தமிழகத்தில் சிந்துச் சமவெளி நாகரிக நீட்சி
மயிலாடு துறை செம்பியம் கண்டியூரில் தடயம்
சிந்துச்சமவெளி எழுத்துகள் கொண்ட புதிய கற்காலத்துக்கைக் கோடரி ஒன்று மயிலாடுதுறையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. “இது மிகப் பெரிய கண்டுபிடிப்பு, ஏனென்றால் முதல்முறையாக சிந்துச் சமவெளி எழுத்துகள் அடங்கியதும், கால வரையறை செய்யக்கூடியதுமான ஒரு தடயம் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, என்கிறார் சிந்து சமவெளி எழுத்துகள் பற்றித் தமிழகத் தொல்லியல் துறை வல்லுநரான ஐராவதம் மஹாதேவன். “இதன் மூலம் தெரிய வரும் உண்மை என்னவென்றால் தமிழகத்தைச் சேர்ந்த புதிய கற்கால மக்கள் ஹரப்பா மொழிக்குடும்பம் சார்ந்த மொழி ஒன்றையே பேசினார்கள் என்பதுதான். அம்மொழி திராவிட மொழியே, என்பதும் அவர் கருத்து, தடயத்தின் காலம் கி.மு. 2000 - 1500 என்றும் அவர் வரையறை செய்கிறார்.
2006 பிப்ரவரி மாதத்தில் வி. ஷண்முகநாதன் என்னும் பள்ளியாசிரியர் வீட்டுப்புறக்கடையில் குழி தோண்டிய போது தற்செயலாக இத்தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அகழ்வாய்வில் ஆர்வம் கொண்ட ஆசிரியர் தரங்கம்பாடி அருங்காட்சியகத்தில் பணிபுரியும் தமது நண்பர் ஜி. முத்துசாமி என்பவருக்கு இதைத் தெரிவிக்க தடயங்கள் அரசு - அகழ்வாய்வுத்துறையினர் வசம் வந்தன.
தடயங்களை ஆய்வு செய்தபோது அவற்றில் 4 குறியீடுகள் அல்லது சின்னங்கள் இருப்பதும் அவை சிந்துச்சமவெளி எழுத்துவகை சார்ந்தவை என்பதும் கண்டறியப்பட்டன. அவை சிந்துச்சமவெளி சார்ந்தவையே என்று மஹாதேவன் கூறினார். கண்டறியப்பட்ட இரு கோடரிகளில் ஒன்றில் எழுத்துகள் இல்லை. ஒன்றில் மட்டுமே எழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு கோடரியும் 125 கிராம் எடை கொண்டது.
இனி அந்த 4 குறியீடுகள் பற்றி - முதல் குறியீட்டில் விலா எலும்புகள் கொண்ட ஒரு மனிதன் முதுகு கூன் வளைந்து பின்னங்கால் மடித்து முழங்கால் உயர்த்தி அமர்ந்திருக்கும் தோற்றம். இரண்டாம் குறியீடு கைப்பிடி கொண்ட ஒரு குவளை. முதல் குறியீடு ‘முருகு’ என்றும் இரண்டாம் குறியீடு ‘அன்’என்றும் படிக்கப் படவேண்டியவை. இரண்டும் இணைந்து ‘முருகன்’ ஆகின்றன. ஹரப்பா தடயங்களில் இவ்விரு பொருள்களும் பல்கிவருபவை. “முருகு” சின்னம் 48 என்னும் சிந்துச்சமவெளி முத்திரை எண்ணோடும் “அன்” சின்னம் 342 என்னும் எண்ணோடும் பொருந்துகின்றன. மூன்றாம் சின்னம் சூலம் போல் தோன்றுகிறது. அதன் எண் 367. நான்காம் சின்னம் 301. மஹாதேவன் சிந்துச் சமவெளி எழுத்துகள் பற்றி வெளியிட்டுள்ள பட்டியலில் இவை தரப்பட்டுள்ளன. மஹாதேவன் சொல்கிறார் - ‘முருகு’ ‘அன்’ என்னும் இரு சொற்களும் நூற்றுக்கணக்கான இடங்களில் ஹரப்பா வரிவடிவங்களில் இடம் பெறுகின்றன.
செம்பியம் கண்டியூர் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் வாய்ந்தது; ஹரப்பா, தமிழகம் ஆகிய இரு நிலப்பகுதிகளில் மக்கள் ஒரே வரிவடிவத்தை மட்டுமன்றி ஒரே மொழியைத்தான் பயன்படுத்தினார்கள் என்பது இதனால் பெறப்படும் உண்மையாகும்.
முருகு என்னும் சின்னம் தமிழ்நாட்டில் முதன்முதலில் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள சானூரில் கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட ஓவியங்களிலிருந்து அறியப்பட்டது. பி. பி லால் என்னும் அகழ்வாய்வாளர் இதைச் சிந்துச் சமவெளியின் 47 ஆம் முத்திரை எண்ணோடு ஒப்பிட்டு அடையாளப்படுத்தினார். மாங்குடி (திருநெல்வேலி), முசிறி (கேரளம்) மண்பாண்ட ஓவியங்களிலும் இச்சின்னம் சுட்டி அடையாளம் காட்டப் பட்டுள்ளது. ஆனால், இப்போதுதான் முதன்முறையாக ஒரு முழுச் சிந்துச்சமவெளி வரிவடிவம் ஒரு கற்கருவியில் பதிந்துள்ளமை நம் பார்வைக்கு வந்துள்ளது -- என்கிறார் மஹாதேவன்.
“இக்கற்கருவி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது. இது தென்னாட்டைச் சேர்ந்ததுதான். இத்தகைய கற்கள் வடநாட்டில் இல்லை. இவை நம் தீபகற்பம் சார்ந்தவை. இக்கண்டுபிடிப்பின் மூலம் சிந்துச்சமவெளி மக்கள் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் ஒன்றைப் பேசியவர்கள் அல்லர். அவர்கள் திராவிட மொழி பேசியவர்கள்தாம் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது” என்றும் உறுதியாகச் சொல்கிறார் மஹாதேவன்.
நன்றி : தி இந்து மே-2006.
(குறிப்பு: தமிழ்மொழி - தமிழ்நாடு வரலாற்றின் தொன்மையை ஆய்ந்தறிந்து காலவரையறை செய்ய இது உதவலாம். இது போன்ற எண்ணற்ற தடயங்கள் நிலத்துக்கடியில் இன்னும் புதைந்து கிடக்கலாம்
ஆசிரியர்).
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|