தாழ 150 ஆண்டுக் காலமாக உலக மக்களை உழைக்கும் மக்களையும் மகளிரையும் சிந்தனையாளர்களையும், ஒரு சேரக் கவர்ந்து வருவது மார்க்சியம். சமூக வரலாற்றில் பெண் தலைமை பெற்றிருந்த காலம் மாறித் தந்தை வழிச் சமூதாயம் தொடங்கிய காலம் முதல் ஆணாதீக்கம் மேலோங்கி வருகிறது என்ற உண்மையை நிறுவியவர் மாமேதை ஏங்கெல்ஸ். எனவே மார்க்சியம் உழைக்கும் வர்க்கங்களையும் பெண்ணினத்தையும் ஒன்று படுத்தவல்லது, ஈடேற்றவல்லது. அதன் வெற்றியிலேயே அடிமைத்தனம் எதுவாயினும், கூலி அடிமைத்தனமும் பெண்ணடிமைத்தனமும் நீங்கும்.
இந்த இதழ் இத்தகைய நேரிய சிந்தனையைத் தூண்டுவதாக அமைய வேண்டும். அமையும் என்பது உங்கள் நூலகத்தின் அவா, நம்பிக்கை.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|