நூல் விமர்சனம்
“புராணக் கதைகளும் நிகழ்கால நோக்கும்”
கா. வாசுதேவன்
தமிழில் நாடக இலக்கியத்திற்கு ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு. கூற்று வடிவிலான சங்க அகப் பாடல்கள், சிலப்பதிகாரம், பல்லவர்கால நாடக முயற்சிகள் இவற்றில் நாடகக் கூறுகளின் நுட்பங்களை உணரலாம்.
அண்மைக் காலத் தமிழ் நாடகங்கள் படிப்பதற்கும், நடிப்பதற்கும், ஒரு சேர உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் பேராசிரியர் சொ. சேதுபதி அவர்கள் தாம் இயற்றிய ஐந்து குறுநாடகங்களை ஒன்றாகத் தொகுத்துள்ளார்.
இதில் உள்ள நாடகங்கள் அனைத்தும் மதுரை வானொலியில், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒலிபரப்பப்பட்டன எனும் குறிப்பு இதன் பதிப்புரையில் கூறப்பட்டுள்ளது. வானொலி நாடகங்களுக்கென சில வரையறைகள் உள்ளன. அவை அனைத்தையும் இதன் ஆசிரியர் தமது நாடகங்களில் மிகுந்த உள் உணர்வுடன் கடைபிடித்துள்ளார்.
கவிஞர் மீனாட்சி குறிப்பிடுவதைப் போன்று “இந்நாடகங்கள் ஐந்தும் உயர்வான இலட்சியங்களைக் கொண்டுள்ளன. நாடகக் கரு, காட்சி அமைப்புகள், வசனங்கள் என அனைத்திலும் ஆசிரியரது சமூக நோக்கு வெளிப்பட்டுள்ளது.
இந்நாடகத் தொகுப்பில் 1. மௌனத்தின் குரல் ஒன்று, 2. வைகையில் வெள்ளம் வரும், 3. நியேதான் இந்தப் பிரபஞ்சம், 4. அன்பின் மெய், 5. தெய்வம் நீ என்றுணர் எனும் ஐந்து நாடகங்கள் அமைந்துள்ளன. இவை ஐந்தும் புராணக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை.
‘மௌனத்தின் குரல் ஒன்று’ நாடகத்தில் ‘ஏகலைவன்’ கதை புதிய பாணியில் விவரிக்கப்பட்டுள்ளது. ‘கல்வி எல்லோருக்கும் பொது’ எனும் கருத்து இதில் உரத்து ஒலிக்கிறது.
‘வைகையில் வெள்ளம் வரும்’ - நாடகம் திருவிளையாடல் புராணத்தில் இடம் பெறும் ‘பிட்டுக்கு மண் சுமந்த’ கதையினை மையமிட்டது. போரும், பூசலுமற்ற ஓர் இலட்சிய சமுதாயத்தை ஆசிரியர் இதில் உருவாக்கியுள்ளார்.
‘நியேதான் இந்தப் பிரபஞ்சம்’ நாடகத்தில் இராமாயணத்தில் இடம்பெறும் ஜடாயுவின் தியாகமும், வீரமும் இணைந்த வாழ்வு விவரிக்கப்படுகிறது.
சிவபெருமான் மீது கண்ணப்ப நாயனார் கொண்டிருந்த மாறாத அன்பினை விளக்குவது அன்பின்மெய் எனும் நாடகம்.
இந்நூலின் இறுதி நாடகமான ‘தெய்வம் நீ என்றுணர்’ என்பதில் ஆசிரியர் சீதையின் அக்கினிப் பிரவேசத்தை, இராமனது மனசாட்சியின் துணையோடு அலசி ஆராய்ந்துள்ளார்.
மொத்தத்தில் ‘வைகையில் வெள்ளம் வரும்’ எனும் இந்நாடகத் தொகுப்பினைப் பல்கலைக் கழக தன்னாட்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களுக்குத் தாராளமாகப் பரிந்துரைக்கலாம்.
வைகையில் வெள்ளம் வரும்
(குறுநாடகங்கள்)
ஆசிரியர் : சேதுபதி, வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 14, விலை : ரூ. 45.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|