எப்போது கண் திறக்கும் இந்திய அரசு ?
க. மயில்வாகனன்
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் எத்தனை இடங்களில் நாம் வெற்றிபெறுவோம் எனக் கூட்டல் கழித்தல் கணக்கில் இருக்கின்றன. நமது அண்டைநாடான இலங்கையில், சிங்கள அரசு தமிழகத்தில் அரசியல் கட்சி, தொண்டர்கள், தலைவர்கள், தேர்தலில் கவனம் செலுத்தும் போது, தமிழினத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என முடிவு செய்து தினமும் ஆயிரக் கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்வு தமிழகத்தில் பெரிய பாதிப்பையும், கொந்தளிப்பான சூழலையம் ஏற்படுத்தவில்லை. இதற்கு என்ன காரணம் ? ஆராய்ந்தால், நமக்கு ஒன்று விளங்குகிறது.
நம்முடைய எதிரி யார் என்பதை நாம் தொடர்ந்து அடையாளப்படுத்த மறந்துவிட்டோம். ஆனால் எதிரி மறக்கவில்லை. இதன் விளைவு நம்முடைய இனம் ஈழத்தில் அழிக்கப்படும்போது சாதி, மதம், அரசியல் கட்சிகளைத் தாண்டி... தமிழன் என்ற அடிப்படையில் நம்மால் ஒன்று சேரமுடியவில்லை. நம்முடைய எதிரி பார்ப்பனர்கள். இன்றைக்கு இவ்வளவு உயிர் இழப்புக்குப் பிறகும், முன்னாள் பிரதமரை முன்னிறுத்தி ஒர் இனத்தையே அழிக்க அவர்களால் முடிகிறது.
நம்மால் ஒன்று சேரக்கூட இயலவில்லை.
தமிழர்களாகிய நாம் எப்போதும் நம்முடைய பிரச்சினைக்கு மற்றவர்களைக் காரணம் சொல்லிப் பிரச்சினையின் உண்மைத் தன்மையை ஆராயாமல் அதில் இருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம். இதன் விளைவு நம்மால் எந்த ஒரு பொது விசயங்களுக்கும் ஒன்று சேரமுடியவில்லை.
அரசியல் இயக்கங்கள் எப்போதும் தன் எழுச்சியாக எந்த ஒரு மக்கள் பிரச்சினையையும் அணுகித் தீர்த்ததாக வரலாறு இல்லை. 1950 ஆம் ஆண்டு பெரியார் தலைமையில் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாகச் சுதந்திர இந்தியாவில் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, முதல் சட்டத் திருத்தத்தை நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு மேற்கொண்டது. அப்போது பேசிய பிரதமர் நேரு குறிப்பிட்டார்,
“ தமிழக மக்களின் எழுச்சியே சட்டத் திருத்தத்திற்குக் காரணம் ” என்றார்.
பெரியாரைப் போன்று இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சி அல்லாத அமைப்புகள் வலுவாக இல்லை. இதனால் ஈழப்பிரச்சினை அரசியல் கட்சிகளின் போராட்டங்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. ஈழப் போராட்டம் மக்கள் போராட்டமாக எழாமல், அரசியல் கட்சிகளின் போராட்டமாகவே எழுந்துள்ளது. இந்த நிலையில், முத்துக்குமாரின் மரணம் ஈழப்போராட்டத்தை மக்கள் தளத்திற்கு நகர்த்தியது.
தமிழ்த்தேசியம் பேசக்கூடிய அமைப்புகளும், தமிழ்த் தேசியம் பேசக்கூடிய அரசியல் கட்சிகளும், சரியாக இந்தக் கொதிநிலை உணர்வை தமிழரின் எதிரியின் பக்கம் திருப்பாமலும், தமிழர்களை ஓர் அணியில் திரட்டாமலும், தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாகத் தமிழக ஆளுங்கட்சிக்கு எதிராகத் திருப்பி விட்டதன் விளைவு ஈழப்பிரச்சினை என்பது வெறும் அரசியல் சிக்கலாகிவிட்டது.
உண்மையில் ஆளும் கட்சியின் அதிகாரம் ஓர் எல்லைக்கு உட்பட்டது.
எதிர்க்கட்சிகள், ஈழ ஆதரவுக் கட்சிகள், இயக்கங்கள் என இவைகள் இணைந்து குஜார் இனமக்கள் போராட்டம் போலவும், சீக்கியர்களின் போராட்டங்களைப் போலவும், ஏன் இவ்வளவு தூரம் போக வேண்டும். பா.ம. க தன் சாதி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியது போலவும் ஈழப்பிரச்சினையில் போராட முன்வரவில்லை அல்லது ஈழஆதரவு சக்திகளைத் திரட்டிப் போராடவில்லை ... அவர்களுக்கு ஈழப்பிரச்சினை என்பது கருணாநிதி ஈழத்தமிழர்களைக் கை கழுவிவிட்டார் ; அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் ; தமிழனத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டார் என்று முதல்வரைக் குறை சொல்வதோடு சரி...
இதையேதான் ஜெயலலிதா சொல்கிறார். இதுமட்டுமல்ல விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்யப் பரிந்துரை செய்து, அதில் தான் வெற்றிபெற்றதாகச் சொல்லி இன்றுவரை தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் ஜெயலலிதா. அவர் தன் இனத்திற்கு உண்மையாக இருக்கிறார். புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கூறும் ம.தி.மு.க ....தடை செய்தவர்கள் தலைமையில்தான் ஈழப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரமுடியும் என்று பிரச்சாரம் செய்கிறது. ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருக்கிறார் வை. கோ.
