காங்கிரசுக் கோலுக்கு கருணாநிதி ஆட்டம்!
சிறையில் கொளத்தூர் மணி, பெ. மணியரசன், சீமான்
கடந்த 14.12.2008இல் தமிழர் எழுச்சி உரைவீச்சு என்ற தலைப்பில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்திற்கு ததேபொக தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ச.அத. மணிபாரதி தலைமை தாங்கினார். சிறப்புரையாற்றிய தோழர்கள் பெ. மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் மூவரும் ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கும், தமிழக மீனவர் படுகொலைகளுக்கும் இந்திய அரசே பின்புலமாக இருப்பதை கண்டித்து உரையாற்றினர்.
பேச்சை அறிந்து மிரண்ட காங்கிரசுக் கட்சியின் ஈவேகிச இளங்கோவன் குழு, மொடக்குறிச்சி ச.ம. உறுப்பினர் பழனிச்சாமி, பொதுக்கூட்டப் பேச்சுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் கொடுத்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகவும், இராசீவ் காந்தி பற்றிக் கொச்சையாகவும் பேசியதாக அப்புகாரில் எழுதியிருந்தார். இதனையடுத்து தமிழகக் காங்கிரசுத் தலைவர் கே.வி. தங்கபாலு மூவரையும் கைது செய்ய வலியுறுத்தி அறிக்கை விட்டார். காங்கிரசுக் கட்சியின் பல்வேறு பிரிவுத் தலைவர்களும் இதேபோன்று அறிக்கை விட்டார்கள்.
கருணாநிதியின் திமுக அரசு உடனடியாகத் தோழர்களைக் கைது செய்தது. வத்தலகுண்டு படப்பிடிப்பில் இருந்த இயக்குநர் சீமானை 19.12.2008ல் காலையில் காவல்துறை தளைப் படுத்தியது. அதேநாளில் மேட்டூரில் தோழர் கொளத்தூர் மணியும் இரவு சென்னையில் தோழர் பெ. மணியரசனும் கைது செய்யப்பட்டனர். 19.12.2008 ஈரோடு நீதிமன்றத்தில் கொளத்தூர் மணி, சீமான் இருவரும் நேர் நிறுத்தப்பட்டனர். முன்னதாக அவர்கள் கருங்கல்பாளையம் காவல்நிலையம் கொண்டுவரப்பட்டு நீதிமன்றம் அழைத்துச் செல்லும் வழி நெடுகிறலும் ததேவிஇ, ததேபொக, பெதிக, தஒவிஇ, இகக, மதிமுக, திக, விசி கட்சி, மசிஉக ஆகிய இயக்கத் தோழர்களும் வழக்கறிஞர்களும் ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆத்திரமடைந்த காவல் துறையினர் ததேவிஇ ஈரோடு மாவட்டச் செயலாளர் மு. மோகன்ராசு, ததேபொக நகரச் செயலர் இளங்கோவன், விசயகுமார், தமிழக தொழிலாளர் முன்னணி அமைப்பாளர், ததேவிஇ தோழர்கள் சிவகுமார், சத்தியநாராயணன், ததொமு தோழர் கண்ணன், சாதிஒழிப்புப் பொதுவுடைமை முன்னணித் தோழர்கள், புலிப்பாண்டியன், சதிஸ், பெதிக தோழர்கள் இராசாமணி, தி.க. தோழர்கள் ஜ÷லி, செந்தில்குமார், தவிக தோழர் பழ. சண்முகம், விசிக தோழர் மூர்த்தி, கதிரவன், இளையராசா, ஆதரவுத் தோழர் பாண்டியன் ஆகிய 18 பேரைக் கைது செய்து கோவை நடுவண் சிறையில் அடைத்தனர்.
சிறைப்பட்ட தோழர்களில் தோழர் விசயகுமாருக்கு அவர் சிறையில் இருக்கும் போது ஆண்மகவு பிறந்துள்ளது. அவருக்கு நான்கு நாள் கழித்தே செய்தி தெரிந்துள்ளது. அவர் நிபந்தனைப் பிணையில் வெளிவந்த பின் மகனைப் பார்த்து மகிழ்ச்சி கொண்டார்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|