நம்மைப் போலில்லை நம் கொக்குகள்
புன்னகை சேது
குருதிக் கரைபடிந்த கொலைக்காடாய்
நிறம் மாறிக் கொண்டிருந்தது முல்லைத்தீவு
வழக்கத்தைப் போலவே நேற்று நிகழ்ந்த
ஈராயிர வெடிக் கொத்துக் குண்டில்
சிதறிச் சரிந்தது பெருமரமொன்று
பேரோலம் எழுப்பியபடி
இக்கொடூரத்தில் உருக்குலைந்து போயின
கூடுகளோடு கொக்குகளும்
சிறகு முளைக்காத சில குஞ்சுகளும்
நெடுங்கால மாயைப் போர்த்துறங்கும்
நம்மைப் போல் அல்லாமல்
செய்தியறிந்ததும் கொதித்தெழுந்தன
தமிழக வயல்களில் ஓவியப் புள்ளிகளாய்
நடனமிடும் கொக்குகள் யாவும்
அறப்போர் வீண் என்று...
தில்லி நேசத் தலைவர்கள்பால் நம்பிக்கையற்ற
அக்கொக்குகள் கிளம்பி விட்டன சாரைசாரையாக
துப்பாக்கிக் குழலொத்த தம் அலகுகளில்
குண்டுகளைக் கவ்வியபடி.
கரைபடியாத புரிதலையுடைய
அவ்வெண் கொக்குகள்
குண்டுகள் அனைத்தையும்
பொழிந்து விட்டுத் திரும்பி விட்டன
இந்தியக் கடற்படை மீது...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|