விடுதலை வேட்கை கொள்!
பாய்மரப் படகுடன் நெகிழி வலையுடன்
பாயும் நீர்அலை நட்புத் துணையுடன்
வாய்மலர் பூத்த கதிரவன் சிரிப்புடன்
வாடா சோலையில் புகுவோம் துடிப்புடன்
தாயும் சேயும் கைகள் ஆட்டிட
தாலி சுமந்தவள் குங்குமப் பொட்டிட
போய்வா என்றே கடற்கரை வாழ்த்திட
போவோம் வெள்ளை வயலில் உழுதிட
எல்லை வகுக்கா நெய்தல் சாலையில்
என்றுமே பூட்டா வளமிகு ஆலையில்
தொல்லையாய் வந்ததே சிங்கள இந்திய
தொழுநோய்ப் படையின் துமுக்கி முனையில்
புல்லாய்ப் புழுவாய் மாந்தனை மிதிக்க
புடலைக் கொடியாய் கழுத்தை முறிக்க
மல்லைச் சிலையாய் நிற்குதே தமிழகம்
மல்லாந்து கிடக்குதே இந்தியக் கழிவிடம்
உவர்நீர் நிலத்தில் உடல்கள் மிதந்திட
உலர்ந்த கீற்றாய் வாழ்வுகள் உலர்ந்திட
சுவர்நிலை போன்றே அரசியல் செய்திடும்
சுரைக்காய்த் தலைகள் இனியும் இருப்பதா
அவர்நிலை எதுவெனத் தெரிந்தும் தமிழின
அழிவுக்கு யார்என என்பதைப் புரிந்தும்
தவநிலை இருக்கும் தமிழனே எழுஎழு
தவற்றைக் களைய இன்றே எழுஎழு.
உலகில் எங்கும் தமிழன் சிரித்திட
உரியவை உடையவை எல்லாம் மீட்டிட
விலகிச் செல்லாக் காற்றாய் கூடிடு
விடுதலைக் கதவினை முற்றாய்த் திறந்திடு
மலரும் திருநாள் நோக்கியே தமிழா
மலரட்டும் உன்றன் சொல்லும் செயலும்
புலரும் பொழுதுகள் நலமாய் அமைய
புரட்சிப் பூவாய் வெடிப்பாய் நாளும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|