Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Karunchattai Thamizhar
Karunchattai Thamizhar Logo
மே 2009

சொந்த மண்ணையும், மக்களையும் நம்பும் ஈழப் போராட்டம்
சுப. வீரபாண்டியன் உரை

ஈழத்தில் தமிழ் மக்கள் மீது மிகக் கொடுமையாகத் தாக்குதல் நடத்தியும், கொத்துக் குண்டுகள் வீசியும், தினமும் தமிழர்களைப் படுகொலை செய்து வருகிறது இலங்கை இராணுவம். இந்த வன்முறைத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கருநாடக மாநிலம், தங்கவயலில் ஒரு மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தைத் தமிழர் முன்னேற்ற முன்னணி நடத்தியது. இப்பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் ஆற்றிய உரை வருமாறு :

இலங்கையில் கொல்லப்படுகின்ற அப்பாவித் தமிழர்கள் அங்கே பிழைக்கப் போனவர்கள் அல்ல, அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு அது சொந்த மண்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போரை நடத்துவது சிங்கள இராணுவம் மட்டுமல்ல, இந்தியாவின் ராடார்களும், போர்த் தளவாடங்களும், இஸ்ரேலின் பீரங்கிகளும், சீனாவின் டாங்குகளும், பாகிஸ்தானின் போர்த்

தளவாடங்களும் தான். இந்த நான்கு பெரிய நாடுகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருப்பது உலகிலேயே தமிழினம் ஒன்று மட்டும்தான்.

ராஜபக்சே அரசு செஞ்சிலுவைச் சங்கத்தை வெளியேற்றி விட்டது. காரணம் செஞ்சிலுவைச் சங்கம் அதிகமாகச் சவப் பைகளைக் கேட்கிறது.

மாதந்தோறும் 2500 முதல் 3000 பேர்களைக் கொன்று குவிப்பது உலகத்திற்குத் தெரிந்து விடுகிறதே என்ற காரணத்தால் செஞ்சிலுவைச் சங்கத்தை ராஜபக்சே வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சங்க இலக்கியத்தில், பட்டினப் பாலையில் தமிழகத்திற்கே ஈழத்தில் இருந்துதான் உணவுப் பொருள்கள் இறக்குமதி செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆகவே ஈழத்தமிழன் நம்மிடமிருந்து உணவுகளையோ மற்ற உதவிகளையோ கேட்கவில்லை. ஆதரவைக் கேட்கிறான். 11 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் திலீபன் என்ற தியாகச் செம்மல் உயிர்விட்டான். தமிழன் உணவைப் பெரிதாக நினைப்பவனில்லை, உரிமையைப் பெரிதாக நினைக்கிறான்.

கலைஞர் அரசும், இந்திய அரசும் அனுப்பிவைத்த உணவுப் பொருட்கள் மற்றும் உதவிகளைச் சிங்கள அரசு கைப்பற்றிக் கொண்டுவிட்டது. தமிழர்களுக்கு வழங்கவில்லை.பிறகு கலைஞர் அவர்களின் முயற்சியால் ஓரளவு சென்றடைந்தது.

இலங்கை ராணுவத்தால் போடப்படும் குண்டுகள் ஒரு டன் எடை கொண்டது. குண்டு விழுந்த இடம் இருநூறு அடி ஆழம் வரை பாய்ந்து பள்ளத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இப்படிப்பட்ட தாக்குதலில்தான் நம் தமிழ்ச் செல்வன் வீரமரணம் அடைந்தார்.

நம் இனம் அங்கு பசியால், பூச்சிக்கடியால், பதுங்கு குழிகளில் ரத்தம் சொட்டச் சொட்ட, கை கால்களை இழந்து, மருத்துவ உதவிகள் இன்றி மாய்ந்து போகும் அவலத்தை யார் கேட்பது ?

மயிலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இலங்கையில் 43 சதவீத ஈழ மக்கள் மட்டுமே பிரபாகரனைத் தலைவராக ஏற்றுள்ளனர் என்று சிவகங்கைத் தமிழர் ப.சிதம்பரம் பேசுகிறார்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் வாக்கு எடுப்பு நடத்தினால் 90 சதவீத மக்கள் ஈழ விடுதலை வேண்டும் என்பார்கள். கடந்த 2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் வெறும் 26 சதவீதம் மட்டும்தானே !

இலங்கையின் உள் விவகாரத்தில் தலையிட்டால் அந்த நாடடினுடைய இறையாண்மைக்குள் தலையிடுவதாகச் சொல்கிறார்கள். இந்தியா அன்று முதல் நேற்று வரை அந்த நாட்டினுடைய உள் விவகாரத்தில் தலையிட்டிருக்கிறது என்பதற்கு இதோ சான்றுகள் ...

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உலகில் எங்கெல்லாம் ஓரினம் விடுதலைக்காகப் போராடுகிறதோ அங்கெல்லாம் இந்தியா தன் ஆதரவை அளிக்கும் என்று நேரு கூறினார். இந்திரா காந்தி, பாகிஸ்தானைப் பிரித்து வங்கத்திற்கு வாழ்வளித்தார். விடுதலைப் புலிகளுக்குத் தமிழகத்தில் பயிற்சி அளித்து பேருதவிகளையும் செய்தார்.

பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கொளத்தூர் மணி மீது மேட்டூர் கோர்ட்டிலே புலிகள் பயிற்சி பெற நிலம் கொடுத்ததாக வழக்கு, எம்.ஜி. ஆர் அவர்களும், இந்திராகாந்தியும் கேட்டுக்கொண்டதினால் நான் நிலத்தைக் கொடுத்தேன் என்று மணி கூறினார். பிறகு வழக்கு என்னவாயிற்று ? இன்றிருக்கும் காங்கிரஸ்காரர்கள் ராஜீவ்காந்தி கொலையை மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம் என்கிறார்கள், ராஜீவ் கொலையானபோது காங்கிரஸ்காரர்கள் எங்கு இருந்தார்கள் ? காங்கிரஸ் தலைவர் ஒரு கூட்டத்திற்கு வரும்போது, அவர் அருகில் ஒரு காங்கிரஸ்காரர் கூட இல்லையே, ஏன் ?

இந்திராகாந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ்காந்தியின் அணுகுமுறைகள் இலங்கை அரசுக்குச் சாதகமாகவே இருந்து வந்தன. 1987 இல் அமைதிப்படையை ராஜீவ்காந்தி இலங்கைக்கு அனுப்பி வைத்தார். அமைதிப்படை நம் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியது உலகறிந்த உண்மை.

குட்டிமணி, ஜெகன், தங்கதுரை ஆகியோரின் கண்களைத் தோண்டிச் சாகடித்த கொடுமைக்குப் பின்னர்தான் அங்கே விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள். இதற்கு இந்தியாதான் அனைத்துவிதமான முயற்சிகளையும், உதவிகளையும் செய்தது.

ஆனால் எவரையும் நம்பாமல், எந்த நாட்டின் உதவிகளையும் நம்பாமல் தன் சொந்த மண்ணையும் மக்களையும் நம்பி ஆயுதம் எடுத்துப் போராடி வருகிறார்கள் போராளிகள். அவர்களுக்குத் தேவையானது ஒன்றே ஒன்றுதான். அது நம்முடைய ஆதரவுக் குரல் மட்டுமேதான்.

ஈழம் கட்டாயம் மலரும், அது வெகுநாள் அல்ல விரைவில் மலரும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com