ஐ.நா.மனித உரிமைக் கமிசன் தலைவராக தமிழ்ப் பெண்மணி நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கமிசன் தலைவராக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண் நவநீதம் பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அண்மையில் வெளியிட்டார்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் 1941ஆம் ஆண்டு தமிழ்க் குடும்பத்தில் பிறந்தவர் நவநீதம் பிள்ளை. இவருடைய தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர் ஆவார். மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, தம் இளம் வயதில் தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறிக் கொள்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டார். வாழ்க்கையின் பல தடைகளைத் தாண்டி தென்னாப்பிரிக்காவில் வழக்குரைஞராக தம் சட்டப்பணியை அவர் தொடங்கினார். இனவெறிக்கு எதிராகப் போராடிய ஏராளமானோரை வழக்குகளிலிருந்து விடுவிக்கப் பெரும் பணியாற்றினார். நெல்சன் மண்டேலா உள்ளிட்ட ஏராளமான அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வாதாடினார்.
பின்னாளில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் சட்ட அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றார். 1995ஆம் ஆண்டு ருவாண்டாவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாய நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அத்தீர்ப்பாயத்தின் தலைவராக அவர் பதவி உயர்வு பெற்றார். இந்தப் பதவிக்காலத்தின்போது, போர்முனைகளில் பெண்கள் கற்பழிக்கப்படுவதை ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிராக அளித்த தீர்ப்பு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
பின்னர் 2003ஆம் ஆண்டு திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார். தற்போது வரை அப்பதவியில் அவர் நீடிக்கிறார். இந்நிலையில் 67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கமிசன் தலைவராக நியமிக்கப்படுவதாக அண்மையில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் அறிவித்தார். அவரது நியமனம் குறித்து கருத்துத் தெரிவித்த பான்-கி-மூன் தமது நீண்ட அனுபவம் மூலம் ஐ.நா. பொதுச் சபைக்கும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கும் இடையே மிகச் சிறப்பான ஒருங்கிணைப்பை நவநீதம் பிள்ளை ஏற்படுத்துவார் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
192 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையின் கூட்டத்தில் நவநீதம் பிள்ளையின் நியமனத்துக்கு ஐ.நா. பொதுச் சபை அங்கீகாரம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதவியில் அவர் நான்கு ஆண்டுகள் நீடிப்பார்.
- நன்றி ஜனசக்தி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|