Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Ungal Noolagam
Ungal Noolagam Logo
ஜனவரி - பிப்ரவரி 2008

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்
கமலாலயன்

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என அழைக்கப்படுகிற ம. சிங்காரவேலு (1860-1946) அவர்கள், இந்திய விடுதலைப் போராட்ட வீரர். அன்றைய சென்னை மாகாணத் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடித் தலைவர். நடுத்தர மீனவர் குடும்பத்தில் பிறந்தவரான சிங்காரவேலர், பெரியார் அவர்களின் சுயமரியாதை இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டிருந்தவர். தாழ்த்தப்பட்ட - சாமானிய மக்களின் பலன்களுக்காக, பெண்களின் முன்னேற்றத்திற்காக உறுதியாகப் பாடுபட்டவர்.

1935-36-ம் ஆண்டுகளில் ‘புது உலகம்’ பத்திரிகை வெளிவந்திருக்கிறது. இப்படி ஒரு பத்திரிகை வெளிவந்ததன் காரணம் என்ன? அந்தப் பத்திரிகை வெளிவந்ததைப் போற்றி வரவேற்று சிங்காரவேலர் இப்படி எழுதுகிறார் : “... சென்ற இரண்டு - மூன்று வருஷங்களாக நமது தமிழ் நாட்டு மக்கள், ஸயன்ஸ் அதாவது விஞ்ஞான விஷயங்களைத் தெரிந்து கொள்ள விருப்பமுடையவர்களாய் இருக்கிறார்களெனத் தெரிகிறது. இந்த அவாவைத் தூண்ட நமது ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’ (1932-35 காலகட்டம்) முதலிய சுயமரியாதைப் பத்திரிகைகளில் எழுதிவந்த மெய்ஞ்ஞானக் கட்டுரைகளே பெரும்பான்மைக் கருவிகளாக இருந்து வந்திருக்கின்றன.

ஆனால், தமிழ் நாட்டில், வழங்கிவரும் சுயமரியாதைப் பத்திரிகைகள் மிகுதியாக, அனுஷ்டானத்தில் இருந்துவரும் Practical அரசியல், சமூக வாழ்க்கை, மூடப்பழக்க வழக்கங்களைக் குறித்துப் பாமர மக்களுக்கு அறிவித்து வந்தன. ஆனால் இன்றைய தற்கால வாழ்க்கையைத் திருத்தி, புது வாழ்க்கையை உண்டுபண்ண, நமது மூட ஜாதி, மதப்பழக்கங்களின் ஆபாசங்களை எடுத்துரைத்து, மக்கள் வாழ்க்கையைப் புனிதப்படுத்த வேண்டிய அவசியத்தினை யாரும் மறுக்க முடியாது. எனினும் Pure Science என்று வழங்கும் சுத்த மெய்ஞ்ஞானத்தை எடுத்துரைக்க தமிழ் பாஷையில் ஒரு தனித்த பத்திரிகையும் கூட இல்லை. இந்த அவசியத்தைப் பூர்த்தி செய்ய ‘புதிய உலகம்’ (புது உலகம்) என்ற பத்திரிகை வெளிவந்ததைப் போற்றுகின்றோம்...” இந்த மேற்கோளில், மிகுந்த கவனத்திற்குரியனவாக சில அம்சங்கள் அமைந்திருக்கின்றன:

தமிழ்நாட்டு மக்கள், விஞ்ஞான விஷயங்களைத் தெரிந்து கொள்ள விருப்பமுடையவர்களாய் இருக்கின்றனர் என்ற கணிப்பு.

இந்த விருப்பத்தைத் தூண்ட உதவுகிற பெரும்பான்மைக் கருவிகளாக அன்றைக்கு குடிஅரசு, புரட்சி, பகுத்தறிவு - முதலான சுயமரியாதை (இயக்கப்) பத்திரிகைகள் இருந்து வந்திருக்கின்றன.

இவை, மக்களின் அனுஷ்டானத்திலிருந்து வரும் Practical அரசியல், சமூக வாழ்க்கை, மூடப்பழக்க ஒழுக்கங்களைக் குறித்துப் பாமர மக்களுக்கு அறிவித்து வந்தன.

இன்றைய தற்கால வாழ்க்கையைத் திருத்தி, புது வாழ்க்கையை உண்டு பண்ண மேற்கண்ட சுயமரியாதைப் பத்திரிகைகளின் அவசியத்தை யாரும் மறுக்க முடியாது.

எனினும், ‘Pure Science’ என்று வழங்குகிற சுத்த மெய்ஞ்ஞானத்தை எடுத்துரைக்கத் தமிழ்மொழியில் ஒரு தனித்த பத்திரிகையும் கூட இல்லை. இதைப் பூர்த்தி செய்ய ‘புது உலகம்’ இதழ் வந்துள்ளது.

