கரசேவையும் அக்ரஹார சேவையும்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் மதவெறியின் கோரத்தாண்டவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரமிது. அன்று குஜராத், இன்று ஒரிசா. லட்சுமணானந்தாவையும் அவருடன் இருந்த சிலரையும் யாரோ சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்பதற்காக, ஒரிசாவில் உள்ள கிறித்துவ மக்களையும், பழங்குடியினரையும் அடித்துச் சூறையாடிக் கொண்டிருக்கிறது ஆணவம் மிக்க இந்துத்துவா கும்பல்.
சாமியார்களைச் சுட்டுக் கொன்றவர்கள் மாவோயிஸ்டுகளாகத்தான் இருக்கக்கூடும் என்று அவர்களே கூறுகின்றனர். அப்படியிருக்க நேரடியாக அவர்களோடு மோதவேண்டியது தானே? அதற்குரிய திறனும் திராணியும் இல்லாத இந்து வெறியர்கள் அப்பாவி மக்களை வேட்டையாடி வேடிக்கை பார்க்கின்றனர். ஒவ்வொரு நாளும் மனிதர்களும் வீடுகளும் எரித்துக் கொளுத்தப்படுகிறார்கள்.
இந்நிலையில் திடீரென்று நம்மூர் ஆரியவாணி ஜெயலலிதா ஆவேசமாக வெளிப்பட்டு ஒரிசா மக்களுக்கு மட்டும் உதவ முன்வரும் பிரதமரே, எங்களின் காஷ்மீரப் பண்டிட்களுக்கு ஏன் கருணை காட்டவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பண்டிட்கள் என்றால் ஏதோ படித்த பண்டிதர்கள் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்தச் சொல்லுக்கு காஷ்மீரப் பார்ப்பனர்கள் என்பதுதான் பொருள். அதனால்தான் ஜெயலலிதா அவ்வளவு கோபப்படுகிறார். “பாதிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் தங்களது குடும்பத்தினருடன் ஜம்மு, தில்லி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் சுகாதாரமற்ற அவல நிலையில் தங்கியுள்ளனர். அவர்களின் மறுவாழ்விற்கு அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும்” என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிகள் முகாம்கள் எல்லாம் எப்படி இருக்கின்றன, அவர்களின் நிலை என்னவாக உள்ளது என்று ஒருநாளும் ஜெயலலிதா கவலைப்படவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று எந்த அரசையும் அவர் கேட்டுக்கொள்ளவில்லை. கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதா எப்போதும் செய்துகொண்டிருப்பது, அக்கிரகார சேவையாகத்தான் இருக்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|