நூல் அறிமுகம்
சாதியை ஒழிக்க அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம்
திருச்சி செல்வேந்திரன்
பெரியார் திராவிடர் கழகம், 68,
பொள்ளாச்சி, கோவை மாவட்டம்
ரூ.100
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்திற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளி அல்லன். -மேற்காணும் வாக்குமூலம், தந்தை பெரியாராலும் அவரோடு இணைந்து சட்டத்தை எதிர்த்துச் சிறை சென்ற ஆயிரக்கணக்கான தோழர்களாலும் 1957ஆம் ஆண்டு நீதிமன்றங்களில் கொடுக்கப்பட்டது. ஆறுமாதங்கள் தொடங்கி மூன்றாண்டுகள் வரையில் தோழர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. மணல் மேடு வெள்ளைச்சாமி, இராமசாமி உள்ளிட்ட ஐவர் சிறையிலேயே மரணமடைந்தனர். தண்டனை முடிந்து வெளிவந்த தோழர்கள் பலரின் குடும்பங்கள் சிதறிப் போயிருந்தன. தமிழக வரலாறு கண்ட மாபெரும் போராட்டமது. ஆயிரக்கணக்கான தியாக வேங்கைகளை அன்று நாடு கண்டது.
வீரஞ்செறிந்த அப்போராட்ட வரலாற்றினை அய்ம்பதாண்டுகளுக்குப் பிறகு, தியாகிகள் பலரின் புகைப்படங்களோடு, ஒரு வரலாற்று ஆவணமாய்ப் பெரியார் திராவிடர் கழகம் வெளிக் கொண்டு வந்துள்ளது.
பொள்ளாச்சி மனோகரன், உடுமலை கருமலையப்பன், பிரகாசு ஆகியோரின் உழைப்பும், திருச்சி செல்வேந்திரனின் எழுத்தும் ஓர் அரிய நூலைத் தமிழ் உலகிற்குத் தந்துள்ளன. இந்தப் போராட்டத்திற்காகவே அன்றைய தமிழக அரசு தனி ஒரு சட்டம் கொண்டுவந்தது. அது குறித்து 1957 நவம்பர் 11ஆம் நாள் சட்ட மன்றத்தில் நடைபெற்ற அனைத்து விவாதங்களும், இந்நூலில் இடம் பெற்றுள்ளன. பெரியாரை விட்டுப் பிரிந்திருந்தாலும், பெரியாருக்காக அன்று அண்ணா நிகழ்த்திய உரை மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. திராவிட இயக்க உணர்வாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய நூல் இது.
தும்பிகள் மரணமுறும் காலம்
இரா. பச்சியப்பன், பொன்னி பதிப்பகம்,
2-1758, சாரதி நகர்,
என்ஃபீல்டு அவென்யூ,
மடிப்பாக்கம், சென்னை-91.
ரூ.60
கவிஞர் பச்சியப்பன் கவிதையிலிருந்து, கட்டுரைத் தளத்திற்கு வந்திருக்கிறார். கவித்து வமும் கூடவே வந்திருக்கிறது. தன் கிராமத்து நாட்களை, பழைய நினைவுகள் மாறாமல், வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக் களாய், நூல் முழுவதும் வாரி வழங்கி இருக்கிறார். இழந்த காலமும், தொலைந்த சுவடுகளும் சோகமானவைதான், ஆனாலும் அவற்றை எண்ணிப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. அந்தச் சுகத்தை இந்த நூலில் எல்லாப் பக்கங்களிலும் காணமுடியும்.
நகரம், தன் ராட்சதக் கரங்களால் கிராமத்தின் காற்றை அள்ளி அள்ளிக் குடிப்பதை மிகவும் வேதனையோடு - பார்ப்பதாகக் கூறும் பச்சியப்பன், (கிராமம்) தனது விழாக்களை, நம்பிக்கைகளை, உணவை, உடையை, பழக்க வழக்கத்தை ஒரு தாழ்வுணர்ச்சியோடுதான் பின்பற்றுகிறது என்று கூறி வருத்தப்படுகிறார். நகரத்தில் உள்ளவர்கள் எல்லாம் அறிவாளிகள் போலவும், கிராமத்து மக்கள் பட்டிக்காட்டுச் சனங்களாகவும் இங்கே எப்போதும் உருவகப் படுத்தப்படுகின்றனர். அந்த மாயையை இந்நூலில் ஆசிரியர் உடைக்க முயல்கிறார்.
இந்நூலில் சொல்லப்படாத இன்னொரு பக்கமும் கிராமங்களுக்கு உண்டு. அந்தப் பக்கத்தை நூலின் பதிப்புரை நமக்குத் தொட்டுக் காட்டு கிறது. சாதியச் சர்வாதிகாரமும், பெண்ணடி மைத்தனமும் நிலவுடைமைச் சமூகத்தின் மிச்சமாய் கிராமங்களில் கூடுதலாய் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
தமிழ்த்தேசியம் என்றோ, தொழிலாளர் வர்க்கம் என்றோ ஒரே அடையாளத்தில் ஒன்றுபடுத்திவிட முடியுமா சாதியச் சமூகங்களை? என்று பதிப்பாளர் எழுப்பி இருக்கும் வினா, நம் நெஞ்சை நெருடவே செய்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|