புலிகள் இயக்கத்தைத் தடை செய்தவர், இன விடுதலைக்காகப் போராடும் இயக்கத்தைத் தீவிரவாத இயக்கம் என்று சொன்னவர், புலிகள் இயக்கத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டவர். இன்று ஈழ விடுதலை குறித்தும், தனி ஈழம் குறித்தும் பேசுகிறார்.
இந்திய கம்யூனிஸ்ட்களான வலது, இடதுசாரிகள் ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரையில்... போரை முன்நின்று நடத்துவது இந்தியாதான். இந்தியா போரை நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு அரசியல் தீர்வு காணவேண்டும் என்கின்றனர்.
தமிழர்களின் நிலையை, மெக்சிகோ கொண்டுவந்த தீர்மான அடிப்படையில், ஐ.நா. வின் பாதுகாப்பு கவுன்சலில் விவாதிக்க, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் விரும்புகின்றன. ஆனால் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாதுகாப்பு கவுன்சலில் விவாதம் நடைறொமல் தடுத்து வருகிறது.
இலங்கையில் போராடும் பயங்கரவாதிகளைத்தான் இலங்கை அரசு ஒடுக்குகிறது. இது இலங்கை அரசின் உள்விவகாரம். இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் விவாதிக்க ஏதும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது சர்வதேச அளவில் பெரிய அரசியல் சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கப் போவது இல்லை. எனவே இப்பிரச்சினை குறித்து நாம் விவாதித்து நம்முடைய நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று சீனா வலியுறுத்தி வருகிறது.
அதே நேரத்தில், பின்புலத்தில் நின்று பெரிய அளவில் உதவும் சீனாவின் பங்களிப்புப் பற்றி அவர்கள் பேசுவதே இல்லை.
1939 இல் இலங்கை சென்ற நேரு, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது,
இந்தியா விரைவில் சுதந்திரம் அடைந்துவிடும். இதனைத் தொடர்ந்து சுதந்திரம் பெறக்கூடிய இலங்கை போன்ற அண்டை நாடுகள் தங்களுடைய வெளியுறவுக் கொள்கை, இந்தியாவுடன் இணக்கமானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
நேரு பிரதமர் ஆனபிறகு...
இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை ஒரு முக்கிய இடமாக உள்ளது. அந்த நாடு எந்தப் பக்கம் சேர்ந்தாலும் நடுநிலை வகித்தாலும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது அச்சுறுத்தலாகத்தான் இருக்கும் என்றார்
சுதந்திரம் பெற்ற நாள் முதலாய் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவைப் பின்பற்றிய இலங்கை, 1983 இல் ஜயவர்தனே காலத்தில் தடம்புரண்டபோது இந்தியா தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியது.
இந்திய உணர்வுகளை மதிக்காமல் அமெரிக்காவின் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஒலிபரப்பு நிறுவனம் அமைக்கப் புத்தளம் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் தென்னைத் தோட்டத்தை ஜயவர்தனே கொடுத்தார்.
இந்தியாவை உளவு பார்க்கவும், இந்தியாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்யவும் இந்த நிலையத்தை அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா கூறியதை ஜயவர்தனே சட்டை செய்யவில்லை.
திரிகோணமலைத் துறைமுகம் இந்தியா வின் புவிசார் அரசியல் நலன்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இங்குள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குப் பகுதியை அமெரிக்கா கேட்டது, அதை அமெரிக்கா வுக்குத் தரவேண்டாம் என்று இந்திய அரசு கூறியும் அதை அலட்சியம் செய்துவிட்டு, அமெரிக்காவின் ஏஜெண்டான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு ஜயவர்தனே குத்தகைக்குக் கொடுத்தார். அதே நேரத்தில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை நடத்தியது இலங்கை அரசு. இதே ஆண்டு சைப்ரசில் நடந்த அணிசாரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பேசிய இந்திரா காந்தி அவர்கள், இலங்கையில் தமிழ் மக்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை, இந்தத் தமிழர்கள்
யார் ? இந்திய வம்சாவழியினர். அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் உதவிக்கு வரவேண்டிய பெரும் பொறுப்பு இந்தியாவுக்கு உண்டு. அப்பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது என்று பிரகடனம் செய்தார், இதையே டெல்லி திரும்பியதும் பல நாடுகளுக்கும் தனது தனித்தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்பினார்.
இலங்கை உள்விவகாரங்களில் தலையிட எங்களுக்கு உரிமையுண்டு. அப்படித் தலையிட நேர்ந்தால் யாரும் கண்டுகொள்ளக் கூடாது என்பது இந்திரா காந்தி தூதுவர்கள் மூலம் அனுப்பிய எச்சரிக்கையாகும்.
இலங்கை இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டது. அது இந்தியப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. எனவே தனி ஈழம் மலர்வதை இந்திரா அவர்கள் விரும்பினார்கள். அப்படி ஈழம் தனி நாடாக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு நேச நாடாக அமையும். இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. எனவே தனி ஈழம் உருவாக இந்தியா துணைநிற்கும் என இந்திரா அறிவித்தார்.
அன்று ஜயவர்தனே அரசு போலவே இன்று ராஜபக்சே அரசு ஹம்பாந் தோட்டத் துறைமுகத்தைச் சீனாவிடம் கொடுத்துவிட்டது. இன்னும் சில மாதங்களில் இந்தத் துறைமுகத்தைச் சீனா தனது முழுக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்போகிறது.
இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும், இதை எல்லாம் புரிந்து கொள்ளாத இந்திய அரசு ராஜீவ்காந்தி காலம் தொடங்கி ஈழப்பிரச்சினை இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை என்று சொல்லி இன்னும் கண்களை மூடிக்கொண்டுள்ளது. எப்போது கண் திறக்கும் இந்திய அரசு ?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|