நியாயந்தானா தோழர்களே?
ஈழத்தமிழர் துயர் துடைக்க, அக்-2 அன்று, சென்னை மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் பட்டினி அறப்போர் நடத்திய இந்தியப் பொவுடமைக் கட்சிக்கு நம் நெஞ்சார்ந்த பாராட்டுகள்! அன்றாடம் தமிழீழ மக்களைக் குண்டு வீசிக் கொன்றுவரும், ராஜபக்சேயின் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்தும் அவ்வரசுக்கு இராணுவ உதவிகளைச் செய்து வரும் இந்திய அரசைக் கண்டித்தும், உரிய நேரத்தில் நடத்தப்பட்டுள்ள போராட்டம் அது.
“சர்வதேசப் போர் நெறிகளுக்கு உட்பட்டு, செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மூலமாகக் கூட மருந்து, உணவுப் பொருள்கள வழங்க அனுமதிக்காமல், மனித நேயமற்ற வகையில் இலங்கை அரசு செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார் டி.ராஜா. நியாயமான குற்றச்சாட்டு. மேலும் அவர் பேசுகையில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையையும் இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். நியாயமான கோரிக்கைகள்!
ஆனால், பட்டினி அறப்போராட்டப் பந்தலில் உரையாற்றிய தா.பாண்டியன், வைகோ, பண்ருட்டி போன்றோர் நியாயமாக உரையாற்றவில்லை. மற்றவர்களைக் கூட விட்டு விடலாம். ஏற்பாடு செய்து நடத்தும் கட்சியின் மாநிலத் தலைவரான தோழர் தா.பாண்டியனாது, பொது மேடையில் கட்சி அரசியல் பேசக்கூடாது என்னும் நாகரிகத்தைப் பின்பற்றியிருக்க வேண்டும். கலைஞரைத் தாக்குவதே தன் குறிக்கோள் என்பது போலத் தா.பா. பேசியுள்ளார்.
என்ன செய்வது? எம்.கல்யாணசுந்தரத்தின் சீடரான அவர், எப்போதும் கலைஞரின் மீது மாறாத வெறுப்புக் கொண்டவர். அன்று அவருடைய பேச்சில், ஈழத்தமிழர் ஆதரவு என்பதைக் காட்டிலும், ஜெயலலிதாவின் மனத்தைக் குளிர்வித்து விட வேண்டும் என்ற முனைப்புதான் கூடுதலாகத் தெரிந்தது. எவ்வளவுக்கெவ்வளவு கலைஞரைச் சாடுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு போயஸ் தோட்டக் கதவுகள் திறந்து வழிவிடும் என்பது தா.பா.வுக்கு நன்றாகவே தெரியும்.
‘கலைஞரின் நீண்ட.... நெடிய தமிழ்’ என்றெல்லாம் கேலி பேசியிருக்கின்றார். ஜெயலலிதாவைப் பற்றிப் பேசுகின்ற போது மட்டும் அவ்வளவு பவ்யம், பணிவு! கலைஞருக்கு ஏன் அழைப்பு இல்லை என்று கேட்டால், ‘தீயணைக்க வாருங்கள்’ என்று அழைக்க வேண்டுமா என்கிறார். யாரையுமே அழைக்கவில்லை என்றால், இந்தக் கேள்வியே எழுந்திருக்காது. எல்லாக் கட்சியினரையும் அழைத்து விட்டு, தி.மு.க. மட்டும் தானாக ஓடிவர வேண்டும் என்பது சரிதானா?
ஈழத்தமிழர் ஆதரவாளர்களை, விரட்டி விரட்டி வேட்டையாடிப் ‘பொடா’வில் அடைத்த ஜெயலலிதாவிற்கு அழைப்பதும், 1956 முதல் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கலைஞரைப் புறக்கணிப்பதும்-
நியாயந்தானா தோழர்களே?
இந்நிலையில், அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் தாய்த்தமிழக மக்கள் வீறுகொண்டு எழுந்துள்ளனர். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எல்லாக் கட்சிகளும் ஈழ மக்களுக்குத் தங்கள் பேராதரவைத் தெரிவித்துள்ளன.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|