“மெய்ஞ்ஞானம்’ என்பது இந்தியச் சிந்தனை மரபில் ஆன்மிக அறிவு சார்ந்த ஒரு சொல்லாடலாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. அந்த வார்த்தையையே நேர் எதிரான ஒரு பொருளில் பயன்படுத்தியவர் என்ற வகையில் சிங்காரவேலர் தனித்தன்மை பொருந்தியவராய் இருந்திருக்கிறார்.

‘ஸயன்டிஸ்ட்’, ‘தோழர்’, ‘இமாலய தவசி’, ‘சமதர்மி’, ‘கிரிட்டிக்’, ‘யுக்திவாதி’, ‘சிந்தனாவாதி’ இத்தகைய பெயர்கள் அனைத்தையும் சிங்காரவேலர் அவர்கள் தமது அறிவியல் கட்டுரைகளுக்குப் புனைபெயர்களாகப் பயன்படுத்தியிருக்கிறார். அறிவியல்பூர்வமான அவரது அணுகுமுறையை இந்தப் பெயர்களே சுட்டி நிற்கின்றன.

“தமிழ் மொழியில் விஞ்ஞானத்தைப் பற்றிய பிரசுரங்கள் ஒன்றேனுமில்லை...” - என்று குறைப்பட்டுக் கொள்கிற சிங்காரவேலர், “இந்தக் குறையை நிவர்த்தி செய்வது தமிழ்நாட்டு மக்களின் முதற்கடமை” என்று கருதுகிறார்.

“நமது சமூக வாழ்க்கை உயர வேண்டுமானால் ‘மெய்ஞ்ஞானமுறை’ இன்னதென்று தெரிந்துகொள்ளல் அவசியமாகும். மெய்ஞ்ஞான முறையை, பெரும்பான்மை மக்களுக்குத் தெரிவிக்காமையால், அரசியல் துறையிலும், சமூகத்துறையிலும், தினசரி பழக்க வழக்கங்களிலும், அறிவுடையோரும் தங்கள் பகுத்தறிவை உபயோகப்படுத்தாமல், மூடப் பழக்கங்களுக்கும், மூட எண்ணங்களுக்கும் ஆளாகின்றனர். தமிழ் உலகம் இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு இந்த அறியாமையே முதற்காரணம்...” என்று திட்டவட்டமாக அறுதியிட்டுக் கூறுகிறார் சிங்காரவேலர். “எந்த ஞானம் எல்லா ஞானத்தை விடச் சிறந்தது என்ற கேள்விக்கு, ஸயன்ஸ் ஒன்றே என்று மாபெரும் ஞானியாகிய ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்ஸ் தெரிவித்ததை நமது தமிழ் மக்களிடம் அறிமுகம் செய்வதே இந்தப் ‘புதிய உலகம்’ பத்திரிகையின் கோரிக்கையாக வேண்டுமென்று வேண்டுகிறோம்...” (‘புது உலகம்’ - மே, 1935)

ம. சிங்காரவேலர் எழுதிய 34 சிறுசிறு கட்டுரைகளை உள்ளடக்கியது இந்த நூல். சார்லஸ் டார்வின், சாக்ரடீஸ், பிளேட்டோ, கலிலியோ, கோபர் நிக்கஸ், மார்க்ஸ் - ஏங்கல்ஸ், ஐன்ஸ்டீன், சர். சி. வி. ராமன், ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்ஸ், ஹெகல், கான்ட், ஜியார்டனோ புரூனோ, ஃப்ளமிங் போன்ற எண்ணற்ற அறிவியல், சமூக அறிவியல், தத்துவஞான மேதைகளின் நூல்களில் இருந்து தாம் உள்வாங்கிய பல கருத்துக்களைத் தனது நாட்டு மக்களுக்குப் பயன்படவேண்டும் என்ற நோக்குடன் மிகத் தெளிவாகவும், எளிமையாகவும் இந்நூலில் சாறாகப் பிழிந்து தந்திருக்கின்றார் ஆசிரியர்.

காலம்-வெளி (Time-Space) பற்றி, பரிணாமக் கொள்கை, பேய்-பிசாசு, வேதாந்தம், பழக்கம், பிரகிருத ஞானம், பூகம்பம், சோதிடம், சிருஷ்டி வரலாறு, சொல்லின் கொடுங்கோன்மை, உயிர், உண்மை, பகுத்தறிவு, உலகின் வறட்சி, மூப்பு, பிரபஞ்சமும்-நாமும். இவ்வாறாக தனது காலத்தில் அறிவுலகில் விவாதிக்கப்பட்ட முக்கியமான அம்சங்கள் அனைத்தையுமே சாதாரணப் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் இக்கட்டுரைகளில் எடுத்துரைத்திருக்கிறார் சிங்காரவேலர். புத்தகங்களுக்கான மதிப்புரைகளாகவும் சில கட்டுரைகள் அமைந்துள்ளன. பிரபஞ்ச தற்காலப் பிரச்சினை’, ‘டார்வினிஸமும்-அதன் கண்டன கர்த்தாக்களும்’, ‘Religion of the open mind’, ‘Social Record of christianity’ -இவையெல்லாம் சிங்கார வேலரால் விமர்சிக்கப்பட்டுள்ள புத்தகங்கள். மிருகத்தை மனிதனாக்கின ஆயுதங்களே காலப்போக்கில் சக மனிதர்களைத் துன்புறுத்துவதற்கான ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டது பற்றிய பகுதி சிங்காரவேலரின் சிந்தனை வளத்திற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது எனலாம்.

