ஈரிழப்பு நமக்குப் பேரிழப்பு
யாதும் ஊரே ஆசிரியர்
நா.வை. சொக்கலிங்கம்
தந்தை பெரியார் வழியில், தமிழ் மொழி, தமிழ்ச் சமூகத்திற்காக போராடுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தவர் ஐயா நா.வை. சொக்கலிங்கனார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலடிப்பட்டி சிற்றூரில் திரு.நா.வே. வைரவன் - சண்முகத்தாய் இணை யருக்கு 07.05.1937ஆம் ஆண்டு பிறந் தார். ஒன்பதாம் வகுப்புவரை பெற்றோரின் உதவியில் படித்த இவர், பின்னர் தன் சொந்த முயற்சியில், தன் துணைவியாரின் உதவியுடன் எம்.ஏ. பி.ஜி.எல். வரை படித்தார்.
1955ஆம் ஆண்டு சென்னைத் துறைமுகத்தில் கூலித் தொழீலாளியாக வேலையில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி மெசேன்ஜர், எழுத்தர் மற்றும் கிடங்கு பொறுப்பாளர் ஆகிய பதவிகளை வகித்து 1995ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
01.05.1960இல் பத்மாவதி அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். தன் பிள்ளைகளுக்கு தேன்மொழி, தமிழழகன், தமிழ்த்தென்றல், திருவள்ளுவன், எழிலோவியம் என்று தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார்.
1995இல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றாலும், தமிழ்த் தொண் டிற்கு ஓய்வு கொடுக்காமல் 1997இல் யாதும் ஊரே என்ற திங்களிதழைத் தொடங்கினார். திங்கள் தோறும் தன் ஓய்வூதிய பணத்தில் பெருந்தொகையை இவ்விதழுக்காக செலவிட்டார்.
நல்ல கருத்துகளை உள்ளடக்கி வந்த "யாதும் ஊரே' இதழ் ஒரு வரலாற்றுக் களஞ்சியமாக, புதிய பதிவை தமிழ் சமூகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 2003ஆம் ஆண்டு பொடா சட்டத்தில் பழ. நெடுமாறன், வைகோ போன்றவர்களைக் கைது செய்த போது இவருக்கும் உளவுத்துறை அச்சுறுத்தல் கொடுத்தது. யாதும் ஊரே நிறுத்தப்பட வேண்டும், இல்லையேல் தடை செய்யப்படும் என்று அச்சுறுத்தல் வந்தது. இதற்கெல்லாம் அஞ்சாமல் தமிழீழ விடுதலைக்காகத் தொடர்ந்து எழுதி வந்தார்.
தன் இளைய மகன் திருவள்ளுவன் 7.02.09இல் இறந்தது, இவரைப் பெரிதும் பாதித்தது. அதையும் தாங்கிக் கொண்டு இதழைச் சிறப்பாக நடத்தி வந்தார். பம்மலில் ஒரு செம்மல், சமூககாலத் தொண்டர், மக்கள் தொண்டர், பகுத்தறிவு ஏந்தல், இலக்கிய விடியல் போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
தன் 72 வயதிலும் எளிமையான தோற்றத்துடன், செல்லுமிடங் களுக்கு மிதிவண்டியிலேயே சென்று வந்த ஐயா அவர்கள், உடல் நலக்குறைவால் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். (பித்த நீர் பையில் உள்ள கற்களை நீக்க) நலமுடன் 01.06.09இல் அறுவை சிகிச்சை நிறைவுற்றது. ஆனால் மறுநாள் 02.06.09 காலை கழிப்பறையில் கால் வழுக்கி விழுந்து காலமானார்.
மூத்த தமிழறிஞர்
இரா. திருமுருகன்
தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்திய இரா. திருமுருகன் அவர்கள் சூன் 3, 2009 அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
புதுச்சேரியில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண் டும். அச்சட்டத்தின் அடிப்படையில் அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்துப் போட வேண்டும். இதை ஒரு மாதத்துக் குள் செய்யவில்லை என்றால் தமிழ் மாமணி விருதைத் திருப்பிக் கொடுப் பேன் என்று அறிவித்திருந்தார். இதனை அரசு நடைமுறைப்படுத்தவில்லை, ஆதலால் அவர் வீட்டிலிருந்து ஊர்வல மாகச் சென்று கலைப் பண்பாட்டுத்துறை அதிகாரியிடம் தமிழ்மாமணி விருதைத் திருப்பிக் கொடுத்தார்.
இரா. திருமுருகன் அவர்கள் தமிழ் இலக்கணத்திலும், தமிழிசையிலும் வல்லுநர். “சிந்து பாடல்களில் யாப் பிலக்கணம்” என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். 55 நூல்கள் வெளியிட்டுள்ளார்.
அவருக்கு மனைவி யமுனா, மகன்
தி. அறவாழி ஆகியோர் உள்ளனர். ஐயா திருமுருகனின் விருப்பத்துக்கு ஏற்ப அவரது உடல் சிப்மர் மருத்துவமனைக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது.
தோழர். சிவ. காளிதாசன் (அமைப்புக் குழு) தோழர் நாத்திக கேசவன் (சென்னை மாநகரச் செயலர்) ஆகியோர் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|