கடல்வாழ் வண்ண மீன்கள் வளர்ப்பு: நூல் விமர்சனம்
கடல்வாழ் வண்ண மீன்கள் வளர்ப்பு
ஆசிரியர் : வெ. சுந்தரராஜ்,
வெளியீடு : ஏகம் பதிப்பகம்,
அஞ்சல் பெட்டி எண் : 2964,
3 பிள்ளையார் கோயில் தெரு,
2 ஆம் சந்து, முதல் மாடி,
திருவல்லிக்கேணி,
சென்னை - 5,
விலை : ரூ. 95.00
மீன்களின் பயன்கள் பெருமளவு. அவற்றை நாம் அறிந்தது ஓரளவே. சத்துள்ள உடல் நல உணவாவது முதல், சிறந்த மூளை உணவாகவும் அமைந்தவை மீன்கள் என்கிறது அறிவியல். பல பொதுவான பயன்களும், தலைசிறந்த பொழுதுபோக்கு உயிரினங்களாய் மீன்கள் விளங்குவது சிறப்பு. அதனால்தான் மன அழுத்தம் குறையவும், இன்பமாய்ப் பொழுதுபோக்கவும் இல்லந்தோறும் வண்ணமீன்கள் வளர்க்கப்படுகின்றன.
கடலைப் பற்றியும் கடல்வாழ் வண்ணமீன்களைப் பற்றியும் நாம் அறிந்தவை கொஞ்சம். அந்தக் குறை தீரும் வகையில், மீன்வளக் கல்லூரியின் முன்னாள் முதல்வர், பேராசிரியர் முனைவர் வெ. சுந்தரராஜ் எழுதி, ஏகம் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள “கடல்வாழ் வண்ண மீன்கள் வளர்ப்பு” என்னும் நூல் அமைந்துள்ளது. இந்நூலில், கடல் மற்றும் கடலின் சூழலும், நமது கடல்களின் வண்ண மீன்களின் வளமும், மீன்களின் அழகும், மீன்களைப் பிடித்தெடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்புகளும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வசதிகளும் சிறப்புற விளக்கப்பட்டுள்ளன. மேலும், கடல் வண்ண மீன்களை வளர்க்க வேண்டியதன் அவசியம், வளர்ப்புக்கு அவற்றைத் தேர்வு செய்தல், வளர்ப்புத் தொட்டியின் அமைப்பு மற்றும் அதனை நிறுவுதல், தொட்டியில் மீன்களை வளரவிடல், மீன்களுக்கு உணவளித்தல், வளர்ப்பு நீரின் தரம் பேணல் என, கடல் வண்ணமீன்களை, அறிவியல் நுட்பமுடன் வளர்க்கும் முறை, அழகு தமிழில் எளிய முறையில் ஏற்ற எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. கடல் வண்ண மீன் வளர்ப்பைப் பொழுதுபோக்காக மட்டுமின்றி! கடலோரம் ஒரு தொழிலாக மேற்கொள்ளவும், ஏற்றுமதி செய்யவும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
கடல் வண்ண மீன்களின் உயிரியலும், மீன்களின் செயல் பாடுகளும் அனைவருக்கும் விளங்கும்படி சிறந்த படங்களுடன் தரப்பட்டுள்ளன. கடல் வண்ண மீன்களால் கடலோர மக்களின் பொருளாதாரம் சிறக்கும் வாய்ப்புகள், இந்நூலாசிரியரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. பெண்களின் சுய உதவிக்குழுக்களுக்கு, இந்நூலின் உதவியால், கடல் வண்ண மீன்களின் வளர்ப்புத் திட்டமொன்றை ஒரு சிறப்பு வளர்ச்சித் திட்டமாகச் செயல்படுத்தலாம். அதற்கேற்றதோர் அருமையான வழிகாட்டி நூல் இந்நூல்.
நமது நாட்டுக் கடலோர மக்கள், தமது வாழ்வாதாரங்களைப் பெருக்கிக் கொள்ளவும், அதற்கு உதவிடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் பயிற்சிக்கு ஏற்ற நூலாகவும், இந்த நூல் சிறப்பாகப் பயன்படும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|