பொங்கலும் புத்தாண்டும்
வேல்முருகன்
1931ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்களால் திருச்சியில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது. தமிழறிஞர்கள் மறைமலையடிகள், திரு.வி.க., கா.சு. பிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமி ழறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்றோர் கூடி ‘பொங்கல் விழா' தமிழர் விழா, சாதி மதச் சார்பற்ற விழா என்று நாட்டுக்கு அறிவித்தார்கள். தந்தை பெரியார் அவர்கள் விமர்சனம் செய்யாதது, அவரின் எதிர்ப்புக்கு உட்படாதது எதுவுமில்லை. ஆனால் அவரே பாராட்டியது உண்டென்றால் அது திருக்குறள் நூல், மற்றொன்று பொங்கல் விழா.
பாவேந்தர் பாரதிதாசன்: “தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்''
“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே''
“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு''
தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே!
சித்திரை முதல் நாள் ஆண்டுப் பிறப்பென்பதும், பிரபவ முதல் அட்சய வரையிலான 60 சுழலாண்டு முறையும் பார்ப்பனியம் திணித்த அறிவுகெட்ட முறையாகும்.
இதையும் ஆய்வு செய்து நம் அறிஞர்கள் 1921ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஒரு புதிய முடிவுக்கு வந்தார்கள். தமிழறிஞர் மறைமலை யடிகள் தலைமையில் அக்கூட்டம் நடந்தது. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கடைப்பிடிப்பது.
திருவள்ளுவர் காலம் கி.மு. 31, தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்யப் பட்டது. பின்னர் 18.11.1935இல் திருவள்ளுவர் கழகத்தினர் நடத்திய திருவிழாவிற்குத் தலைமை வகித்த மறைமலையடிகள் மீண்டும் இதை உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு கிருத்து ஆண்டுடன் 31ஐக் கூட்டிக் கணக்கில் கொள்ள வேண்டும். 2009 + 31 = 2040.
சென்ற ஆண்டு தமிழக அரசு ஓர் ஆணை பிறப்பித் துள்ளது. (அரசு ஆணை எண் : 70 நாள் : 9.4.2008) தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது ஆண்டுகளின் பெயர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை 1971 முதல் அரசு நாள் குறிப்பிலும், 1972 தொடங்கி தமிழ்நாடு அரசிதழிலும் பின்பற்றி வருகிறது.
நாமும் இதைச் செயல்படுத்துவோம்.
தமிழயரத் தாழ்ந்தான் தமிழன்; அவனே
தமிழுயரத் தானுயர்வான் தான் - பாவாணர்
ஆம் தோழர்களே, தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் திருவிழா இரண்டும் தை முதல் நாளே.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|