Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
அக்டோபர் 2008

ஜனநாயகவாதியின் கடமை


மா.மதிஅரசன்

“இவ்வுலகம் இயற்கைக்கு அப்பாற்பட்டது. அது ஒரு சக்தியின் கீழ் இயங்குகிறது. அந்த சக்தியை வழிபடுவதன் மூலமாகவும், பலி கொடுப்பதன் மூலமாகவும், அதை திருப்திப்படுத்தி நமக்கு உதவி புரியச் செய்யலாம். அந்த சக்தியை ஞானத்தால் அறிய முடியாது. பக்தியால் மட்டுமே அறியமுடியும் என்று கற்பித்து அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நம்பிக்கைகளும், நடைமுறைகளும் ஓர் மதமாகும்”. (ஜார் தாம்சன்) மேற்சொன்ன வரையறையின்படி நாட்டார் தெய்வ வழிபாட்டில் ஆடு, மாடு, கோழி முதலானவை பலியிடப்பட்டன. இது ஒடுக்கப்பட்ட மக்களின் வழிபாட்டுப் பழக்கம்.

ஆனால் இந்த ஒடுக்கப்பட்ட மக்களையே மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் பலி இடுவது பார்ப்பனிய இந்து மதத்தின் பழக்கம். மதம் மாறிய உயர் வகுப்பு இந்துக்களைவிட ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களையே பலியிடுவதை பார்ப்பனிய மதம் விரும்புகிறது. ஏன் என்றால், இந்து மதத்தில் அடிமைகளாக இருந்தவர்கள், மதம் மாறிய பின் சமூக நிலையில் பார்ப்பனர்களுக்கு நிகராக மதிக்கப்படுவதை இவர்கள் விரும்பாததுதான்.

ஒரிசாவில் வாழும் பூர்வீகக் குடிகள் பெரும்பாலும், பழங்குடி மக்கள், மலைவாழ் மக்கள். இதில் இந்துக்கள் 80%, முஸ்லீம்கள் 4%, கிருத்துவர்கள் 2.6%, ஜெயின் 2% இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மக்கள் 22 விழுக்காட்டினர் இவர்களில் பெரும்பாலானோருக்குக் கல்வி, சுகாதாரம், அடிப்படை மருத்துவம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் கிடைப்பதில்லை. இவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கின்ற வேலையை இங்குள்ள கிறிஸ்துவ மெசினரிகள் செய்தனர். அதன் நன்றிக்கடனாக இங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்கள் தங்களைக் கிறித்துவ மதத்தில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வு ஒரிசாவில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுமையிலும் உள்ள சிறுபான்மை மக்கள் கிறித்துவர்கள், இசுலாமியர்கள் இந்த நாட்டின் உண்மையான பூர்வீகக் குடிகள். இந்து மதத்தில் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும், அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள், மதம் மாறிய பிறகு தங்களுக்குச் சமமான நிலையிலும், கல்வி, பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடைவதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி சேர்ந்தவர்கள், பழங்குடி மக்களுக்குச் சேவை செய்த ஆஸ்திரேலிய மருத்துவர் கிரகாம் ஸ்டேயின்ஸ், அவரது
இரு மகன்களான பிலிப், கிமோத்தி மூவரையும் உயிரோடு எரித்துக் கொலை செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஒரிசாவில் இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும் இடையே சிறு சிறு கலவரங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த 23.08.2008 அன்று இலட்சுமானந்தா சரஸ்வதி சுவாமிகளும் மற்றும் அவருடன் இருந்த நான்கு சீடர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளுக்கு மாவோயிஸ்ட்டுகள் பொறுப்பேற்றுள்ள நிலையிலும், பார்ப்பனத் தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் யாரோ சிலர் அடையாளம் தெரியாதவர்கள் சுட்டுவிட்டனர், அவர்கள் கிறித்துவர்களாகவும் இருக்கலாம் என்று செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தன.

இதன் விளைவாக ஒரிசாவில் கந்தமால், புவனேஸ்வர் மாவட்டங்களில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள், கிறித்துவர்களின் வீடுகள் தாக்கப்பட்டன. இவை மட்டுமல்ல கிறித்துவர்களைத் தேடித் தேடித் துரத்திச் சென்று இந்து மத கும்பல் தாக்கியது மட்டுமல்லாமல், கொலையும் செய்தது. இதில் 40 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். 62 தேவாலயங்கள் தீக்கிரையாயின. 10,000த்திற்கு மேற்பட்ட வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
குசராத்தில் முஸ்லீம்களுக்குப் பாடம் கற்பித்தோம், ஒரிசாவில் கிறித்துவர்களுக்குப் பாடம் கற்பிப்போம் என்று சொல்லியே சங்பரிவாரங்கள் கலவரம் செய்கின்றன. ஒரிசா மாநில அரசு அவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கர்நாடகாவிலும் சிறுபான்மை மக்கள் மீதும் அவர்கள் வழிபாட்டுத் தலங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. கிறித்துவர்களின் வழிபாட்டுக் கூடத்தை இடித்தது நான்தான் என்று கர்நாடக மாநில பஜ்ரங்தள் தலைவர் மகேந்திரகுமார் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த மாநில அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 3.9.08 அன்று பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பேசும்போது.

சிறுபான்மையினருக்கும் அவர்கள் வழிப்பாட்டுத் தளங்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று ஒரிசா மற்றும் கர்நாடக அரசுகளை அரசியல் சட்டத்தின் 355வது பிரிவின் கீழ் மத்திய அரசு எச்சரித்தது. அதன் பிறகு கலவரம் தொடர்ந்தால் மாநிலத்தின் நிலைமை பற்றி அறிக்கை அனுப்புமாறு ஆளுநர் பண்டாரியிடம் மத்திய உள்துறை அமைச்சர் கேட்டுள்ளார். சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்கி மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று ஒரிசா, கர்நாடக அரசுகளைப் பட்டீல் எச்சரித்தார்.

ஒரிசா, கர்நாடகா மட்டுமல்லாது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவிலும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக சிறுசிறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் மதக்கலவரங்களைத் தடுப்பது பற்றி விவாதிக்க பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி விவாதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.இந்தியாவில் முதல்வர்கள் மாநாட்டை மட்டும்தான் கூட்டமுடியும். மதக் கலவரத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த நாட்டின் அதிகார அமைப்புகள் இந்துமத வெறிக்கு ஆதரவாக இயங்கும்போது இதுபோன்ற மத பயங்கரவாத செயல்களை யாரும் ஒழித்துவிட முடியாது.

பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பை எதிர்த்து ஒரிசா பழங்குடி மக்களின் போராட்டத்தை இந்து மதவாதக் கும்பல் மத பிரச்சனையாகத் திசை திருப்பிவிட்டது. சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் போது அவர்கள் தங்கள் தொப்புள் கொடி - உறவு என்பதை மறந்துவிட்டு மௌனம் காப்பது என்பது தனக்குத்தானே சவக்குழித் தோண்டிக் கொள்வதற்கு ஒப்பாகும். எனவே சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் போது அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, அவர்களைக் காப்பது ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கடமையாகும்.




நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com