சிதைந்து நொறுங்கும் சிங்களக் கடற்படை
இனியன்
தங்கள் தாய்மண்ணின் விடுதலைக்காகப் போராடும் தமிழீழப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லி, உலகின் பல நாடுகள் புலிகள் அமைப்பைத் தடை செய்து விட்டன. எங்கிருந்தும், எந்தவிதமான ஆயுதமும் போராளிகளுக்குப் போய்ச் சென்றடையாமல், கடல் முழுவதும் தடுப்பணைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிங்கள இராணுவம் மட்டுமின்றி, இந்திய இராணுவமும் ஈழ மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. ஆனால் இத்தனை இன்னல்களுக்கு இடையிலும் போராளிகள் பாடிவரும் போர்ப்பரணி உலக நாடுகளையே வியப்பில் உறைய வைத்திருக்கிறது.
ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பு, திருகோணமலை சீனன்குடாவுக்குள் நின்று கொண்டிருந்த சிங்களக் கப்பல் கடற்புலிகளால் அழிக்கப்பட்டது. பிறகு, வான்புலிகள் திருகோணமலை கப்பல் தளத்தின் மீது தாக்குதல் நடத்தி விட்டு, பத்திரமாக இடம் திரும்பினர். இப்போது சிங்களத்தின் சிறுத்தீவுத் தளம் கடற்புலிகளால் கடுமையானத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது. யாழ் நகரில் உள்ள 512ஆம் பிரிகேட் தளத்திற்கு மிக அருகிலுள்ள பகுதியாகும் இது.
சிறுத்தீவின் தெற்கில் மண்டைத்தீவு உள்ளது. மண்டைத்தீவில் ஒரு பெரும் கடற்படைத் தளத்தை சிறீலங்கா அமைத்துள்ளதை நாம் அறிவோம். சிறுத்தீவைச் சுற்றி முட்கம்பி வேலி போடப்பட்டு, ஈ, எறும்பும் நுழைய முடியாது என்று இறுமாந்து இருந்தது சிங்களம். மேலும் இந்தப் பகுதி தாக்கப்பட்டால், முறியடிப்பதற்காக யாழ்ப்பாணத்தில் ஆட்லெறிகள் நிலைப்படுத்தப்பட்டுள்ளன. பல்குழல் வெடிகணைச் செலுத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.
அனைத்தையும் மீறி, கடற்புலிகள் அங்கு ஊடுருவி நடத்திய தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஒரு வாரத்திற்கு முன்பு (ஆகஸ்ட் மாத இறுதியில்) மல்லாவிப் பகுதியில் நடைபெற்ற போரில், ஏறத்தாழ 70 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது உடல்களைப் புலிகள் ஒப்படைத்துள்ளனர்.
உலகில் எத்தனையோ போராளிக் குழுக்கள் இருந்திருக்கின்றன, இன்றும் இருக்கின்றன. ஆனால் ஈழ மண்ணில் எதிரிகளிடமிருந்தே ஆயுதங்களைப் பறித்து எதிரிகளை வீழ்த்தும் போராளிகளையும் மாவீரர்களையும் உலகம் இப்பொழுதுதான் பார்க்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|