தில்லியை உலுக்கிய தோழமைக் குரல்!
இந்திய அரசே!
1. ஈழத் தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இனக் கொலைப் போருக்குத் துணை போகாதே!
2. தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கு!
3. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!
4. கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடு! தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புக்கொடு!
இந்த நான்கு கோரிக்கைகளின் அடிப்படையில் ஈழத் தமிழர் தோழமைக் குரல் சார்பில் தில்லியில் இந்திய நாடாளுமன்றத்தின் முன் பேரணி-மறியல் போராட்டம் நடத்துவதற்காக போராட்டக் குழுவினர் சென்னை, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 15-2-2009 காலை 9 மணியளவில் தில்லி புறப்பட்டனர்.
ஈழத் தமிழர் தோழமைக் குரல் அமைப்பாளர் திரு. பா. செயப் பிரகாசம் தலைமையில் அமைப்புக் குழு உறுப்பினர் தியாகு, கவிஞர் தாமரை, பேராசிரியர் சரசுவதி ஆகியோர் முன்னிலையில் வழியனுப்பு நிகழ்வு நடைபெற்றது.
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் வே. ஆனைமுத்து, திரைக்கலைஞர்கள் மன்சூர் அலிகான், ரமேசு கண்ணா முதலானோர் வாழ்த்திப் பேசி வழியனுப்பி வைத்தனர். கோரிக்கை முழக்கங்களோடு விடைபெற்றுப் புறப்பட்ட போராட்டக் குழுவில் எழுத்தாளர்களும் மாணவர்களும் வழக்கறிஞர்களும் பெண்ணுரிமைப் போராளிகளும் தமிழுணர்வாளர்களுமாக 150 பேர் இடம் பெற்றனர். மேலும் சிலர் தனித்தனியே தில்லி சென்று போராட்டக் குழுவுடன் சேர்ந்து கொண்டனர்.
17-02-2009 காலை 10 மணியளவில் புதுதில்லி "மந்தி அவுஸ்' என்னுமிடத்திலிருந்து புறப்பட்ட பேரணியில் சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், தில்லிப் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும், தில்லிவாழ் தமிழர்களும் தமிழகக் குழுவினருடன் சேர்ந்து கொண்டனர்.
தடையை நீக்கு! தடையை நீக்கு!
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!''
கொல்லாதே! கொல்லாதே!
ஈழத் தமிழரைக் கொல்லாதே!''
இந்திய அரசே!
கொலைகாரச் சிங்களவனுக்கு
ஆயுதம் கொடுக்காதே!
பயிற்சி கொடுக்காதே!
ஆதரவு கொடுக்காதே!''
காந்தி தேசம் கொடுக்குது!
புத்ததேசம் கொல்லுது!''
பதுங்குகுழியில் தமிழனாம்!
குண்டுபோட இந்தியனாம்!''
இந்திய அரசே!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!''
பயங்கரவாதி யாரடா?
ராசபட்சே தானடா!
மன்மோகன் சிங் தானடா!
சோனியா காந்தி தானடா!''
இந்திய அரசே!
தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும்
சிங்கள அரசின் மீது நடவடிக்கை எடு!''
இம்முழக்கங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் எழுப்பியவாறு பேரணி நாடாளுமன்றச் சாலையில் முன்னேறிச் சென்றது. வழிநெடுகிலும் மக்கள் ஆர்வத்துடன் முழக்கங்களை செவிமடுத்தனர். ஆங்கிலத்தில் அச்சிட்ட ஈழத் தமிழர் வரலாறு, ஈழப் போராட்டத்தின் நியாயம், விடுதலைப் போர்க்களப் பணி பற்றிய வெளியீடுகள் மக்களுக்குத் தரப்பட்டன. தீக்குளித்த வீரத்தமிழன் முத்துக்குமாரின் உருவப் படங்களையும், தமிழினப் படுகொலையை வெளிப்படுத்தும் வண்ணப் படங்களையும், மும்மொழிகளிலும் கோரிக்கை முழக்கப் பதாகைகளையும் ஊர்வலத்தினர் எடுத்துச் சென்றனர். பேரணி நாடாளுமன்றத்தை நெருங்குவதற்கு முன்பே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிப்பிப்பாறை இரவிச் சந்திரன், டாக்டர் கிருஷ்ணன், தில்லிப் பல்கலைக் கழக பேராசிரியர் சாய்பாபா ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர்.
இரண்டாவது நாளாக 18.02.09 இல் அதே நான்கு கோரிக்கையை வலியுறுத்தி "மந்தி அவுஸி'லிருந்து நாடாளுமன்றச் சாலை வழியாக "ஜந்தர் மந்தர்' வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் படங்களை உயர்த்திப் பிடித்து எழுச்சியுடன் முழக்கமெழுப்பிச் சென்றனர்.
“Sonia Gandhi!
Kill us!
We are also Tamils!”
''சோனியா காந்தியே!
எங்களையும் கொலை செய்!
நாங்களும் தமிழர்களே!''
என்றெழுதிய பெரிய பதாகை பேரணியின் முன் எடுத்துச் செல்லப்பட்டது. இது தில்லி மக்களிடையே பெரும் பரபரப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தியது.
இந்தியத் தலைநகரில் தமிழீழ ஆதரவுப் போராட்டங்கள் பலமுறை நடந்துள்ள போதிலும், ஈழத் தமிழர் தோழமைக் குரலின் இந்தப் போராட்டத்தில்தான் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!'' என்ற கோரிக்கை முதன்முதலாக எழுப்பப்பட்டது. தலைவர் பிரபாகரனின் படங்களை ஊர்வலத்தினர் உயர்த்திச் சென்றதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத் தக்கது.
மாலை 4 மணியளவில் முடிவுற்ற பேரணியில் அமைப்பாளர் பா. செயப்பிரகாசம், தியாகு, பேராசிரியர் மருதமுத்து ஆகியோர் ஈழப் போராட்டம் குறித்தும் இந்திய அரசின் துரோகம் குறித்தும், கோரிக்கை குறித்தும் விளக்கிப் பேசினர். தில்லியை உலுக்கிய இப்போராட்ட நிகழ்வுகளை முடித்துக் கொண்டு ஈழத் தமிழர் தோழமைக்குரல் தமிழகம் திரும்பியது - அடுத்தடுத்த போராட்டங்களுக்கான திட்டத்தோடும் திட்டவட்டமான உறுதியோடும்!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|