தோழர் சிற்றரசு படுகொலை - கண்டன ஆர்ப்பாட்டம்
அருந்ததிய இளைஞரான சின்ராசு (எ) சிற்றரசு, தன்னுடன் விசைத்தறித் தொழிலாளியாகப் பணியாற்றிய ஆதிக்கக் கவுண்ட சாதிப் பெண் கோமதியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் தமது 3 மாதக் கைக்குழந்தையுடன் ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தனர். ஆதிக்க சாதி வெறியர்களால் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 5.7.2008 அன்று சிற்றரசு வெளியூர் சென்று திரும்பி வரும் போது கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு சாலையில் வீசியெறியப்பட்டார். சிற்றரசுவின் இறுதி ஊர்வலம் நூற்றுக்கணக்கான மக்களின் நியாயமான கொந்தளிப்போடு நடந்தது; தாழ்த்தப்பட்ட இளைஞனின் படுகொலைக்கு இரங்கலோ அனுதாபமோ தெரிவிக்காத அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் சாதி வெறிக் கும்பலான கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை - பெஸ்ட் ராமசாமியின் தலைமையில், தாழ்த்தப்பட்ட மக்களின் இறுதி ஊர்வலத்தால் வன்முறை பெருகிவிட்டதாக சோழனூர் - சாமளாபுரம் பகுதிகளில் ஒருநாள் முழு அடைப்பு நடத்தினர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான தமது ஆதிக்க சாதிவெறிக் கள்ளக் கூட்டை இதன்மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்தினர்.
சிற்றரசுவின் மரணம் படுகொலைதான் என்பதற்கான பல ஆதாரங்கள் இருந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, சாதி ஆதிக்கவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் மீதே அடக்குமுறையை ஏவி விட்டது. ஊர்வலத்தில் கலவரம் விளை வித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் மீது பொய் வழக்குப் புனைந்துள்ளனர். தாழ்த்தப்பட்டோர் மீதான அரசு மற்றும் சாதி ஆதிக்கவாதிகளின் தாக்குதலைக் கண்டித்து 20.07.2008ஆம் நாளில் திருப்பூர் மாநகராட்சி மன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவல்துறையே! தாழ்த்தப்பட்ட இளைஞன் சிற்றரசுவைப் படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்!
ஒடுக்கப்பட்ட மக்களை அச்சுறுத்துவதை உடனே நிறுத்து! பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு! - ஆகிய முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. தோழர் கதிரவன் தலைமை தாங்கினார். தோழர்கள் அ. வள்ளுவரசன் (புஇமு), இரா.வே. செங்கதிர் (புஇமு), ஸ்டீபன் (ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி), ஸ்டாலின் (சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பேரவை), முருகேசன் (புரட்சிகர தொழிலாளர் முன்னணி) ஆகியோர் கண்டன உரையாற்றினர். அமைப்புத் தோழர்களும், சனநாயக ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்றனர்.
செய்தி : க.வே. கதிரவன், பு.இ.மு., திருப்பூர்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|