ஈழமும் ஜெயலலிதாவும் !
தாழ்த்தப்பட்டவனைக் கண்டாலே தீட்டு என்பார் சங்கராச்சாரி. அவர்கள் வீட்டில் போய் உணவு உண்பார் ராஜாஜி. இருவரையும் பார்ப்பனீயம் ஏற்றுக்கொள்ளும் என்பது தந்தை பெரியாரின் கூற்று.
புலிகளோடு சேர்ந்தும் விரட்டுவார்கள், மான்களோடு சேரந்தும் ஓடுவார்கள். அவர்கள்தான் பார்ப்பனர்கள்.
மேற்காணும் கூற்றுகளுக்கு அக்மார்க் எடுத்துக்காட்டாய் இன்று விளங்குகிறார் ஜெயலலிதா.
ஈழம் குறித்து நேற்று வரை அவர் பேசிய பேச்சுகளும், தேர்தல் மேடைகளில் இன்று அவர் எழுப்பும் முழக்கங்களும், முட்டாள்களால் கூடப் புரிந்து கொள்ளக் கூடிய முரண்பாடுகள்.
நெடுந்தூரம் பின்னால் போக வேண்டியதில்லை. 2008 அக்டோபர் 16 ஆம் நாளிட்ட, அ.தி.மு.க. வின் அதிகாரபூர்வ ஏடான நமது எம்.ஜி.ஆர் இதழைப் படித்தாலே உண்மை சட்டென்று விளங்கும்.
இலங்கை என்பது இன்னொரு நாடு. அதன் உள்நாட்டுப் பிரச்சினைகளில் நாம் தலையிட முடியாது என்பது, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்குத் தெரியாதா என்று ஜெயலலிதா கேட்கிறார்.
போரை நிறுத்த வேண்டும் என்பதன் மூலம் கருணாநிதி, விடுதலைப் புலிகளின் அமைப்பைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் கூறுகிறார்.
போரை நிறுத்த வேண்டும் என்று கலைஞர் சொன்னால், அது புலிகளைக் காப்பாற்றுவது. அதையே இவர் சொன்னால், ஈழ மக்களைக் காப்பாற்றுவது என்பதெல்லாம் எவ்வளவு பெரிய புரட்டு வாதம்.
நமது எம்.ஜி.ஆர். இதழில், 18. 01. 2009 அன்று வெளிவந்துள்ள ஜெயலலிதாவின் பேட்டியில், இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும்அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள் என்று ஈவு இரக்கமற்றுக் கூறியுள்ளார்.
இன்று அதே மக்களுக்காகத் தான் நெஞ்சுருகி நெகிழ்ந்து போவதாகவும், உடனே அங்கு போரை நிறுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
ஈழம் என்று ஒரு நாடே இல்லை. இலங்கைதான் உள்ளது. எனவே, ஈழம் என்று சொல்வதே தவறு. நம் நேச நாடான இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயலை என்னால் ஏற்க முடியாது என்ற ஜெயலலிதா, இப்போது தனி ஈழம் அமைய நான் பாடுபடுவேன் என்கிறார்.
இப்படியயல்லாம் அவர் மாற்றி மாற்றிப் பேசுவது பெரிய வியப்பில்லை. அதுதான் அவருடைய இயல்பு. ஆனால், அவருடைய பேச்சுகள் எல்லாவற்றையும் நம்புவதற்கும், அவருக்கு வாக்களிப்பதற்கும் தமிழின உணர்வாளர்களில் ஒரு பகுதியினரும், பெரியாரியக் கொள்கையினர் சிலரும் தயாராகி விட்டார்களே, அதுதான் நமக்கு வியப்பாக இருக்கிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|