நூல் மதிப்புரை
திருக்குறளின் இன்னொரு பரிணாமம்
இ. சூசை
மாத்தளை சோமு எழுதிய திருக்குறள் அகலவுரை, அறிவியல் உரை படித்தேன், அகலவுரை அறிவியல் நுட்பங்களைக் குறள் வரிகளில் வாசிக்கிறது. கைம்மாறு கருதாத உதவி கடலை விடப் பெரியது, பரப்பளவிலா? இல்லை: கடல் நீரை ஆவியாக்கி மேகத்திடம் மழைபெற்று நெடுங்கடலின் நீர்மை குன்றாமல் காத்துக் கொள்கிறது. கடல் கைம்மாறு எதிர்பார்க்கிறது. அதைவிடப் பெரிது பயன்தூக்கார் செய்த உதவி, புறப்பகை வெல்வது ஆண்மை, அகப்பகையாம் காமத்தை வெல்வது பேராண்மை, பிறன்மனை நோக்காத பேராண்மை பிறக்கும் போது புகழுடன் பிறக்க முடியுமா? ஒரு செயலில் ஈடுபடும் போது செயலுக்குப் புகழ் உண்டாகுமாறு செய்வதுதான்.
தோன்றிற் புகழோடு தோன்றுதல்! அமரர் தேவரா? தேவருலகம் புராணப்புனைவு, ‘அடக்கம் என்றும் உயர்ந்த தன்மையைப் பெற்றவன் அமரன்’ என்பதுதான் அறிவியல் பார்வை, எழுபிறப்பு என்பது என்ன? முற்பிறப்பு, பின்பிறப்பு புனைவுகள் அல்லவா? தந்தை, மகன், பெயரன், எண்ணப் பெயரன், கொள்ளுப்பெயரன், தன்பெயரன், தான்பெயரன் தமிழில் உள்ளன. பாட்டன், பூட்டன், சேட்டன், ஓட்டன், சேயோன் என்னும் தலைமுறைகள் தான் பிறப்பு என்ற விளக்கம் அறிவியல் அடிப்படையினால் பெறப்படுகிறது. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக்கூலி தரும்.
தெய்வம் விமானம் ஓட்டுமா? வலவன் ஓட்டுவான். மனிதனால் முடிகிற செயலைத் தெய்வத்தால் முடியும் என நம்பி அறிவியலைத் தொலைத்துவிடாதே. தெய்வத்தால் முடியாததை உன் முயற்சி சாதிக்கும், இவ்வுரையில் உலகவழக்குத் தொடர்கள் நூற்றுக்கணக்கில் விளக்கம் பெறுகின்றன. நரிக்குறவர் பேசும் வாகிரிபோலி மொழியிலும் குறள்மொழி பெயர்ப்பு கிடைக்கிறது என்ற தகவலைத் தருகிறார்.
“கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் மரம்.”
என்னும் குறட்பா விளக்கத்தில் ஈரான்மன்னர்ஷா, பிலிப்பைன்ஸ் அதிபர் மார்க்கோஸ், உகாண்டா அதிபர் இடிஅமீன், ஈராக் அதிபர் சதாம் உசேன் ஆகியோர் சான்றுகளாகக் கூறப்படுகின்றனர்.
கி.பி. 1440இல் நிக்கோலஸ் கிரப்ஸ் உலகம் உருண்டை எனக் கூறினார். கலிலியோ 17 ஆம் நூற்றாண்டில் கூறினார். வள்ளுவர் உலகம் உருண்டை சுழலும் என அறிந்தால், ‘சுழன்றும் ஏர்பின்னது உலகம்’ என்றார். குடிசெய்வார்க்கு இல்லை பருவம் நல்லகாலம், கெட்டகாலம், உகந்தகாலம், உகாதகாலம் கூடாது. சோம்பல் கொள்ள இவை ஏதுவாகும் போன்ற விளக்கங்கள் உள்ளன.
மாத்தளை சோமு அகல உரையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட உரைகள் ஒப்பாய்வு செய்யப்படுகின்றன. 150க்கும் மேலான குறட்பாக்களில் அகலவுரை இடம் பெறுகிறது. உலக நாடுகளில் பயணித்த, 16 நூல் படைத்த படைப்பிலக்கியவாதி உரையாசிரியர் என்னும் புதிய துறையில் ஒளி வீசுகிறார். வள்ளுவரின் வரைகோட்டு ஓவியம், மலைநாட்டு ஆதி குமணனுக்கு நூல்படையல், அறிஞர் தமிழண்ணலின் அணிந்துரை, துணை நூற்பட்டியல், அதிகார குறள், அகரமுதலி என நூல் 496 பக்கங்களில் அமைகிறது. உறையூர் இறையனார், பாவாணர், பெருஞ்சித்திரனார் வரிசையில் மாத்தளை சோமு இடம் பெறுகிறார்.
திருக்குறளின் நடை அவர்கால இலக்கணத்தன்மை போன்ற அறிவியல் கூறுகள் விடுபட்டுள்ளன. உலகம் சுழல்கிறது என்பது வள்ளுவருக்குத் தெரியும். திங்களைப் பாம்பு கொண்டற்று என்ற நிலவுமறைவு (கிரகணம்) பற்றிய வானவியல் உண்மைகள் போன்ற மாத்தளை சோமுவின் கருத்துகள் வள்ளுவரின் மேல்கொண்ட பற்றினால் வந்ததா? இடவாகுபெயர் போன்ற இலக்கணக் கூறுகள் புறக்கணிக்கப்பட்டதால் தோன்றிய கருத்து மாறுபாடா? என்பதைக்காலம் தான் முடிவு செய்ய வேண்டும். நூல் முழுவதும் உள்ள திருக்குறள் பற்றிய துணுக்குச் செய்திகள் படிப்பவரை மேலும் படிக்கத் தூண்டுகின்றன.
திருக்குறள் (அறிவியல் அகலவுரை)
ஆசிரியர்: மாத்தளைசோமு,
வெளியீடு: தமிழ்க்குரல் பதிப்பகம், 15(5)5, ஆவது முதன்மை சாலை, இராமலிங்கநகர், திருச்சி - 3,
நன்கொடை விலையில்
(விரைவு தபால் செலவு உட்பட) 150.00, விலை 180.00
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|