“உணவு, உடை, வீடு முதலிய அவசியங்களுக்கு வேண்டிய கருவிகளை விருத்தி செய்து வந்தபடியால் மனிதன் பசி, பட்டினியின்றியும், வறுமை, பஞ்சமின்றியும் வாழ உதவி பெற்றான். இத்தியாதி உதவியைக் கொண்டு தானே வாழவும், தனது உறவினர், பந்துக்கள் சாகவும், மதிகெட்ட காரியங்களைச் செய்து வருவதால், வீட்டையும், வாசனையும், கப்பல்களையும், ரயிலையும், நெய்யும் இயந்திரங்களையும் சம்மட்டி-கடப் பாரையையும், உழவுகோலையும் பழிப்பது மதியாகுமா? எனவே, விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்ட சகலவித ஆயுதங்களும், கருவிகளும் மனிதன் வாழ்வை மேன்மேலும் உயர்த்திக்கொள்ள ஏற்பட்டவைகளென அறிக...”

“எல்லா இயந்திரங்களையும், உலகிலுள்ள எல்லா ஆயுதங்களையும், எல்லாக் கருவிகளையும் மக்களுக்கு வேண்டிய உணவு, ஆடை, வீடு, கல்வி முதலிய அவசியங்களை உயர்தர வாழ்விற்கு உபயோகப்படுத்துவோமாகில் கொலை ஏது? களவு ஏது? நோயேது?

யுத்தவெறி தலைக்கேற நவீன ஆயுதங்களைக் குவித்து வைத்துக்கொண்டு எந்த நேரமும் எதிராளியைத் தேடிக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகிற்கு மேற்கண்ட உண்மை உறைக்குமா? “நமது சந்ததியார் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்?”-என்ற கட்டுரை ஜூன், 1935-ல் எழுதப்பட்டிருக்கிறது.

“இந்திய நாட்டில் கோவில்களும், குளங்களும் ஏற்பட்டு சுமார் இரண்டாயிரம் வருஷங்கள் இருக்கலாம். இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முந்தி சைவக் கோவில்களாகிலும் - வைஷ்ணவக் கோவில்களாகிலும் இல்லை. பௌத்தர்கள் புத்த கோவில்கள் கட்டிவந்த பிறகே இந்துக்கள் தங்களின் தெய்வங்களுக்கு கோவில்களும் குளங்களும் கட்ட ஆரம்பித்தனர்...

தற்போதுள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் ஏற்பட்டு ஆயிரம் வருஷங்களுக்கு மேற்படாது. இந்த வருஷங்களுக்குள்ளாக எத்தனை கோவில்கள் பூசையற்று, நிவேதனமற்று, தேர்த்திருவிழாவற்று பாழாய்ப் போய்க் கொண்டிருக்க, புதிய புதிய கோவில்களும் - குளங்களும் தமிழ்நாட்டில் கட்டுகின்றோமே? இதைக் குறித்து நமது சந்ததியார் நம்மை என்ன மதிப்பார்கள்...?” 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை இக்கட்டுரைகள். அன்றைக்குத் தனக்குக் கிடைத்த புகைப்படங்களையும் கட்டுரைகளுடன் சேர்த்து வெளியிட்டிருப்பதில் சிங்காரவேலர் காட்டியுள்ள அக்கறை, சாதாரண மக்களுக்கு அறிவியல் சார்ந்த உண்மைகளை விளக்குகையில் கையாளப்பட வேண்டிய முறைக்கு உதாரணமாகும்.

இக்கட்டுரைகளைத் தொகுத்துத் தந்துள்ள, தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளான ஸி. எஸ். சுப்ரமணியமும், கே. முருகேசனும் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து நமது கவனத்திற்கு உரிய அம்சங்களைப் பார்த்தால், இன்றும் நமது செயல்பாடுகளுக்குப் புதிய வெளிச்சம் கிடைக்கும். ‘புது உலகம்’ இதழில் வெளியான இவற்றைப் படிப்பவர்களுக்குப் புத்துலகம் படைக்கும் பணிகளில் ஒரு புத்துணர்ச்சியும், புதியதோர் உத்வேகமும் நிச்சயம் கிடைக்குமென்று கூறலாம்.

தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்
(கட்டுரைகள்)
ஆசிரியர் : சிங்காரவேலர்
வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்,
142, ஜானி ஜான்கான் சாலை,
இராயப்பேட்டை, சென்னை - 600014,
விலை : ரூ. 45.00


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com